Sunday 21 September 2014

அறிவிப்பாளர்களின் அஷ்டவதானி நாகபூஷணி

       


            அறிவிப்புத் துறையின் அஷ்டவதானி கவிதாயினி நாகபூஷணி அவர்கள் தான் இவரை இப்படிதான் சொல்ல வேண்டும் சிலருக்கு கவிதை எழுத தெரியும் ஆனால் பாட தெரியாது சிலருக்கு பாடத் தெரியும் ஆனால் ஆடத் தெரியாது. சிலருக்கு கதை, கட்டுரை எழுது தெரியும் ஆனால் அதை வாசிக்கத் தெரியாது.
                                     


             ஆனால், இவருக்கு கவிதை,கதை, கட்டுரை, ஆடல், பாடல் எல்லாமே கை வந்த கலை அப்ப இவர் அஷ்டவதானி தானே..! சரஸ்வதி இவர் நாக்கிலே தாண்டவம் ஆடுகிறாள் அடக்கமும் அழகு இவரிடத்தில் குடிக் கொண்டிருக்கிறது. இவர் அறிவிப்பாளராக வரவில்லை எனில் ஒரு பாடகியாக வர வேண்டியவர் இலங்கை வானொலி இந்த இலக்கிய குயிலை தன்னக்கத்தே தக்க வைத்துக்கொண்டது.


           இவர் நாவல்நகர் கதிரேஷன் கல்லூரயில் உயர்தரம் வரை கற்று யாழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்று கொழும்பு பல்கழகத்தில் இதழியலில் டிப்ளோமாவையும் முடித்துவிட்டு தற்போது இலங்கை வானொலி தென்றலில் நிரந்தர அறிவிப்பாளராகவும், 2000 -ல்  வசந்தம் தொலைக்காட்சியில் "தூவானம்" நிகழ்ச்சியும் மற்றும் 2013 -ல் இருந்து முகமூடி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.




           இவர் 1995 - ல் ஆரம்ப காலத்தில் இலங்கை வானொலி கண்டிச் சேவையில் அறிவிப்பாளராகவும் கல்விச் சேவையில் தயாரிப்பாளராகவும் அதே வேளை சுயாதீன தொலைக்காட்சி மற்றும் ரூபவாஹினியில் செய்தி வாசிப்பாளராகவும் மேலும் பல விளம்பரங்களில் தோன்றியுள்ளார் பல மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். கையடக்கத்தொலைபேசி இணைப்பில் டயலொக் செய்தியும் சொல்லியிருக்கிறார். தன் திறமையால் தன்னை வளர்த்து கொண்டு இன்று சிகரத்தை தொட்டு நிற்கிறார்.


          அது மட்டுமல்ல இவர் ஆரம்பத்தில் ஒரு நேயராக இருந்து கதை, கவிதை, கட்டுரை என ஆரம்பித்து அதன் தொகுப்பாக "நெற்றிக்கண்" என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். மேலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார் சிறந்த அறிவிப்பாளருக்கான விருது, சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது, மலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.


          இவர் அன்பானவர், அடக்கமானவர், அழகானவர், பண்பானவர், எளிமையானவர் இத்தனை திறமைகள் இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவர் தற்பெருமை இவரிடத்தில் இல்லாததினால் தான் பல விருதுகள் இவரைத் தேடி வருகிறது. இவரின் குரலைக் கேட்டால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். வார்த்தை வித்தகி கேட்பவரை மதிமயக்கச் செய்யும் இவரது குரல்.


           இவரைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அத்தனை விஷயங்கள் இருக்கிறது அதற்கு இந்த பக்கமே போதாது. இத்தனை திறமைகள் இருந்து இன்னும் இவர் சிறு குழந்தைதான் விஷயங்களை கற்றுக் கொள்வதில்.


            தென்னிந்தியாவில் இவர் மனம் கவர்ந்த எத்தனையோ நேயர்கள் இருக்கிறார்கள் அதில் நானும் ஒருவர். ஒரு நேரத்தில் இவரது புகைப்படத்தை வலைதளத்தில் தேடி ஏமாந்த நேயர்கள் எத்தனையோ பேர் அவர்களுக்காகவும், என் மனம் கவர்ந்த அறிவிப்பாளருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை பதிவிடுகிறேன். அவருக்கு பாராட்டி பட்டம் கொடுக்க நான் புலவியும் அல்ல, பணமுடிப்பு கொடுக்க நான் அரசியும் அல்ல, அவரை வாயார வாழ்த்த எனக்கு வயசும் இல்லை அதனால் அவரின் சிறு அறிமுகத்தை இந்த வாசகர்களுக்கு தந்து எனது அன்பை சமர்ப்பிக்கிறேன்.

            என்ன வாசகர்களே இவரை நான் அஷ்டவதானி என்று குறிப்பிட்டது சரிதானே..? தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்ற வள்ளுவனின் குறள் படி இவர் வாழ்கிறார். இவருக்கு அந்த ஈசனின் அருள் நீக்கமற கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை நாமும் வேண்டுவோம். 

No comments:

Post a Comment