Showing posts with label கீதை. Show all posts
Showing posts with label கீதை. Show all posts

Monday, 17 November 2014

கீதை-12

           உபாசகர்கள் இரண்டு வகை தான் வேறு இறைவன் வேறு என்று நினைப்பவருக்குப் பகவான் தனியொரு வடிவில் காட்சி தந்து, அருள்புரிகிறார்.

          தானும் பரமாத்மாவும் ஒன்றேயெனக் கொண்டவருக்கு பகவான் ப்ரம்மஜோதியாய் நின்று அருள்புரிகிறார்.

                அவரே உருவமுள்ளவர்ஸகுணர்
                அவரே உருவமற்றவர் - நிர்குணர்

          எப்படிப் பார்க்கிறோமோ அப்படித் தெரிவார்.

   யார் அடைந்தவோ அவர் அறிகிறார்.
   யார் அறிந்தவடோ அவர் அடைகிறார்.

                              -முற்றும்-


 

( கீதை பிறந்த கதை என்ற சிறு முன்னோட்டத்தை வாசகர்களுக்கு தொடராக பதிவு செய்து வந்தேன். வாசித்த உள்ளங்களுக்கு எனது நன்றிகள். கீதையை படித்தால் என்ன அனுகூலம் என்பதை விளக்கும் சிறு முன்னோட்டம் கீதை ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல்.)

Sunday, 16 November 2014

கீதை-11

           கீதை வாசிப்பு ஒரு ஞானவேள்வி. நாம் இன்னொரு வேள்வி நடத்த வேண்டியதில்லை. வாசிப்புக்கே அத்தனை மகத்துவம் என்கின்றபோது, வாசித்தபடி வாழவும் தொடங்கிவிட்டால்..!

           பகவான் உரைத்த கட்டளைகள் 'கீதோபதேசம்' அந்த உபதேசத்தைக் கடைப்பிடிக்கிறவர் பகவானுக்குப் பிரியமானவராவர். கீதையில் பகவானுடைய சுவாச ஸ்பரிசம் நமக்குக் கிடைக்கின்றது. அதுமட்டுமா அவரைத் தரிசிக்கவும், அவருடன் உரையாடவும் கூட முடிகிறது. 

            'வேள்வி பலனும், விரத பலனும்
             தான பலனும், தவப் பலனும்
             கீதையை வாசிப்பவருக்கு
             ஒருசேரக் கிடைத்துவிடுகிறது'

        உலகம் பகவானுடையது. அவனுடைய கருவி நாம் இதில் எந்த லாபமும் நமக்கில்லை, அப்படியேதான் எந்த நஷ்டமும் நமக்கில்லை. லாபநஷ்டமில்லை என்கின்ற போது அதுபற்றி சந்தோஷப்பட என்ன இருக்கிறது, வருத்தப்படத்தான் என்ன இருக்கிறது? மனதைச் சமநிலையில் வைத்திரு என்கின்றது கீதை. காரியம் நம்முடையதில்லை என்கின்றபோது அதன் விளைவுகள் பற்றி நாம் யார் கவலைப்பட?

                                                       -தொடரும்

கீதை -10

          நாம் மூழ்கி எடுக்கின்ற ஒவ்வொரு முறையும் புதுப்புது முத்துக்கள்! புதுப்புது பொருள்கள்!

        சொல் புதிது, பொருள் புதிது என்பதோடு அதன் சுவையும் புதிதுதான் சுவைக்கின்ற ஒவ்வொரு முறையும்.

        கீதையின் ஒவ்வொரு வரியும் ஒரு நன்னெறியைச் சொல்கிறது. இது பகவானுடைய விஷயம். இதில் விஞ்சி நிற்பது சொல்லா, பொருளா, சுவையா என்று நாம் ஆராயக் கூடாது.

       கீதை வாசிப்பு வியாசர் இப்படிக் கூறுவார்:

        'கீதா ஸுகீதா கர்தவ்யாகி மந்யை
         காஸ்த்ர ஸங்கிரஹை!
         யா ஸ்வயம் பத்மநாபஸ்ய
        முக பத் மாத் விநி : ஸ்ருதா' என்று.

         கீதையை நல்லவிதமாய் கேட்கவும், பாடவும் செய்ய வேண்டும். படிக்கவும், கற்பிக்கவும் செய்ய வேண்டும். மனதில் பதிக்க வேண்டும். பகவான் பத்நாபரின் முகக் கமலத்திலிருந்து வெளிப்பட்டது.

 நாம் கீதையை ஓதி உணர்ந்தபின் வேறெந்த நூலும் அவசியப்படாது. கங்கையில் மூழ்கியெழுந்தவன் தன்னைத்தான் தூய்மைப்படுத்திக் கொள்கிறான். தனக்கு மட்டுமே அனுகூலமாயிருக்கிறான்.

        கீதையில் மூழ்கி எழுந்தவனோ தன்னை மட்டுமின்றி, உலகத்தையே தூய்மைப் படுத்துகிறான். தனக்கு மட்டுமின்றி, தான் வாழும் சமுதாயத்துக்கே அனுகூலமாகிறான்.

                                           -தொடரும்

Friday, 14 November 2014

கீதை-9

            பரமாத்மா ஆனந்தம, பக்திகாந்தம. அது ஜீவாத்மாவை ஈர்க்கின்றது, எல்லையற்ற ஆனந்தத்தில் ஜீவனை இணைக்கிறது.

           பதின்மூன்று முதல் பதினெட்டு அத்தியாயங்கள்வரை பேசப்படுவது ஞானயோகம. ஞானம் அறிவொளி. அஞ்ஞான இருட்டை அகற்றுவது. ஞான யோகத்தின் மூலம் சாதகன் சித்சொரூபத்தை அடைகின்றான். ஜீவானுபவத்தின் உச்சம் அது.

           'நீயும் நானும் ஒன்று
            நாம் வேறு வேறு அல்ல'
என்பதை உணர்த்துவது.

          வாழ்க்கையின் குறிக்கோள் முக்தி. முக்திக்கும் வழிகாட்டும் கீதை. எத்தனையோ மகான்களும், மேதைகளும் கீதைக்கும் உரையாசிரியர்கள். வரிகள் மாறின, பொருள் மாறவில்லை. உண்மை அப்படியே மாறாதிருக்கிறது.

                      கீதையின் அவசியம்

   
             கீதை- பகவான் உரைத்தது. மனிதர்களின் வார்த்தைக்கே மகாசக்தி உண்டென்கின்ற போது, பகவானின் வார்த்தைக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும்.

           எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எளிமையாய்ச் செய்யப்பட்டது.

         கடலைப்போல் அகண்டதாய், ஆழமுடையதாய் இருக்கிறது கீதை. அது உப்புக் கடலல்ல உண்மைக் கடல். நாம் வாழ்க்கை முழுவதும் அள்ளியள்ளி எடுத்தாலும் அத்தனையும் கைக்கு வராது.

                 கடலளவு கடலளவுதான்
                 கையளவு கையளவுதான.

Thursday, 13 November 2014

கீதை-8

        பகவத் கீதை ஒரு சுருதி என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அது ஒரு ஸ்மிருதி என்பதும். அதன் பொருள் அவரவர் திறத்துக்கேற்ப விரித்துரைக்கப்படுகிறதேயின்றி, வரிகள் திருத்தி அமைக்கப்படவில்லை என்பது கீதையின் சிறப்பு.

          கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள் உள்ளன என்று முன்பே குறிப்பிட்டோம். முதல் ஆறு அத்தியாயங்கள் கர்மயோக தத்துவத்தைப் பேசுகிறது. நாம் எதை எண்ணுகிறோமோ அதைச் செய்கிறோம். உறுதி பெற்ற எண்ணம் சங்கற்பம. தீர்மானம் செயல் வடிவம் எடுக்கின்ற நிலை கர்மம். வாழ விரும்புவது சங்கற்பம், வாழ்வது கர்மம்.

         உணர்வுகளை கர்மத்தின் ஆதார சுருதி. உணர்வுகளில் இரண்டு வகை.

      நேர்மறை உணர்வு - விரும்பத்தக்கது  
      எதிர்மறை உணர்வு - விலக்கத்தக்கது.

           விருப்பம், நட்பு, ஆசை, பொறுமை போன்றவை நேர்மறை உணர்வுகள் ஆகும். வெறுப்பு, பகை, சினம், பொறாமை போன்றவை எதிர்மறை உணர்வுகள் ஆகும்.

          ஏழு முதல் பன்னிரண்டு அத்தியாயங்கள் வரை சொல்லப்பட்டது. பக்தியோகம்.

        அன்பின் இன்னொரு பரிமாணம் பக்தி. அது தூய்மையே வடிவாய்க் கொண்டது. பக்தியில் கெட்டது நல்லதாகும். நல்லது மிக நல்லதாகும்.

Wednesday, 12 November 2014

கீதை-7

                        கீதையின் சிறப்பு
         வேதங்களின் பொருளை கீதையில் காணலாம். அனைத்து உபநிடதங்களின் சாரமும் கீதையில் வாழ்வின் நெறிகளை முற்றாக உரைப்பது, சராசரி மனிதனுக்கும் பயன்படும, ஆன்மிக சாதகனுக்கும் பயன்படும். பக்குவங்கள் அனைத்தும் கொண்டது. இதில் சொல்லப்படாத தத்துவமே இல்லை.
 
            உடல், மனம், ஆன்மா சம்பந்தப்பட்டது யோகம். கீதை ஒரு யோக சாஸ்திரம்.

            பதினெட்டு யோகங்களை பதினெட்டு அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறார் வியாசர். கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்று பிரதானமாய் அறியப்படும் நான்கு யோகங்களே இவ்விதம் விரித்துரைக்கப்படிருக்கிறது. கர்மத்தில் இருந்து ஞானம் இது மனித மனம் அடைகின்ற பரிமாணங்கள்.

         யோகம் என்பது என்ன? செயலில் திறமை வாய்க்கப் பெற்றிருப்பது.

       ஆத்மா சத்தாகவும், சித்தாகவும், ஆனந்தமாகவும் விரவி நிற்கிறது. ஆத்மாவின் சொரூபம் கீதை.

        பரம்பரை தொட்டு, செவிவழி கேட்டுக் காப்பாற்றி வைத்த விஷயம் சுருதி எனப்படும். சொல்லும் பொருளும் மாறாதிருக்கும். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்பட்ட விஷயம் ஸ்மிருதி எனப்படும். சமூக வாழ்வு சம்பந்தமான கட்டுப்பாடுகளும், சட்ட திட்டங்களும் இதில் சொல்லப்படிருக்கும். இது காலத்துக்கேற்ப மாறும். காலம், இடம், சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவ்வப்போது மேலோரால் திருத்தி அமைக்கப்படும்.

                                             -தொடரும்

Tuesday, 11 November 2014

கீதை- 6

         பொதுவாக பாடசாலைகளில் போதிக்கப்படுகிற விஷயம், அமைதியான சூழ்நிலையில் ஆய்ந்தறிய வேண்டிய ஒன்று எதற்காக போர்க்களத்தில் போதிக்கப்பட்டது என்ற கேள்வி எழும்.
வாழ்க்கை பல போராட்டங்களை உள்ளடக்கிய மகாயுத்தம். அதில் போராடுகிறவன் வெற்றி பெறுகிறான். வெற்றிக்காக அவன் அசராது போராட வேண்டியிருக்கும. போராடத் தயங்குகிறவன் இழந்ததைப் பெற முடியாது, இருப்பதையும் தக்க வைத்துக்கொள்ள முடியாது.

       ஒரு யுத்தத்தைப் பற்றி யுத்தகளத்தில் பேசுவது எவ்விதத்திலும் முரணாகத் தெரியவில்லை. குருட்சேத்திரத்தை கொலைக்களம் என்றால் உலகம் ஒரு முடிவற்ற கொலைக்களந்தான். குருட்சேத்திரப் போரில் நடந்தது கொலைத் தொழிலா, தர்மம் தனது கடமையைச் செய்ததா என்று நாம் விவாதித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

"நியாயத்தைக் காப்பாற்றுவதற்காக
 உயிரைக் கொடு, தேவைப்பட்டால்
 நியாயத்தைக் காப்பாற்றுவதற்காக
 உயிரை எடுக்கவும் செய்"

இதுதான் கண்ணன் காட்டிய வழி

 நாளை கீதையின் சிறப்பு பற்றி பார்ப்போம்.

                   - தொடரும்

கீதை-5

            பாண்டவர் ஐவரிலும் அர்ச்சுனனுடன் நெருங்கிய உறவு கண்ணனுக்கு. பாலப்பருவத்தில் இருந்து, திருமணப் பருவம் வரை, வில்வித்தையில் இருந்து போர்க்களம் வரை எல்லா நிலைகளிலும் அர்ச்சுனனின் வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறான் கண்ணன். அப்படித்தான் உலக மாந்தர் ஒவ்வொருவரின் வாழ்விலும் அவன் சம்பந்தப்பட்டிருக்கிறான். ஜீவாத்மா பரமாத்மா தொடர்பே அர்ச்சுனன் கண்ணன் தொடர்பின் மூலம் விளக்கம் பெறுகிறது.

        கீதை உபதேசம் ஏன் அர்ச்சுனனுக்குச் செய்யப்பட்டது? பாண்டவரில் முக்கியத்துவம் பெற்ற மூவர் தர்மர், அர்ச்சுனன், பீமன் ஆவர்.

        தர்மர் சகல சாஸ்த்திரங்களையும், தர்மங்களையும் கற்றவர். அவருக்கு உபதேசம் தேவைப்பட்டது. பீமன் முரடன் முடர்கள் நீதி நியாயங்களைக் கேட்டுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களில்லை. எனவே, கண்ணனின் உபதேசம் அர்ச்சுனனுக்கு செய்யப்பட்டது. மாமனிதன் தர்மர் மனிதனுக்கொவ்வாத விலங்கு குணம் படைத்தவன் பீமன். எனவே மனிதனான அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்யப்பட்டது. பாமர மக்களின் ஏகபிரதிநிதியாய் அவன் அந்த நல்லுரைகளைக் கேட்டுக் கொண்டான்.

Sunday, 9 November 2014

கீதை (பகுதி-4)

         அலைமேலலையாய் கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. மனித வாழ்க்கையிலும் அப்படிதான் சோதனைமேல் சோதனை. அது அரசனுக்கும் உண்டு, ஆண்டிக்கும் உண்டு. வாழ்வின் மறைபொருளுணர்ந்து அதன் பிடியில் சிக்கி வாடும் நிலை எல்லோருக்கும் உண்டு. உலகில் தீயவர்கள் அதிகம் கௌரவர்களைப் போல, நல்லவர்கள் குறைவு பாண்டவர்களைப்போல.

         பாரதப் போர் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே விளைந்த போர் என்பதைவிட, தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் நிகழ்ந்தது. மனிதப் பிறவியின் நல்லியல்புக்கும், தீய இயல்புக்கும் இடையில் நிகழ்ந்தது என்பதே பொருத்தம். போர்க்களம் குருட்சேத்திரம் அது மனித சரீரம் 'தர்மம் வெல்லும்' என்பது பாரதத்தின் மூலம் நாம் கண்ட நிரூபணம் நிரூபித்து காட்டியவர் பகவான்.

        உலக உயிர்களுக்கெல்லாம் அனுக்கிரகம் செய்கின்ற பகவான் ஒரு மானிடனுக்கேன் சாரதியாக இயங்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். எல்லா உயிர்களுக்குள்ளுமிருந்தும் அவர்தானே அனைவர் வாழ்வையும் சாரத்தியம் செய்து கொண்டு இருக்கிறார் . மனச்சாட்சி என்கின்ற சாரதி!

                                                   -தொடரும்

கீதை (3)

            கடவுள் நம் பக்கம் இருந்தால் பிரதிகூலங்களும் அனுகூலமாகிவிடும. கடவுள் நம் பக்கம் இல்லை என்றால் வேறு எந்த அனுகூலங்களை நாம் பெற்றிருப்பினும் அவை நமக்கு பயன்படாது. போருக்கஞ்சாத சுத்தவீரன் அர்ச்சுனன் ஆனால் நடக்கவிருந்த பாரதப் போரிலோ அவன் துணிவை இழக்கவில்லை என்றாலும் சொல்லமாட்டத கலக்கத்தில் இருந்தான். களத்தில் பாட்டனார் பீஷ்மரையும், குருவான துரோணரையும் தாயாதியரையும் எதிர்த்துப் போரிட வேண்டிய நிலைக்குத் தாம் தள்ளப்பட்டமோ என்பதால் எழுந்த கலக்கம் அது. தன் கையால் அவர்கள் வீழ்ந்துபட நேருமே என்றெண்ணி வேதனைப்பட்டான். பிதாமகர் பீஷ்மர் தொட்டு உறவுகளையெல்லாம் தொலைத்து நாம் சௌகரியங்களைத் தேடிக்கொள்ள வேண்டுமா அப்படியொரு போர் அவசியமா என்று யோசித்தான்.

         சொந்தபந்தங்கள் சூழ்ந்திருக்க சொத்து சுகங்களை அனுபவிக்கின்ற மகிழ்ச்சி அவர்களை கொன்று அதன் மூலம் பெற்று அனுபவிப்பதில் ஏது? மனம் கூசியது பார்த்திபனுக்கு கையில் ஏந்திய வில்லைக் காலடியில் போடுகிறான் விரக்தியுடன் சுத்த வீரர்கள் அப்படிதான் போரின் நுணுக்கங்களைப் போலவே மற்ற நெறிகளையும் கவனமுடன் ஆராய்வார்கள். தர்மத்துக்குப் பழுதேற்பட்டு விடக்கூடாது என்பதில்அக்கறையாயிருப்பார்கள்.

        சொந்த மனிதர்களுக்கெதிராய் போர் செய்வதில் எந்த நியாயமும் இருப்பதாய்த் தெரியவில்லை அர்ச்சுனுக்கு. அர்ச்சுனா நீ போர்புரியத் தயங்குவது புறங்காட்டி ஓடுவதற்குச் சமம். நீ பின்வாங்கினால் அதர்மத்திடம் புறங்காட்டிச் செல்வதாகத்தான் அர்த்தம் என்று கண்ணன் பேசுகிறான்.

        போர்களத்தில் வைத்து கண்ணன் உரைத்ததெல்லாம் பாண்டவ வீரனுக்கு மட்டுமின்றி உலகத்தின் ஒவ்வொரு பாமரனுக்கும் பொருந்தும்.

                                   
                                                  -தொடரும்

Friday, 7 November 2014

கீதை (பகுதி-2)

         போரைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை. பாண்டவரும, கௌரவரும் கண்ணனின் உதவி வேண்டி துவாரகை சென்றனர். அவர்கள் சென்ற சமயம் கண்ணன் துயில் கொண்டிருந்தான்.

         கௌரவர் சார்பில் சென்ற துரியோதனன் கண்ணனின் தலைமாட்டிலும், பாண்டவர் சார்பில் சென்ற அர்ச்சுனன் அவனது கால்மாட்டிலும் நின்றிருந்தனர்.

         துயில் நீங்கிய கண்ணன் இயல்பாகத் தனது கால்மாட்டில் நின்றிருந்த அர்ச்சுனனை முதலில் பார்த்தான். பிறகே தலைமாட்டில் நின்றிருந்த துரியோதனன் கண்ணில் பட்டான். தான் முதலில் கண்ணுற்ற அர்ச்சுனனிடம் முதலில் பேசிய கண்ணன் பாண்டவர்க்குத் துணை நிற்க ஒப்புக் கொண்டான். துரியோதனனோ கண்ணனின் படையைத் தனக்கு உதம்படி வேண்டினான். ஆக மகாபாரதப் போரில் கண்ணன் ஒரு பக்கம் அவனது படை மற்றொரு பக்கம் என்று முடிவாயிற்று.

         கண்ணன் அர்ச்சுனனிடம் ஒரு நிபந்தனை விதித்தான். அதற்கு அவனும் ஒப்புக்கொண்டான். அந்த நிபந்தனை இதுதான். போரில் கண்ணன் ஆயுதமேந்தமாட்டான் பார்த்தனுக்கு ரத சாரத்தியம் மட்டுமே செய்வான்.

        இங்கே நாம் கவனத்தில் கொள்ளத்தக்கதொன்று.

       துரியோதனன் படை பலத்தைப் பெரிதாய் மதித்தான். அர்ச்சுனனோ இறைப்பலத்தைப் பெரிதும் மதித்தான்.

கீதை

                   கீதை (பகுதி-1)

       கீதையைத் தியானிக்கிறவரை பாவங்கள் தீண்டாது.

      கீதை எங்கிருக்கிறோ அங்கு புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் வந்து சேர்கின்றன

      எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரமே சகாயம் வருகிறது.

      எங்கு கீதை கற்கப்படுகிறதோ, கற்பிக்கப்படுகிறதோ அங்கு நான் வாசம் செய்கிறேன்.

                                  (ஸ்ரீ கீதா மகாத்மியம்)
       
              இது பகவானின் வாக்கு

       பரமாத்மா கண்ணனைவிட சிறந்த ஞானியும் இருக்க முடியாது. பகவத் கீதையைவிட சிறந்த நீதி நூலும் இருக்க முடியாது.

        கண்ணனைத் துதிக்க முடிந்தவரும் கீதையைப் படிக்க முடிந்தவரும் பாக்கியவான்கள். 

                கீதை பிறந்த கதை

        மகாபாரதப் பாண்டவர்களுக்கும, கௌரவர்களுக்கும் சமாதானம் ஏற்பட வகையில்லை. பாண்டவர்க்குரிய நாட்டை சூதில் அபகரித்த துரியோதனாதியர் ஐவரின் சொத்துக்களில் ஐந்தே ஐந்து வீடுகளைக் கூட அவர்களுக்குத் திருப்பித் தர மறுத்துவிட்டனர்.

        கண்ணனின் தூது தோல்வி கண்டது அவன் துவாரகைக்குத் திரும்பிவிட்டான்.

                                                  - தொடரும்