Saturday 18 April 2015

4. போற்றித் திருவகல்

            கடவுள் இல்லை என்பர்கள் நாத்திகம் வாதம் செய்வார்கள் அவர்களுக்கு என்ன சொல்கிறார் பாருங்கள் மாணிக்கவாசகர்.

           'ஆத்த மானா ரயலவர் கூடி
           நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்'

            உற்றாரும், பக்கமுள்ளாரும் தங்கள் நாவில் தழும்பேறும் அளவுக்கு கடவுள் இல்லையென்கிற நாத்திக வாதம் பேசுகின்றனர். இதுவும் மாயை செய்கிற லீலைகளில் ஒன்று. மாயை என்றாலே மயக்குதான். அது கண்ணை மறைக்கும், அறிவை மயக்கும்.


            எது சரி, எது தவறு என உணர்ந்தறிய முடியாமல் அத்தகைய தத்துவங்கள் மயக்கத்தைத் தரும்.

           'தப்பாமே தாம்பிடித்தது சலியாத்
            தழலது கண்ட மெழுகது போலத்
           தொழுதுள முருகி யழுதுடல் கம்பித்து'

           எந்த மதிமயக்கிலும் சிக்காமல் தெளிவோடிருக்கும் சாதகன் பாக்கியவான். அவன் அனலிட்ட மெழுகினைப்போல் மனமுருகி இறைவனைத் தொழுகிறான். அவனது உடல் அழுது நடுங்கிச் சிலிர்ப்பெய்துகிறது.

          ஒருவனின் பக்தி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா

        'பசுமரத்தாணி யறைந்தாற் போலக்
        கசிவது பெருகிக் கடலென மறுகி'

         ஆணியைப் பச்சைமரத்தில் எளிதாய்ச் செலுத்துவது போன்று உள்ளத்தில் செலுத்தப்படும் பேருணர்வால் உள்ளம் நெகிழ்வதும் உடல் சுழல்வதும் நிகழ்கின்றன.

             'சதுரிழந் தறிமால் கொண்டு சாருங்
             கதியது பரமா வதிசயமாகக்'

            ஞான மார்க்கத்தில் கர்வம் தடை செய்யப்படுகிறது. மெய்யறிவை மேலும் மேலும் விருத்தி செய்து கொள்ள வேண்டும். முக்திக்கு ஈடேதுமில்லை என்பதால் அதன் மகிமை குறித்து வியப்படைதலே சிறப்பு.

           'கற்றா மனமெனக் கதறியும் பதறியு
            மற்றோர் தெய்வங் கனவிலு நினையாது'

           பசுவின் தாய்மனம் கன்றுக்காக உருகுவது போன்று பக்தர்களின் மனம் இறைவனுக்காக உருகுகிறது. அவர்கள் கதறவும் பதறவும் செய்வார்கள். தங்கள் சிந்தையில் குடிகொண்ட தெய்வமின்றி வேறெதுவும் அவர்கள் சிந்தை புகுவதில்லை, கனவிலும் வருவதில்லை.

          'சிறுமையென்றிகழாதே திருவடி யிணையைப்
         பிறிவினை யறியா நிழலதுபோல'

         இறைவனின் செய்கையை வெகுசாதாரணமாய் எண்ணிவிடக் கூடாது. உடலை விட்டு நிழல் பிரியாதிருப்பது போன்று அவனுடைய திருவடிகளைப் பக்தனின் சிந்தை பிரியாதிருக்க வேண்டும்.

           'உரை தடுமாறி யுரோமம் சிலிர்ப்பக்
            கரமலர் மொட்டித் திருதய மலரக்
            கண்களிகூர நுண்டுளி யரும்பச்

            பக்தியுணர்வு மேலிட வாய்ச்சொல் தடைப்படுகிறது. மயிர்க் கூச்செறிகிறது, கை குவிகிறது, உள்ளம் பரவசமடைகிறது, கண்களில் ஆனந்தக் கண்ணீர் அரும்புகிறது.

           
                                         -தொடரும்

2 comments:

  1. தாங்கள் குறிப்பிட்ட இந்த உலோகாயுதம் பற்றிய பதிவொன்றெழுதத் தரவுகள் சேர்க்கிறேன்.
    உங்களின் பதிவு மிகப் பயனுள்ளதாக இருக்கிறது.
    தொடருங்கள் தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete