Tuesday 28 April 2015

10. திருக்கோத்தும்பி

          வண்டு தேனை நாடிப் பூவிடம் செல்வது போல நாமும் ஈசனை நாடிச் செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம்,

 பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த
 நா ஏறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
 மா ஏறு சோதியும் வானவரும் தாம்அறியாச்
 சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

         செந்தாமரையில் இருக்கும் பிரம்மாவும், இந்திரனும், அழகு பொருந்திய சரஸ்வதியும், நாரணனும், சந்திரசூரிய அக்கினியாகிய பெருமை மிக்க சோதிகளும், தேவர்களும் சிவபெருமானை முழுதாய் அறிந்து கொண்டவர்களல்ல. அத்தகைய ரிடப வாகனனைப் போற்றி அரசவண்டே நீ ரீங்காரம் செய்வாயாக.


 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
 என்அப்பன் என் ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
 வண்ணப் பணித்தென்னை வாஎன்ற வான் கருணைச்
 சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

          கண்ணப்பன் தனது அருஞ்செயலால் அன்பின் உச்சநிலை அடைந்தான். நானோ அன்பின் தொடக்கநிலையில் உள்ளவன். ஆயினும் என் தந்தை என்னையும் ஆட்கொண்டான். அவன் கருணைமிக்கவன். வண்டுகளின் வேந்தே, நீ அவனுடைய திருவடி மலரில் சென்று ஊதுவாயாக.

வைத்தநிதி பெண்டீர் மக்கள் குலம் கல்விஎன்னும்
பித்த உலகில் பிறப்போடு இறப்பென்னும்
 சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
 வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ.

           ஈட்டிய செல்வம், கொண்ட மனைவி, பெற்ற புதல்வர், கருதிய குலம், கல்வி, பிறப்பு, இறப்பு இவை காரணமாய் ஏற்படும் மயக்கம் பிறப்பு இறப்பு என்னும் பெருந்துன்பத்தைத் தருவதாய் இருக்கிறது. இந்த மனோபாவங்களை விட்டால்தான் நீ பிறவித் துன்பம் நீங்கிச் சுகம் பெறுவாய் என்று எனக்கு மெய்ம்மை உணர்த்தி, மயக்கம் தெளிவித்த ஞானவடிவினனின் புகழ்பாடு வண்டே

 நானுமென் சிந்தையும் நாயகனுக்கு எவ்விடத்தோம்
தானும் தன்தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானும் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
 தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ

          சிவமும் சத்தியுமாய் வந்துபெருமான் என்னை ஆட்கொள்ளாவிடில் நான் சீரழிந்திருப்பேன். என் சிந்தையும் சீர்குலைந்திருக்கும். வானும், திக்கும், கடலும் ஆகியிருக்கும் ஈசனது இனிய திருவடிக்கே சென்று நீ ஊதுக.

 உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும்
கள்ளப்படாத களிவந்த வான்கருணை
வெள்ளப்பிரான் எம்பிரான் என்னைவேறே ஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

           மனதுக்கெட்டாத சிவனை சிவஞானத்தால் காணலாம். நாம் எண்ணுமளவு இன்பமளிக்கும் எல்லையற்ற கருணை அவனுடையது என்னைத் தனித்து அடிமைசெய்யும் எம் தலைவனிடம் சென்று நீ கானம் பாடு.

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக்கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன்தன்
செய்யார் மலரடிக்க சென்றூதாய் கோத்தும்பீ

          நிலையற்ற பொருள்களை நிலையானதென்று கருதிப் பயனில்லாமல் கிடந்தேன் நான். என்னை அவன் உய்வித்தான். வண்டினத்தின் அரசே அவனிடம் சென்று என் ஆருயிரே அம்பலவா என வாழ்த்தி அவனுடைய செம்மலர்த் தாளிணைக்கே நாத மெழுப்புவாய்.

                                                 -தொடரும்

No comments:

Post a Comment