Thursday 25 December 2014

திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில்

             இன்று உங்களை நான் உறையூரில் உள்ள அருள்மிகு வெக்காளியம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்ல போகிறேன்.

             உறையூர் சோழர்களுக்கு தலைநகரமாக விளங்கியது. இது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது. உறையூருக்கு பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிடத்திருக்கொரு பஸ் இருக்கிறது. நாச்சியார் கோவில் பஸ் நிறுத்ததில் இறங்கி 500 மீ நடக்க வேண்டும் அல்லது ஆட்டோவிலும் செல்லலாம்.


             ஊர்களை அமைக்கும் போது ஊர்க்காவல் தெய்வங்களை ஊர்களின் எல்லையில் எழுந்தருளச் செய்வது, வீரமும் வெற்றியளிக்கும் தெய்வங்களையும் வடக்கு நோக்கி அமைப்பார்கள் அதன்படி ஊர் எல்லையிலும் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது உறையூர் அருள் மிகு வெக்காளியம்மன் திருக்கோவில்.


            இந்த கோவில் அமைந்ததற்கு மற்றொரு காரணம் சொல்லப்படுகிறது. உறையூரில் பராந்தகன் என்னும் அரசன் தனது மனைவி புவனமாதேவியுடன் ஆட்சி செய்த காலத்தில் சாரமா முனிவர் என்பவர் நந்தவனம் அமைத்து பலவகை மலர்செடிகளையும் பயிரிட்டு மலர் கொய்து தொடுத்து தாயுமானவர் சுவாமிக்கு அளித்து அழகு பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

            இந்நிலையில் பிராந்தகன் என்னும் பூ வணிகன் அரசரிடம் ஆதரவு பெற எண்ணி நந்தவனத்து மலர்களை பறித்து அரசருக்கு அளிக்கத் தொடங்கினான் அரசரும் உயர்வான மலர்களைக் கண்டு உள்ளம் களித்து தாயுமானவருக்கு மட்டுமே அளிப்பதற்கென சாரமா முனிவர் அமைந்த நந்தவனத்து மலர்கள் என்றும் அறிந்தும் கூட தவறான ஆசையால் வணிகனிடம் நாளும் மலர்களை பறித்துவர ஆணையிட்டான்.

            நந்தவனத்தில் நாளும் மலர்கள் குறைவதைக்கண்ட சாரமா முனிவர் ஒரு நாள் வணிகன் மலர் கொய்யும் போது பிடிப்பட்டான். தாயுமானவருக்கு ரிய மலர்கள் அரசனுக்கு செல்வதைக் கண்டு சினந்து மன்னரிடம் முறையிட்டான். மன்னனோ முனிவரை அலட்சியம் செய்து மலர் வணிகனது செயலை ஊக்குவிக்க மனம் நொந்த முனிவர் தாயுமானவரிடமே முறையிட்டார். தனக்குச் செய்யும் குறைகளைக் கூட தாங்கிக் கொள்ளும் இறைவன், அடியார்க்கு செய்கின்ற இடர்களை தாங்குவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மேற்கு முகமாக திரும்பி உறையூரை நோக்கியதால் மண்மாரி பொழியத் தொடங்கியது. இதனால் உறையூர் மண் மூடியது

            மக்கள் தங்களைக் காக்க எல்லைத் தெய்வமாக விளங்கிய வெக்காளி அம்மனை விட்டால் வேறு வழியில்லை ஓலமிட்டு சரண் அடைந்தனர். அன்னை இறைவனை வேண்டினாள் மண்மாரி நின்றது. ஆனாலும் மக்கள் வீடிழந்து வெட்ட வெளியே தங்குமிடமானது. மக்கள் துயர் கண்டு அன்னை வெக்காளியம்மன் உங்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை நானும் உங்களைப் போல வெட்ட வெளியிலேயே இருக்கிறேன் என்று கூறியதாக வரலாறு கூறுகிறது.

              கோயிலின் அமைப்பு: சிறிய கோவில்தான் சுற்றிலும் எழில் மிகு மண்டபம் இருக்க நடுவே வெட்ட வெளியில் வெக்காளியம்மன் கருவறை உள்ளது. தெற்கு வடக்கிலும் வாயில்கள் இருந்தாலும் தார்சாலையொட்டி தெற்கு வாயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் பெரும்பாலும் இந்த வாயில் வழியாகத்தான் கோயிலுக்குள் வருகின்றனர். தெற்கு வாயில் வழியாக கோயிலுக்கு நுழைந்தால் இடது பகுதியில் வல்ல கணபதி சன்னதி உள்ளது. அவரை வணங்கி மேலும் சென்றால் விசாலாட்சியம்மன் உடனுறை விசுவநாதர் சன்னதி உள்ளது. அதையடுத்து அருள்மிகு காத்தவராயன் புலி வாகனத்துடன் பெரியவண்ணன், மதுரை வீரன் சன்னதிகள் அமைந்துள்ளது. அதை தொடர்ந்து நாகபிரதிஷ்டையுடன் விநாயகர் சன்னதி உள்ளது. அதையடுத்து அன்னையின் உற்சவர் சிலை உள்ளது.

             இந்த சன்னதியின் வடக்குச் சுவரில் துர்க்கை அம்மன் சன்னதியும் அமைந்துள்ளது விஷேசமாகும். அதைத் தொடர்ந்து சனீஸ்வரருக்கு தனியா பொங்கு சனீஸ்வரர் சன்னதியும் கோயிலின் ஈசான்ய மூலையில் நவகிரக சன்னதியும் அமைந்துள்ளது.

கருவறை: வடக்கு நோக்கி வீற்றிருக்கும் அருள்மிகு வெக்காளியம்மன் தனது மேற் கரங்களில் வலதுபுறம் உடுக்கையுடனும், இடதுபுறம் பாசம், கீழ்புறம் வலதுகரத்தில் ஜூலம், இடது கரத்தில் கபாலத்துடன் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அரக்கனை அக்காலில் மிதித்துக் கொண்டிருந்தவாறு அருள்பாலிக்கிறார்.

          பொதுவாக அம்மன் வலக்காலைத் தொங்க விட்ட நிலையில் அமைப்பதுதான் வழக்கம். ஆனால் இத்திருக்கோயிலில் வெக்காளியம்மன் இடது காலைத் தொங்கவிட்டு வலது காலை மடித்து வைத்து அருள்பாலிப்பது விஷேசமாகும்.

          பிராத்தனை சீட்டு: தொழில் நஷ்டம், கடன் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், நோய் நொடியின்றி நலமாக வாழவும், கல்வி பொருளாதர நிலையில் மேம்பாடு அடைய கருவறை அம்மனுக்கு நேர் எதிரில் உள்ள சூலத்தில் பக்தர்கள் பிராத்தனை சீட்டுக்களை கடிதமாக எழுதி இன்றும் கட்டி வருகிறார்கள்.

            இந்த கோவிலின் சிறப்பு பற்றி இன்னொன்றை குறிப்பிட வேண்டும். வழக்கமாக நாம் பெரிய பெரிய ஆலயங்களுக்கு செல்லும்போது. நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்கள் முறையாக சேர்க்கப்படுவதில்லை இடையிலே நம் கண்ணெதிரிலே தூக்கி எறியப்படும். ஆனால் இங்கே அப்படி இல்லை நாம் வாங்கிச் செல்லும் வஸ்திரங்கள், மாலைகள் அழகான முறையில் முழுமையாக அம்மன் சிலையில் சாத்தப்படுகிறது. அதோடு அர்ச்சனை தட்டு மாறாமல் இருக்க டோக்கன் வழங்கப்பட்டு உரியவரிடம் அளிக்கப்படுகிறது. இது எந்த கோவிலும் இல்லை. அமைதியான முறையில் சிறப்பாக வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இது பக்தர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. அங்கே பணியாற்றுபவர்கள் அனைவரும் சிறப்புடன் பணியாற்றுகிறார்கள். மற்ற கோவில் நிர்வாகத்தினர் இங்கே வந்து பார்த்துச் சென்றால் நன்றாக இருக்கும்.

             ஆலயங்கள் ஆயிரம் இருக்கிறது ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கையில் தன் கோவிலுக்கு வருகிறார்கள். வேண்டுதல் நிறைவேறுகிறதோ என்னவோ தன் மனப்பாரங்களை இறக்கி வைத்துவிட்டு நிம்மதியோடு செல்கிறார்கள். கடவுள் இருக்கிறது என நம்புகிறவர்களுக்கு இருக்கிறது, நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இல்லை.    "வானத்தில் இருக்கும் மேகத்தை சாதரணமாக பார்த்தால் அது மேகம் அதையே சற்று உற்று நோக்கி பார்த்தால் உருவமாக அதாவது, சிங்கமாக, யானையாக, குதிரையாக, சிலையாக மனதிலே நினைத்துப் பார்த்தால் அதுவாகவே நம் கண்களுக்குத் தெரியும் அது போலதான் கடவுள் பக்தியும். "

            கடவுளை கல் என நினைப்பவர்களுக்கு கல், கடவுள் என நினைப்பவர்களுக்கு கடவுள். கல்லும், கடவுளும் அவரவர் நம்பிக்கையை பொறுத்தே அமைகிறது."

2 comments: