Wednesday 23 April 2014

மேய்ப்பானை மறந்த மந்தைகள்

உன்னை பத்து மாதம்
சுமந்து பெற்றெடுக்கும்போது
வலி தெரியவில்லை..!

பாலும் தேனும் ஊட்டி
பசியாற்றும்போது எட்டி உதைத்தாயே
அப்போது வலி தெரியவில்லை..!


வளர்த்து ஆளாக்கி
நல்ல நிலைக்கு கொண்டுவர
அறிவுரை கூறும்போது
முகத்தை சுழிப்பாயே
அப்போது வலி தெரியவில்லை..!

 உனக்குத் துணையாக
ஒரு இல்லாளை கொண்டு
வந்த பிறகு முதியோர் இல்லத்தில்
சேர்த்தாயே இப்போது
தானடா வலிக்கிறது..!

 கண்ணில் நீரோடு
என்னை உன்கூடவே கூட்டி
செல்லடா என ஏக்கத்தோடு
நோக்கும் அன்னையை தவிக்கவிட்டு
 செல்லும் அந்த மகனுக்குத் தெரியுமா
நாளை தனக்கு ஒரு
இடம் இங்கு காத்திருக்குதென்று!

No comments:

Post a Comment