Friday 6 March 2015

துவரங்குறிச்சி சிவ ஆலயம்

          தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகே 7 கி.மீ தொலைவில் துவரங்குறிச்சி எனும் ஊரில் பழுதடைந்த சிவாலயம் ஒன்று இருக்கிறது. மூன்று தினங்களுக்கு முன்பு பிரதோஷம் அன்று முதல் முறையாகச் சென்றேன். கோவிலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் நமது வீடு ஒன்று இடிந்த நிலையில் கிடந்தால் என்ன ஒரு உணர்வு ஏற்படுமோ அந்த உணர்வு எனக்குள் வந்தது.



            நால்புறமும் வயல்கள் அருகில் தாமரைக் குளம் அதன் நடுவில் கோவில் அமைந்திருக்கிறது. முன்பு அந்த கோவில் செங்கல் திருப்பணி செய்து இருக்கிறார்கள். கட்டிட அமைப்பு பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. ஆனால், முற்றிலும் சிதைந்து இடிந்து கிடக்கிறது. அதில் உள்ள சிவலிங்கத்தை அருகில் ஒரு கொட்டகை அமைத்து அதில் வைத்து முக்கியமான தினங்களில் மட்டும் பூஜை செய்கிறார்கள்.

             துவரங்குறிச்சியில் பராசக்தி மாரியம்மன் கோவில் வெகு விமர்சியாக ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 18 நாள் திருவிழா நடைபெறும். சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் திரண்டு வருவார்கள் கூட்டம் நிறைந்து வழியும். ஆனால் இந்த சிவன் கோவில் இடிந்து கேட்பார் அற்று கிடப்பது மனதிற்கு வருத்தத்தைத் தருகிறது.


               இந்த கோவிலைக் கட்டுவதற்கு ஊர் பெரியவர்கள் முன் வர வேண்டும், இந்து சமய அறநிலையத்துறை நிதி உதவி செய்ய வேண்டும். ஊர் நடுவில் ஒரு சிவன் கோவில் அலங்கோலமாக சிதைந்து கிடப்பது நல்லது அல்ல. அதோடு பிரதோஷ நாட்களில் துவரங்குறிச்சி மக்கள் பட்டுக்கோட்டைக்குதான் செல்ல வேண்டும். அருகில் சிவ ஆலயத்தை வைத்துக்கொண்டு வெளியூர் செல்ல வேண்டியதாக இருக்கிறது.

           இந்தக் கோவில் ரொம்ப இடிந்த நிலையில் இருப்பதால் முட்செடிகள் அதிகம் மண்டி கிடக்கிறது. அதனைச் சுற்றி வயல்கள் இருப்பதால் ஆட்கள் வேலைக்கு வருவதும், போவதுமாக இருப்பார்கள், அந்த இடிந்த கோவிலில் பாம்பு ஒன்று இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சென்ற வருடம் கூட ஒருவரை பாம்பு தீண்டிவிட்டது. பசுமையான வயல்களுக்கு நடுவே இந்த கோவில் அமைந்து இருப்பது எத்தனை அழகான விஷயம்.

            இந்தக் கோவிலைச் சுற்றி நான் வந்த போது மிகுந்த மன வேதனையோடுதான் வந்தேன் சிவனுக்கே இந்த நிலமையா என்று.

           இதை வாசிக்கின்ற நண்பர்கள் எனக்கொரு உதவி செய்ய வேண்டும். இந்தக் கோவிலை பராமரிக்க யாரை அணுக வேண்டும் எங்கே சென்றால் துரிதமாக வேலை நடக்கும். அறநிலையத்துறையில் பணியாற்றும் நண்பர்கள் யாரேனும் இருப்பின் இதுப்பற்றி விவரம் தேவை. அதோடு அந்த துறை சார்ந்த உயர் அதிகாரிகளின் முகவரியும் தருமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment