Sunday 15 March 2015

மனமும் தெய்வ ஞானமும்

         மனம் என்பது தனி மனிதனின் மனமாகப் பலகாலம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. "இது என் உடல், இது அவன் உடல் " என்று சொல்லும் போது உடலின் வேறுபாட்டைக் குறிக்கிறது. ஆனால் இந்த வேறுபாடுகளைக் கொண்ட உடல்கள் எல்லாமே உணவால் சமைந்தவைதான் என்பதில் சந்தேகமில்லை. அதே போல் இது உன் மனம், இது அவன் மனம், இது நல்ல மனம், இது கெட்ட மனம் என்றெல்லாம் தனி மனிதனின் மனத்தைப்பற்றிச் சொன்னாலும் எல்லா மனங்களும் வெளியாகாயத்திலிருந்து பெறப்பட்ட மனம்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரபஞ்சம் முழுவதும் மன ஆகாயம் பரவியிருக்கிறது என்பதை நீங்கள் இப்படி நம்பலாம். பூமிக்கு பலகோடி மேல்களுக்கு அப்பால் இருக்கும் சூரியனின் ஒளியை பூமிக்கு கொண்டுவர இடையில் ஒளியாகாயம் இருக்க வேண்டும். ஒளிகளின் மின்காந்த அலைகளை உலக முழுவதும் பரவச் செய்ய ஆகாயப்பரப்பில் மின் காந்த ஆகாயம் இருக்க வேண்டும் என்பது போல், மனத்தின் அலைகளைத் தாங்கிச் செல்ல ஏதுவாக மன ஆகாயமும் இருக்க வேண்டும் என்பதை நாம் நம்பலாம். அதுமட்டுமல்ல இன்று உலகில் மிக அதிக ஆண், பெண்களால் பயன்படுத்தப்படும் மானதத்தந்தி(Telepathy) என்ற கலை, வெளி ஆகாயத்தில் மனம் பரவியிருக்கிறது என்பதை உறுதிப்படுகிறது.



           இப்படிப் பிரபஞ்ச முழுவதும் பரவியுள்ள பொது மனச் சக்தியை 'தெய்வ மனம்', ஆகாய மனம் என்று ஆன்றோர்கள் சொல்கிறார்கள. ஏனென்றால், பிரபஞ்சத்தை எல்லாம் படைத்து, காத்து அழிக்கும் இறைவன் ஆகாய மனத்தின் வழியாகத்தான் அச்செயல்களைச் செய்கிறான். ஆகாய மனதின் ஒரு பக்கத்தில் சிருஷ்டித் தன்மையை உண்டாக்கப் பொருள்கள் உண்டாகின்றன. அதன் மற்றொரு பக்கத்தில் அழிவுத் தன்மையில் மனதைத் திரித்து வைக்கப் பொருள்கள் அழிகின்றன. மனதுக்கும் உடலுக்கும், வாழ்க்கைக்கும் தொடர்புகள் உள்ளன. பிரபஞ்ச காரியங்களை இறைவன் மன ஆகாயத்தைக் கொண்டு நடத்துகிறான். மனிதனுக்கு ஒரு மனம் இருப்பது போல் பிரபஞ்ச மனம் இறைவனுடையாத இருக்கிறது. மனிதன் ஒரு காரியத்தைச் செய்யுமுன் முதலில் அதை மனத்தில்தான் செய்கிறான். மனதில் செய்கிறான் மனதில் செய்யப்படாத எதுவும் உடலால் செய்யப்பட முடியாது. ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு உடலில் காரியம் செய்யப்பட்ட பிறகுதான் இவன் இதைச் செய்தான் என்று தெரியும். செய்யுமுன் இவன் இதைச் செய்யப் போகிறான் என்று சொல்லமுடியாது. ஆனால் மனிதனின் மனதை யாராவது காணமுடிந்தால் இவன் இன்னது செய்யப் போகிறான் என்று அவன் உடலால் செய்வதன் முன்பே சொல்லி விடலாம்.

              மனித மனத்தில் தொடங்காத எதுவும் மனித உடலில் செயல்படாதது போல் மன ஆகாயத்தில் இறைவனின் திட்டப்படி தொடங்கப்பெறாத எதுவும் பிரபஞ்சத்தில் நடைபெறுவதில்லை. இதனால் யாராவது நேராக மன ஆகாயத்தைக் கவனிக்க முடிந்தால், அவர்களுக்கு உலகில் இன்னின்ன காரியங்கள் நடைபெறப்போகின்றன என்பது நடைபெறுவதற்கு முன்பே தெரியவரும். இப்படி மனித மனதை, ஆகாய மனமான தெய்வ மனத்துடன் ஒன்றச் செய்வதன் மூலம் பிரபஞ்சத்தில் நடைபெறப் போகும் சம்பவங்களை முன் கூட்டி அறிவதற்கு தெய்வ ஞானம் என்று பெயர். பல புராணக்கதைகளில் வருங்காலச் சம்பவங்களை பலர் முன் கூட்டியே அறிந்து சொன்னதாக வரலாறுகள் காணப்படுகின்றன. உலகிலும் மனித இனத்திலும் மற்ற உயிரனங்களிலும் நடைபெறப் போகும் சம்பவங்களை முன்கூட்டி அறித்து கொள்ளக்கூடிய தெய்வ ஞானம் கொண்டவர்கள் இன்றும் உலகில் பலர் இருக்கிறார்கள். தெய்வ மனத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் உலகில் நடைபெறப் போகும் சம்பவங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் உண்மைகளை அறிந்து கொள்ளவும், தனிப்பட்டவர்களின் கர்மப் பிரபாவத்தால் விளையப்போகும் நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

              நீங்கள் வருங்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள எளிய சாதனை அதற்கு முன் ஒரு பெரிய எச்சரிக்கை வேண்டும். இந்த தன்மையைப் பெறுபவர்கள் எக்காரணம் கொண்டும் பிறரின் வருங்காலத்தை அறியவோ, அறிந்த பின் உலகின் வருங்காலச் சம்பவங்களைப் பிறருக்கு எடுத்துக் சொல்லவோ கூடாதென்பதை உறுதியாகக் கடைப்பிடித்தாக வேண்டும். இதில் சற்று பிசகினாலும் அவர்களுக்கு ஞானத்தையளிக்கும் அதே தெய்வமனம் அவர்களின் மனதின் வழி அவர்களுக்குத் தீமையைச் செய்யும். தெய்வஞானம் பெற முதல் தேவை, மனத்தைக் குறித்த ஒரு கருத்தில் மட்டும், போதுமான நேரம்வரை இயங்கச் செய்யும் தன்மை. இதை ஏராக்கிரம், தியானம் முதலிய சாதனைகளால் எளிதில் பயிலலாம். இப்படி ஒரு தேவையான கருத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மனத்தின் உணர்வை மெதுவாக மூளையைக் கடக்கச் செய்து வெட்ட வெளிப் பரப்பில் நிறுத்தி விடை காணும் பாவனையுடன் இருக்க வேண்டும். திடுமென தெய்வ மனம், நம் மனதைப்பற்றி, நமக்கு வேண்டிய கருத்துகளை அதில் திரிபில் உண்டாக்குவதன் மூலம் விளக்கச் செய்யும். இது எப்படி இருக்குமென்றால், ஏதோ ஒரு சிக்கலுக்கு வழி தெரியாதவன் பல நாட்களாக அதைப்பற்றி சிந்தித்து வரும்போது ஒருநாள்.ஆ இதுதான் வழி என்று அறிந்து கொள்வது போலிருக்கும். இந்த அறிவு உண்மையில் ஆழ்ந்த சிந்தனையின் பயனாக அவன் மனம் தெய்வ மனத்துடன் ஒன்றுவதால்தான் ஏற்படுகிறது.

No comments:

Post a Comment