Sunday 5 October 2014

பள்ளி வாழ்க்கையும், நினைவு தூறலும்

எல்லோர் மனதிலும் இன்றும்
மறக்கமுடியாமல் இருப்பது
பள்ளி வாழ்க்கையும் அங்கு
கிடைத்த நட்பும் தான்

அப்படி எனக்குக் கிடைத்த
அருமைத் தோழி சசிகலா
எனக்கு ஒன்று என்றால் நீயும்
உனக்கு ஒன்று என்றால் நானும் துடித்தோம்
அழுது தீர்த்தோம்

ஹாஸ்டல் முழுதும்
நமக்கான நட்பைப் பற்றி
பெருமையாகவும் பேசினர்
பொறாமையும் பட்டனர்
யார் கண் பட்டதோ
எனக்குப் பிடிக்காத வார்த்தை
ஒன்றை சொல்லி நீ திட்டிவிடவே
உன்னோடு பேசுவதையே
நிறுத்திக் கொண்டேன்


காரணம் புரியாமல் நீ அழுதாய்
ஹாஸ்டல் உள்ள அனைவரும்
நம்மை சேர்த்து வைக்க எவ்வளவோ
முயன்றும் முடியாம் போனது
என் பிடிவாதத்தால்

இரண்டு ஆண்டுகள்
எதிரும் புதிருமாகவே சென்றது
மறைமுகமாக எவ்வளவோ
பேச எத்தனித்தாய்
நான் விலகியே சென்றேன்


அன்றொருநாள்
உனக்கு உடல் நிலை
சரியில்லாதபோது நான் தான்
உன்னை அழைத்து செல்ல வேண்டுமென்று நீ
அடம்பிடித்தாய் ஹாஸ்டல்
டீச்சரும் நான்தான் போகவேண்டும் என்று
சொன்னதால் வேறு வழியின்றி
உன்னோடு வந்தேன்


வழிநெடுகிலும் நீதான் ஏதேதோ
பேசிக்கொண்டே வந்தாய்
நான் மவுனமாகவே வந்தேன்
உன் வீடுபோய் மறுபடியும்
ஹாஸ்பிட்டல் வந்து
ஹாஸ்டல் வரும்வரை
ஒரு வார்த்தை நான் பேசவில்லை அன்று
ஆத்திரத்தில் நீ ஒரு வார்த்தை
சொன்னதால்


உன் வீட்டில் பார்த்தேன்
நான் அனுப்பிய வாழ்த்து
அட்டைகள் பத்திரமாக வைத்திருந்ததை
இப்போது நானும் எடுத்து (நினைத்து)
பார்க்கிறேன் நீ தந்த பரிசையும்
நான் உனக்குத் தந்த
மவுனத் தண்டனையையும்

அப்போது இருந்த பிடிவாதம்
கோபம் வீம்பு இப்போது இல்லை காலம் கடந்து வருத்தப்படுகிறேன்
கடைசிவரை உன்னோடு
பேசாது போனதை நினைத்து

3 comments: