Sunday 30 August 2015

மனமே ஓ... மனமே நீ மாறிவிடு

           

மதிப்பீடு



             ஒருவர் செய்கின்ற காரியங்களை வைத்து, செயல்பாடுகளை வைத்து அவரின் குணாதியங்களை கணிக்க முடியுமா? எல்லோராலும் முடியாது சிலரால் மட்டுமே முடியும். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் இப்ப ஒருத்தர் நிறைய எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோமே அவர் என்ன செய்வார் எல்லாவித கருத்துக்களையும் தன் எழுத்தில் புகுத்த நினைப்பார். ஒருவர் ஒன்றை பற்றியே குறிப்பிட்டால் கூட ஒரளவுக்கு கணிக்கலாம் எல்லாவற்றையும் எழுதினால் எப்படி கணிக்க முடியும்?


               அதனால், சிலரின் கணிப்பு தவறாகவே அமைந்துவிடுகிறது. எப்படி தெரியுமா? ஒருவர் காதல் கவிதைகளை எழுதும்போது அவர் யாரையோ காதலிக்கிறார் என்கிறார்கள், அரசியலைப்பற்றி எழுதும்போது சமூக விரோதி என்கிறார்கள், ஆன்மீகத்தைப் பற்றி எழுதும்போது பழம், வயசான ஆளு என்கிறார்கள் இப்படி பலவிதமாக எண்ணுகிறார்கள். தனித்தனியா ஒன்றை மட்டும் பார்த்துவிட்டு சொல்கிறார்கள். அது அனைத்தையும் எழுதியவர் ஒருவர் என்றபோது அவர்களின் கணிப்பு தவறுதானே.

                 எங்க அலுவலகத்தில் ஒருத்தர் என்னிடம் கேட்டார் "மேடம் உங்களுக்கு என்ன பாடல்கள் பிடிக்கும் என்று சொல்லுங்கள் உங்கள் வயதை சொல்கிறேன்" என்றார். நான் சிரித்துக்கொண்டே  "முன்பு பியூ சின்னப்பா, பாகவதர், ஜெயராமன், பித்துகுழி முருகதாஸ், டிம் சௌந்தராஜன், பாடல்கள் பிடிக்கும். அப்புறம், இளையராஜா பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். இப்ப டி. இமான் இசை வரை பிடிக்கும் என்றேன்". அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஏனெனில் எனக்கு பொதுவாக இசை பிடிக்கும் அதனால் எந்த காலத்து பாடல் என்றாலும் என்னால் ரசிக்க முடியும் அப்படி இருக்க அதை வைத்து என் வயதை கணிக்க முடியாது. இப்படியான சம்பவங்கள் நிறைய உண்டு.

             அதேபோல் கவிதை எழுவது என்பதில் இந்த காதலுக்கும், நட்புக்கும் வார்த்தைகள் எப்போதும் ஒரேமாதிரியாக தான் அமையும். இதனால் சிலர் இது காதலா? நட்பா? என்று புரியாமலே இருக்கிறார்கள். இது சினிமா பாடல்களில் கூட அந்த ஒற்றுமையை நாம் காண முடியும். நெல்லிக்கனி படத்தில் இடம்பெற்ற பாடல்

நான் ஒரு கோவில் நீ ஒரு தெய்வம்
உன்னைத்தேடி நான் வந்தேன்
உன்னில் என்னை நான் கண்டேன்
உன்னால் இங்கு வாழ்கின்றேன்

அன்னையென்ன தந்தையென்ன
உன்னைக் கண்ட பின்னாலே
உயர்வென்ன தாழ்வும் என்ன
உந்தன் அன்பின் முன்னாலே
.... ..... .... ...
சொர்க்கம் நேரில் வந்தால் கூட
உன்னைவிட்டு போவேனோ
உனக்கென்று என்னை தந்தேன்
எனக்கென்று வாழ்வேனோ
.... ... ....

விழிமூடி தூங்கும்போது
உந்தன் வண்ணம் தோன்றாதோ

            இந்த பாடலின் வரிகளை படிக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது. இது நட்புக்கான வரிகளாக தோன்றுகிறதா? இதை கவிதையா படிக்கும்போது காதலனோ அல்லது காதலியோ சொல்கின்ற வார்த்தை போலத்தானே தெரிகிறது. ஆனால் இந்த படம் பார்த்தவர்களுக்குப் புரியும் அது நட்புக்கான வரிகள் என்று  இப்படிதான் நாம் நட்புக்காக எழுதப்பட்ட கவிதைகளை காதல் என்று பல நேரங்களில் புரிந்து கொள்கிறோம்.

             இது எப்படி என்று சிலர் கேட்பார்கள். இப்போதெல்லாம் எல்லோரும் ஆங்கிலத்திலே தான் பேசிக்கொள்கிறார்கள் முன்பு I LOVE U என்றால் ஒரு காதலனோ காதலியோ மட்டும் சொல்கின்ற வார்த்தையாக இருந்தது இப்போது அப்படி இல்லை i love u dad... i love u mom... love u friend... i miss u  என்று எல்லோரும் எல்லோருக்கும் பொதுவாக தான் சொல்கிறார்கள்.  இதை தமிழாக்கம் செய்து பாருங்கள் நான் உன்னை காதலிக்கிறேன் அல்லது நான் உன்னை தொலைக்கிறேன் என்று வரும் இது பொருந்துகிறதா? இப்படிதான் இன்றைய நிலை உள்ளது. இதை வைத்து நாம் யாரையும் அத்தனை எளிதாக கணிக்க முடியாது. அப்படியும் ஒருவரை கணிக்க முடியுமெனில்.


            சிலரால் மட்டும் முடியும் அது கடவுள் அவர்களுக்கு கொடுத்த வரப்பிரசாதம்.. இவர்களால் ஜோதிடத்தை இலகுவாக கற்றுக்கொள்ள முடியும். ஒருவர் பேசும்போதே எதற்காக இவர் பேசுகிறார் என்பதை இவரால் உணர முடியும். ஆனால் இவர்களுக்குதான் நிறைய கஷ்டம் ஏற்படும் அவர்களின் குணம் முன்பே தெரிந்துவிடுவதால்.  சில விஷயங்கள் முன்பே தெரிந்தாலும் கஷ்டம் தெரியாமல் போனாலும் கஷ்டம் இதுதான் நமது வாழ்க்கையில் பிரச்சனையே......

2 comments: