Wednesday 5 August 2015

அன்பு என்றால் என்ன?

அன்பு  என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? என்று எல்லோருக்குமே ஒரு கேள்வி எழும். நாம் காட்டும் அன்பு நிராகரிக்கப்படும்போது அல்லது நம்மை ஒதுக்கி வைக்கும்போதும்.  அன்பு காசு கொடுத்து வாங்கும் ஒரு பொருளா? இல்லை, அது ஒரு உணர்வு. காசோ, பணமோ, பொன்னோ, பதவியோ எதையாலும் வாங்க முடியாத ஒரு அற்புதமான உணர்வு. இது ஜாதி, மதம் பார்த்து வருவதில்லை. காசு, பணம் பார்த்து வருவதில்லை. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்த்து வருவதில்லை.  "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்ற வள்ளுவனின் கூற்றுபடி எங்கும் நிறைந்த ஒன்றுதான் அன்பு. அது எதையும் எதிர்பார்த்தோ அல்லது எந்த பயன்கருதியோ வருவதில்லை.


அது எப்படி ஒருவர் மீது நமக்கு அன்பு ஏற்படுகிறது? என்ன காரணம்? நமக்குள் கேள்வி எழும்.

பொதுவாக நமக்கு எல்லோரையும் பிடித்துவிடாது. சிலரை மட்டும் காரணமே இல்லாமல் பிடிக்கும், சிலரை அவர்கள் செய்கின்ற செயல்களைப் பார்த்து பிடிக்கும், சிலரை நம்மீது காட்டு அக்கறையைக் கண்டு பிடிக்கும், சிலரை நமக்கு ஆபத்தில் உதவும் போதும் பிடிக்கும். இந்த பிடித்தல் என்பது ஒரு காரணிதான். அதாவது நமக்கு பிடித்த அவர் நம் தந்தை சாயலில் இருக்கலாம், அல்லது தாயோ, அண்ணனோ, அக்காவோ, தங்கையோ, இப்படி ஏதோ ஒரு உறவு சார்ந்தோ இருக்கும் அதனால்தான் அவர்களிடம் ஒரு அடைக்கலத்தை நாடுகிறோம். முன் ஜென்மத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்த வரிகள் பொருந்தாது. அதாவது, நான் முன்பே சொன்னது போல் நாம் எல்லோரிடமும் சென்று பேசிடமாட்டோம் ஆனால் சிலரிடம் மட்டும் பேச தோன்றும் அது ஏன்? அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தமே இருக்காது நாடுவிட்டு நாடு கூட இருக்கலாம் ஆனால் நட்பு வைத்துக்கொள்வோம் அது ஏன்? அதாவது இதைதான் விட்டக்குறை தொட்டக்குறை என்று சொல்வது சம்பந்தமே இருக்காது அவர்களோடு  நட்புகொள்ள ஆசைப்படுவோம் இதைதான் முன்ஜென்ம பந்தம் என்கிறார்கள். நாம் முன்பே அவர்களை அறிந்திருக்கிறோம் அது நம் உள் உணர்வை தூண்டி நம்மை பேச வைக்கிறது. எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவர்களிடம் நாம் ஏன் தொடர்பு கொள்வதில்லை?

உண்மையான அன்பா? உண்மையான நட்பா? என்று பலருக்கு சந்தேகம் எழும்.

சிலர் சொல்வார்கள் நட்பு என்றாலே அது  உண்மையானதுதான் இதில் பொய் எங்கிருந்து வரும் என்பார்கள். காதலில் பொய் இருக்காலம் நட்பில் இருக்காது என்பது பலரின் கருத்து. நட்பு என்பதை அவர்கள் உணரவில்லையா அல்லது தெரியவில்லையா என்று புரியவில்லை. உண்மையான நட்பு என்பதற்கு திருக்குறலிலும், நாலடியார் பாடல்களிலும், இலங்கியங்களிலும், காப்பியங்களிலும் உண்மையான நட்புக்கு ஆயிரம் எடுத்துக்காட்டுக்கள் இருக்கிறது. பொய்யான நட்பு ஒன்று இருப்பதால்தானே அங்கே உண்மை என்ற ஒன்று வருகிறது. பிறகு எப்படி பொய்யான நட்பு இல்லை என்று கூற முடியும்? கூட இருந்தே குழி பறிப்பது, நம்பிக்கை தூரோகம் செய்தல், பயன் கருதி பழகுதல் இது எல்லாமே பொய்யான நட்புதானே? "கூடா நட்பு கேடாய் முடியும்" என்று சான்றோர்கள் நம்மை எச்சரித்துள்ளார்கள் ஆனால் நமக்குதான் அது புரிவதில்லை.



இந்த அன்பை எப்படி கண்டுப்பிடிப்பது?

முன்பே சொன்னதுபோல் காரணம் இல்லாமலே சிலர் மீது பிரியம் வரும்  காரணமே இல்லாமல் பேசுவார்கள், பார்க்க நினைப்பார்கள், கவலைப்படுவார்கள், அக்கறை கொள்வார்கள்,  அன்பை வெளிப்படுத்த பரிசு பொருட்களை கொடுப்பார்கள், காரணம் இல்லாமல் கோபப்படுவார்கள், அன்றாடம் நடக்கின்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள், எங்கே சென்றாலும் சொல்லிவிட்டு செல்வார்கள். சாப்பிடும் போதும், தூங்கும்போதும், எங்காவது செல்லும்போதும் உங்கள் நினைவுக்கு வந்துபோகிறாரா? எல்லாவற்றுக்கும் மேலாக வெளியூர் சென்றாலோ அல்லது உள்ளூரில் இருந்தாலும்   அதிகாலையோ, நடு இரவோ எந்த நேரமாக இருந்தாலும் உங்களை நினைப்பவராக இருந்தால் அவர்தான் உங்கள் அன்புக்குரியவர், அல்லது  அவரே ஆத்ம நண்பர்.

காதலோ? நட்போ சண்டையில் இல்லாமல் இருப்பது இல்லை அதற்கு என்ன தீர்வு?

உங்கள் அன்புக்குரியவர், பாசத்துக்குரியவர், உங்களை உயிராக நினைப்பவர் உங்களோடு பேச மறுத்தால், அல்லது நீங்கள் இருக்கும் இடத்தில் கூட அவர் இருக்க விருப்பம் இல்லாதவராக இருந்தால்.   நீங்கள் ஏதோ ஒருவகையில் அவர் மனதை காயம் செய்திருப்பீர்கள் அது என்னவென்று கண்டிபிடியுங்கள்.

காதலோ? நட்போ விட்டுக்கொடுக்கலாம், விட்டுப்பிடித்தல் கூடாது.

முதலில் அலட்சியம் கூடாது இவர்தானே பார்த்துக்கொள்ளலாம், எங்கே சென்றுவிட போகிறார் எங்கே சுற்றினாலும் நம்மிடம்தான் வருவார் என்ற அலட்சியம் வேண்டாம்.

இவருக்கு வேறு வழியில்லை என்றோ நம்மைவிட்டால் ஆள் இல்லை என்றோ எண்ணுதல் வேண்டாம்.

முடிந்தவரை அன்பைக் கொடுத்து அன்பை பெருங்கள். நீங்கள் எப்படி ஒருவரிடம் அன்பை எதிர்பார்க்கின்றீரோ அதே அன்பை அவரும் உங்களிடம் எதிர்பார்ப்பார்கள். அவர் உங்களுக்கு தாயானால் நீங்களும் அவருக்கு தாயாக வேண்டும். அன்பும், பாசமும் இரண்டு இடத்திலும் பெருக வேண்டும் அது ஒரு இடத்தில் மட்டும் ஏற்பட்டால்  நீண்ட நாள்கள் செல்லாது.  எப்போதும் ஒருவரே விட்டுக்கொடுத்து செல்லமாட்டார் நீங்களும் விட்டுக்கொடுக்க வேண்டும்.

அன்பையும், பாசத்தையும் கடையில் வாங்க முடியாது. ஆனால் கவலைப்படும் உள்ளத்திற்கு மருந்தானது. நிம்மதியை தரக்கூடியது, சந்தோஷத்தை அளிக்கவல்லது, நமது வாழ்நாளை அதிகரிக்க செய்வது. அன்பு துணையானது, ஆதரவானது, அன்பில்லாத ஒரு மனிதர் உலகத்தில் இருக்க முடியாது ஒரு வேளை அன்பில்லை என்றால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது.

வாழ்க்கையில் அன்பு மிக முக்கியம். நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் எங்கேயே யாரிடமோ நாம் அன்பென்ற சிறையில் அடைப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அதிலிருந்து யாரும் விடுபட நினைப்பதில்லை. அன்பை உணர்ந்தவர்கள் , பிறருக்கு கொடுப்பவர்கள் ஒருபோதும் கெட்டுபோவதில்லை.

 "அன்பே கடவுள்... அன்பே சிவம்..."

2 comments:

  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Brawin jack

    ReplyDelete