Thursday 27 August 2015

மனமே ஓ....மனமே நீ மாறிவிடு

              'ரசிப்பு என்பது தூரத்தில் இருந்து பார்த்தால் அழகு, அருகே சென்றால் ஆபத்து' உதாரணத்திற்கு சூரியன் பார்ப்பதற்கு பிரகாசமாய் எழுந்து வரும்போது பார்க்க அத்தனை அழகு, ஆனால் கிட்ட நெருங்கினால் சாம்பலாக்கிவிடும். மன ரீதியில் பார்த்தால் எது ஒன்று நம்மை அதிகம் ஈர்க்கிறதோ அது நம்மை அதிக பாதிப்புக்கு உள்ளாகும். அது எதுவாக இருந்தாலும், சரி அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதுபோல் எதையும் நாம் அளவோடு வைத்துக்கொள்ள வேண்டும். அது அன்பாக இருந்தாலும் சரி, ஆசையாக இருந்தாலும் சரி.


            அன்பும், ஆசையும் இருபக்கமும் ஏற்படுமாயின் எந்த ஆபத்தும் இல்லை. ஒரு பக்கம் மட்டும் இருந்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.  அதிக கலை ஆர்வம் உள்ளவர்கள்தான் இது போன்ற விஷயங்களில் அதிகம் மாட்டிக்கொள்கிறார்கள். எப்படி என்றால்? ஓவியத்தின் மீது அதிக பற்றுள்ளவன் அந்த கலைஞன் மீது அதிக பற்றுள்ளவனாக மாறுவான். நாட்டியத்தின் மீது பற்றுள்ளவன் அந்த கலைஞன் மீது பற்றுள்ளவானாக மாறுவன். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அந்தந்த துறை சார்ந்த பற்றாளர்களுக்கு கலைஞனோ அதற்கு ரசிகனோ கண்டிப்பாக இருக்கும் பட்சத்தில் ஒரு கலைஞன் மீது ரசிப்போடு நின்றுவிட்டால் பிரச்சனை ஒன்றுமில்லை அதையும் தாண்டி உரிமை எடுத்துக்கொண்டால் மன உளைச்சல் நிச்சயம் உண்டு. அது அவர்கள் பழகும் விதங்களைப் பொறுத்து அமையும்.

            ஒரு கலைஞனுக்கும், ரசிகனுக்கும் இடைப்பட்ட தூரம் என்பது அந்த துறைசார்ந்து இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை அதையும் தாண்டி போகும்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.  சினிமாவை எடுத்துக்கொண்டால் வெறித்தனமான ரசிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இதில் முட்டாள்தனமான விஷயமெனில் ஒரு நடிகனுக்காக உயிரையும் கொடுக்கிறான் என்றால் அவனின் அன்பு எத்தகையது? அவனின் தியாகம் எத்தகையது? அவனின் உயர்ந்த எண்ணம் எத்தகையது? ஆனால், இவையாவும் அந்த நடிகனுக்கு தெரியுமா? தெரிந்தாலும் அதை எப்படி அந்த நடிகன் ஏற்றுக்கொள்வான்? இப்படி பலவிதமான பிரச்சனைகளை நம்மிடையே இருக்கிறது.

             "அந்த நடிகனை பொறுத்தவரை இந்த ரசிகனின் மரணம் என்பது ஒரு செய்தி" அவ்வளவுதான். ஆனால், அந்த ரசிகன் அந்த நடிகனுக்கு ஒரு பிரச்சனை என்றால் இவன் தூங்கமாட்டான், சாப்பிடமாட்டான் தன்னைப்பற்றி எதையும் கவலைப்பட மாட்டான். தன் சிந்தனை முழுவதும் அந்த நடிகனைப் பற்றியே சுற்றி சுற்றி வரும். இது அந்த நடிகனுக்குத் தெரியுமா? தெரியாது. இப்படிதான் வாழக்கையில் சிலர் ரசனை என்ற ஒன்றால் தனது வாழக்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். ரசனையை ஒரு எல்லைக்குள் வைத்துக்கொண்டால் எந்த தொல்லையும் உங்களை நெருங்காது.

           மலையின் உச்சி அழகானது, ஆர்வத்தில் அதில் ஏற நினைத்தால் சில அவஸ்த்தைகளை சந்திக்க நேரிடும். அதன் பாதை கரடுமுரடானது சிலர் மட்டுமே அதன் உச்சியை அடைகிறார்கள்.



          மனம் என்பது சில சமயம் நம்மை ஆளும், சில சமயம்  மனத்தை நாம் ஆளுவோம். இதில் நீங்கள் எதுவாக இருக்க ஆசைப்படுக்கின்றீர்கள்?  

No comments:

Post a Comment