Thursday, 30 July 2026

சம்பா நண்டு எப்படி இருக்கும்

 

 எத்தனை பேருக்கு இந்த நண்டு பிடிக்கும்..? இதன் சுவையை அடிச்சுக்கவே முடியாது அப்படி இருக்கும் எழுத்துக்களால் வடிக்கவே முடியாதே அந்தளவுக்கு இருக்கும்.. இதன் கால்கள்தான் ஹைலைட் இரண்டு கால்களும் நம் கை பெரிதில் இருக்கும் கால்களுக்கு தான் காசு.. வீட்டில் நண்டு சமைத்தால் இந்த கால் வேண்டும் என்று அடம் பிடித்து அழுதவர்கள் ஏராளம் 90s கிட்ஸ்க்கு இந்த அனுபவம் நிறைய இருக்கும்.. சிக்கனில் இப்பதான் லாலிப் பப்புன்னு கண்டு பிடிச்சு சாப்பிடாறாங்க ஆனால் நாங்க அப்பவே நண்டு காலில் லாலி பப்புன்னு சாப்பிட்டவங்க.

.

இந்த நண்டின் நெறி கூடுதலான சதைப்பற்றோடு இருக்கும்.. சாப்பிடும் போது ஒருவிதமான இனிப்போடு இருப்பது போல் இருக்கும் அதை சாப்பிட்டவங்களுக்கு கண்டிப்பா தெரியும்.. அதாவது கடல் நண்டை விட இதுவும் கடல் நண்டு மாதிரிதான் இது கடற்கரையில் வளரக்கூடியது... கடித்தால் கையே துண்டாகும் அந்தளவுக்கு பயங்கரம் ஆனால் அதன் சுவையோ அதைவிட பயங்கரமா இருக்கும்...


அந்த காலை கடித்து சாப்பிடுவது ரொம்ப கஷ்டம் அறுவா கொண்டு உடைத்து சாப்பிடுவோம் அந்தளவுக்கு கெட்டி ஒரு பத்து வருசத்திற்கு முன் ஒரு நண்டு 50, ,100 க்கு வாங்கினோம் இப்ப ஒரு நண்டு 1000 க்கும் மேல விலை போகுது.. இப்ப இந்த நண்டு கிடைப்பது அரிது எல்லாவற்றையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.... அதனால் நமக்கு கிடைப்பதில்லை அதோடு விலை நம்மை கிட்ட நெருங்க விடுவதில்லை... முத்துப்பேட்டை தம்பிக்கோட்டை அருகே உள்ள சுந்தரம் நசுவிணி ஆற்றிலும், ராஜாமடம் நசுவிணி ஆற்றிலும் இந்த நண்டுகள் மணலில் பதுங்கி கிடக்குமாம்... ஈசியா பிடித்து வருவார்களாம் எங்க மாமா அடிக்கடி சொல்வார்..

ஒரு நேரத்தில் ஈசியா கிடைத்த உணவுகள் இப்ப அதிக விலைக்கு விற்பதால் வாங்கி சமைப்பதற்கு முடிவதில்லை... யாரெல்லாம் இந்த நண்டு சாப்பிட்டு இருக்குறீங்க யாருக்கெல்லாம் பிடிக்கும்..? யாரெல்லாம் விலையின் காரணமாக சாப்பிடாமல் இருக்குறீங்க என்பதையும் சொல்லுங்க... கடல் உயிரனங்களில் அதிக சத்து உடையது நண்டு, இறால்,  திருக்கை, மத்தி, சூரை இவைகள் தான்... 

Wednesday, 29 July 2026

சுகிசிவம் அவர்கள் சொன்ன ஜோக்

ஒரு குட்டியான நகைச்சுவை கதை எப்பவோ கேட்டது சுகிசிவம் அவர்கள் சொன்னது. 

நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு நண்பர்கள் சந்தித்து கொண்டார்களாம், அந்த 
நண்பரை வரவேற்க வாசலிலே காத்திருந்து வந்தவுடன் கட்டித்தழுவி வீட்டுக்குள் 
அழைத்து போகும் போது அவரோட மகன் ஓடியாடி விளையாடி கொண்டு இருந்தானாம் வந்த 
நண்பரை அவனை பார்த்துவிட்டு சொன்னாராம் "அடடே... உம்பையனா? குண்டா 
கொழுகொழுன்னு  நல்லா இருக்கானே..." என்று சொல்லி வாய் மூடவில்லையாம் ஓடி 
வந்த பையன் 
கீழே விழுந்து கையை ஒடித்துக்கொண்டானாம் அப்பவே அவருக்கு மனதில் 
சுருக்கென்று தைத்ததாம் என்னடா இவன் சொன்னதும் இப்படி ஆச்சே என்று. 

அதன் பிறகு அந்த நண்பரை அழைத்து டைனிங் டேபில் அமர வைத்து வகை வகையாய் 
இலையில் சாப்பாடு, கூட்டு, பொறியல், பாயசாம், சுவிட், பழங்கள் என நிறைய 
வைத்து சாப்பிட சொன்னார்களாம் 
உடனே வந்த நண்பர் சொன்னாராம் "அடடே... சாப்பாடெல்லாம் அமர்க்களமா 
இருக்கே... தினமும் ஒரு நேரத்திற்கு இவ்வளவுமா சாப்பிடுறீங்க..?" 
என்றாராம். உடனே இவர் என்னாகுமோ தெரியலேயேன்னு நினைக்கும் போதே அங்கே 
வைத்திருந்த ஜக்கில் கை பட்டு சாப்பாட்டில் தண்ணீர் கொட்டிவிட்டதாம்.

அவருக்கு அப்போதே புரிந்து விட்டது இவர் இந்த மாதிரி எதிர்மறையான விஷயங்கள்
 சொன்னால் உடனே நடந்து விடுகிறதே என்று நினைத்தவர் இவரை வைத்து ஒரு நல்ல 
விஷயம் செய்வோம் நம்ம வயலில் நிறைய களை இருக்கிறது அதைப் பார்த்து எவ்வளவு 
களை இருக்கிறது என்று சொன்னால் களை மொத்தமும் அழிந்துவிடும் நமக்கும் களை 
எடுக்கிற கூலி மிச்சம் என்று நினைத்தப்படி 
சாப்பிட்டு முடிந்ததும் தன்னோட வயலுக்கு அழைத்து சென்றார். 

இந்த வயலைப் பாருங்க உங்களுக்கு என்ன தோணுது என்றார். வந்த நண்பர் உடனே 
சொன்னார் "இவ்வளவு களையிலும் இந்த பயிர் எப்படி செழிப்பா வளர்த்திருக்கு 
பாருங்க..." என்றாராம். 

அழைத்து வந்தவருக்கு பகிர் என்றதாம் அப்புறம் என்ன அந்த பயிர் விளங்கவா 
போகுது சர்வ நாசம் தான். இப்படியான நண்பர்கள் நம்மிடையும் இருக்கிறார்கள் 
இவர்களை கண்டால் நாம் விளகிதான் இருக்க வேண்டும். நண்பனுக்கு கஷ்டம் 
வந்தால் ஆறுதல் சொல்ல வேண்டும் அதற்காக இவ்வளவு கஷ்டத்திலும் நோய் நொடி 
இல்லாம நல்லா இருக்குறீயேன்னு சொன்னா எப்படி இருக்கும்.   

கல்லடி பட்டாலும் கண்ணடி படகூடாது என்று சும்மாவா சொன்னார்கள்.

- வீ. சந்திரா துவரங்குறிச்சி

மீனாட்சி சுந்தரேஷர் ஆலயம் துவரங்குறிச்சி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் இராம சமுத்திரம் என்று அழைக்கப்படும் துவரங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷர் ஆலயம் அமைந்துள்ளது. பசுமை நிறைந்த இடத்தில் செந்தாமரை குளக்கரையில் அமைந்திருக்கிறார் எம்பெருமான் ஈசன். இந்த கோவிலில் பிரதோஷம், சிவராத்திரி போன்ற பூஜைகள் தவறாமல் நடந்து வருகிறது. சங்கரர் இந்த குளத்தில் தாமரை மலர்களை பறித்து சிவனுக்கு பூஜை செய்ததாக வரலாறு சொல்கிறது. 
இந்த கோவில் பழுதடைந்த கிடந்த நிலையில் 2025 ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. ஒரு வருட பூர்த்தியும் நிறைவு பெற்றது இந்த கோவில் பட்டுக்கோட்டையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. துவரங்குறிச்சி செக்கடி பஸ் ஸ்டாப்பில் இறங்கி இடது புறமாக கோவிலுக்கு செல்லும் வழி உள்ளது. 
இந்த கோவிலுக்கு அனைவரும் வருக இறை ஆசி பெருக.. 

வீ. சந்திரா , துவரங்குறிச்சி