Friday 24 July 2015

சதுரகிரி ஆகாயம் மேலே பாதாளம் கீழே

நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.

நான்கு பக்கமும் மலைகளால்  சூழப்பட்ட வனப் பிரதேசம்.
சித்தர்கள் வாழ்ந்த புண்ணியபூமி பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம்.

சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில், உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க சுவாமி. ஒருமுறை தரிசித்தாலே நமது உள்மனதில் குடிகொண்டு விடுகிறார்.


லட்சாதிபதியானாலும் சரி, வேறு யாரானாலும் சரி, மகாலிங்கரைத் தரிசிக்க நடையாகத்தான் மலையேறிச் சென்றாக வேண்டும். வேறு வழியில்லை. காரோ, கட்டை வண்டியோ, அவ்வளவு ஏன் ஹெலிகாப்டரில் கூட சென்று இறங்க முடியாது.

இயற்கை ஒளித்து வைத்திருக்கும் கானக அழகைத் தேடி தேடிக் காண்பதே மனதுக்கு சுகம்தான்.

ஆன்மிக வழியில் பக்தி நெறியில் மிகத் தேவையான விஷயம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை பரம விசுவாசம்! அதுதான் இறையருளை ஈர்க்கும் வலிமை பெற்றது.

அந்தவகையில் வான்மீகர் எட்டுக்குடியில் சமாதி கொண்டார். இது புகழ்பெற்ற முருகன் தலம். சிக்கல் எட்டுக்குடி, எண்கண் இந்த மூன்று தலத்து மூர்த்தியும் ஒரு சிற்பியால் வடிக்கப்பட்டது என்று சொல்லலாம்.

சீர்காழியில் சட்டைமுனி, ஞானசம்பந்தருக்கு உமையவள் ஞானப்பால் ஊட்டிய தலம் இது. கரூர் என்ற கருவூரில் கருவூரார்.

குடந்தை என்கிற கும்பகோணத்தில், கும்பமுனி அகத்தியர். பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் புனிதமிக்க திருவிடைமருதூரில் அகப்பேய் சித்தர்.

கமலாலயம் என்று புகழ்கொண்ட திருவாரூரில், கமலமுனி, மதுரையில் சுந்தரானந்தர். பொய்கை நல்லூரில் கோரக்கர்.

புகழ்மிக்க திருமலை திருப்பதியில் கொங்கணர், வைத்தீஸ்வரன் கோயிலில் தன்வந்திரி, அழகர் மலையில் இராமதேவர், அருணகிரியில் இடைக்காட்டுச் சித்தர், புகழ்பெற்ற போகர் பழநியில். சிதம்பரத்தில் திருமூலர், நாகப்பட்டிணத்தில் அழுகணி சித்தர், காஞ்சிபுரத்தில் காலாங்கி நாதர், திருப்பரங்குன்றத்தில் மச்சமுனி என்று சித்தர்கள் சமாதி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.

எது எப்படியென்றாலும் இவர்கள் அனைவருமே சதுரகியில் சஞ்சரித்தவர்கள் தவம் செய்தவர்கள் என்பதை அறியமுடிகிறது.

சித்தர்களோட தவபூமி அது. இப்பவும் அங்க சித்தர்கள் உலவறாங்க ஊட்டியில் இயல்பாகவே குளிர் இருக்கிற மாதிரி சதுரகிரியில் இயல்பாகவே அருள் இருக்கு.

கண்ணுக்குத் தெரியாமல் அரூபமாக சதுரகிரி வனத்துக்குள் இன்றும் இருக்கிறார்கள் சித்தர்கள்.

மகாலிங்கரை தரிசிக்க வரும் பக்தர்களை பாதுகாத்து , மனதார ஆசீர்வதித்து வழியனுப்பியும் வைக்கிறார்கள்.

சதுரகிரி செல்வது சாகசப் பயணம் மட்டுமல்ல, சந்தோஷம் தரும் ஆன்மிகப் பயணமும் கூட.

நீங்களும் ஒருமுறை சென்று வாருங்களேன். வருகின்ற  (ஆடிமாதம் 29 தேதி) ஆகஸ்ட் மாதம் 14.8.2015 வெள்ளிகிழமை அன்று ஆடி அமாவாசை.


லட்சம் பக்தர்கள் கூடுகின்ற ஒரே ஒரு நாள் இந்த ஆடி அமாவாசை. அந்த மக்கள் வெள்ளத்தில் நீங்களும் ஒருவராக கலந்து கொள்ள ஆசையா? அப்புறம் என்ன அதற்கான ஏற்பாட்டை ஆரம்பிக்க வேண்டியதுதானே..!

 மலை ஏறுவதற்கு தயாராகுங்கள் அதற்கு என்னென்ன தேவை என்பதை தேடி கண்டிபிடியுங்கள். அதற்கு இணையதளம் சதுரகிரி பற்றி நிறைய விடையங்களை உங்களுக்குத் தரும்.

 பயணத்திற்கு தேவையானவற்றை இப்போதே சேகரிக்கத் தொடங்குங்கள். நீங்கள் எந்த ஊரிலிருந்து சென்றாலும் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக சென்றால் இலகுவான வழி. அங்கிருந்து வத்திராயிருப்புக்கு பேருந்து வசதிகள் அதிகம் உண்டு. வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறைக்கு பேருந்துகள் நிறைய இருக்கிறது.  தாணிப்பாறையில் இருந்து நீங்கள் நடந்துதான் செல்ல வேண்டும். சென்று பாருங்கள் நீங்களே மலைத்துப்போவீர்கள். இப்படியொரு வனமா என்று அதிசியத்து போவீர்கள், 7 மலைகளை கடக்கவேண்டும். நம்மால் முடியுமா என்று தயங்காதீர்கள் முடியும் என்ற நம்பிக்கையோடு செல்லுங்கள் தானாக நீங்கள் மேலேறி செல்வீர்கள். நம்மால் எப்படி முடிந்தது என்று பிறகு யோசிப்பீர்கள். காலையில் 6 மணிக்கு மலை ஏறினால் மாலை 5 மணிக்கு கீழே இறங்கலாம். அடிவாரத்தில் இருந்து 14 கி.மீ தூரம் படிகள் இல்லாத முண்டும் முடிச்சுமான மலைப்பாதை. கரடுமுரடான வழிகள் செங்குத்தான பாறைகள், வழுக்குப்பாறைகள் என ஏராளம் உண்டு கடந்து செல்வது கொஞ்சம் கஷ்டம் தான் நம்பிக்கையோடு சென்றால் கஷ்டம் தெரியாது.

பின்குறிப்பு:

மழையாக இருந்தால் யாரும் செல்ல வேண்டாம். மழைவந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. கவனமாக செல்லுங்கள் கடவுள் உங்களை காப்பார்.

3 comments:

  1. இதுவரை சென்றதில்லை
    தங்கள் பதிவு அவசியம் செல்ல வேண்டும்
    என்கிற உத்வேகத்தைத் தருகிறது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி சென்று வாருங்கள்

    ReplyDelete
  3. மறக்க முடியாத முதன் முறையாக இரவில் கோவிலில் தங்கிய இடம் இது. சென்ற பொழுதும் சென்று வந்த பிறகும் நல்ல அனுபவத்தை தந்த ஸ்தலம். உங்கள் முந்தைய சதுரகிறி பதிவும் படித்தேன் அருமை.

    ReplyDelete