Sunday 12 February 2017

வழித்தவறி ஆடுகள்

         
                                       பகுதி- (1)


           இந்த கட்டுரையில் என் மனதை பாதித்த சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சிலருக்கு இந்த பதிவுகள் பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம் ஆனால் உண்மயை புரிந்து கொண்டால் போதும்.  உண்மை எப்போதுமே கசக்கும் ஏனெனில் அது நம்மை இனம் காட்டுகிறது என்பதால். சரி விஷயத்திற்கு வருகிறேன் நான் சிறுவயது முதல் இன்று பார்த்தவரை பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றிய சிறு கட்டுரை இது நடுநிலைமிக்க ஆண்கள், பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு இதை எழுதுகிறேன்.



             அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பெண்கள் ஏதோ ஒருவகையில் ஒரு போதை பொருளாகதான் பயன்படுத்தப்படுகிறாள். எனக்கு ஒன்று புரியவில்லை ஒரு ஆண் எத்தனை பெண்களோடும் இருக்கலாம். ஆனால் பெண் என்பவள் ஒரு ஆணோடு வசித்தால் மட்டுமே அவள் கற்புக்கரசி என்று பட்டம் சூட்டுகிறது. அப்படி இருக்கையில் ஒவ்வொரு ஆணும் ஏன் ஒரு பெண்ணோடு மட்டும் வாழ்ந்தால் எத்தனை நல்ல விஷயம். ஒவ்வொரு பெண்ணும் கற்புக்கரசியாவாள். ஆண்கள் ஏன் இன்னொரு பெண்ணிடம் தாவிச்செல்கிறார்கள் காரணம் என்ன? இது ஆணின் தவறா பெண்ணின் தவறா? பெண்களை எப்படி வேண்டுமென்றாலும் தொந்தரவு செய்யலாம் அதையும் தாண்டி ஒரு பெண் கண்ணகியாக வாழ வேண்டும் இல்லையா...?

             இன்று ஆண்களால் ஏமாற்றப்பட்டு கொலை செய்யப்படும் பெண்கள் ஏராளம். மிக மோசமான நிலையில் கொடூரமாக படுகொலை செய்யப்படுகிறாள். இந்நிலைக்கு யார் காரணம் பெண்ணா? ஆணா? யார் யாரை ஏமாற்றுகிறார்கள். இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. அந்த வகையில் நான் பார்த்த சில உண்மை நிகழ்வுகளை இங்கே பதிவு செய்ய போகிறேன். எனது வீட்டிற்கு அருகே புதிதாக ஒரு ஜோடி வீட்டை விட்டு ஓடி வந்திருந்தது. உடனே காதல் என்று நினைத்து விடாதீர்கள். அந்தப் பெண் இன்னொருவனின் மனைவி, அவன் இன்னொரு பெண்ணின் கணவன். இப்போது இவர்கள் இருவரும் கணவன் மனைவிகள்.

              ஒரு பத்து நாள் நன்றாக போனது ஒரு நாள் அந்த பெண் அய்யோ... அய்யோ என்று அலறுகிறாள். ஓடிச்சென்று பார்த்தால் எப்படிச்சொல்வது அவளின் பிறப்புறுப்பில் தீ வைத்துவிட்டான். ஏனென்று கேட்டால் அவனுக்கு அவள் மீது சந்தேகம் அவள் யாரோடும் பேசக்கூடாது அப்படி பேசினால் அடிவிழும் இதுதான் அந்த பெண்ணுக்கும் நேர்ந்தது. அதன் பிறகு அந்த பெண்ணை ஹாஸ்பிட்டல் கூட்டிபோய் காண்பித்து அவளின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் இருவரும் குறைவாக படித்த பதர்கள்.

              அடுத்து, சமீபத்தில் ஒரு பெண்ணை பார்த்தேன் உண்மையில் மிகுந்த வேதனை தருகின்ற ஒரு விஷயம்.  அந்த பெண் பார்க்க அழகாக இருக்கிறாள், அறிவாக இருக்கிறாள், வசதியாக இருக்கிறாள், இளமையாக இருக்கிறாள். ஆனால் ஒரு திருமணம் ஆன ஒருவனுக்கு ஆசை நாயகியாக இருக்கிறாள். இதில் கொடுமை என்னவெனில் அவனுக்கும் அந்த பெண்ணுக்கும் சிறு பொருத்தம் கூட இல்லை படிப்பு, அழகு, அந்தஸ்த்து,  வயசு எதிலும் இல்லை. எப்படி அந்தப் பெண் ஏமாந்து போனாள்? நீங்கள் நினைக்கலாம் அவள் பணத்திற்காக அவன் வசப்பட்டிருக்கலாம் என்று அதுதான் இல்லை இவள்தான் அவனுக்கு நிறைய பணம் கொடுக்கிறாள். ஒரு நல்ல கம்பெனியில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் அவள் எப்படி இப்படி ஒரு முடிவெடுத்தாள்?  அவள் சபலப்பட்ட பெண்ணாக இருந்தால் கல்லூரியில் படிக்கும் போதே அவளின் அழகிற்கும், அறிவுக்கும் எத்தனயோ பேர் அவள் பின்னே சுற்றியிருப்பார்கள் ஆனால் அந்த பெண் யாரையும் காதல் செய்யவில்லை. அப்படி காதலில் விழாத ஒரு பெண் இவனின் வலையில் எப்படி விழுந்தால். அவனுக்கு பணத்தை கொடுக்கிறாள், தேவைப்படும்போது மனைவியாக இருக்கிறாள் ஆனால் தாலிக்கட்ட சொன்னால் அவன் மறுக்கிறான்.

            அந்தப் பெண்ணை பார்க்கும் போது எனக்கு கோவமாக வருகிறது. அந்த பெண் என்னிடம் வந்து உங்களோடு நான் பேச வேண்டும் என் மனது நிம்மதி இழந்து தவிக்கிறது உங்களிடம் பேசினால் என் மனப்பாரம் குறையும் என்று நினைக்கிறேன் என்கிறது. நானோ பேச மறுக்கிறேன் காரணம் புரியவே இல்லை. தினமும் அந்த ஆளோடு சண்டை போடுகிறாள், என்னோடு வந்து விடு என்கிறாள், உனக்காக எவ்வளவு செய்தேன் என்கிறாள், எப்ப தாலி கட்டுவே எனக் கத்துகிறாள் அழுகிறாள் மற்றவர்கள் தன்னை என்ன நினைப்பார்கள் என்ற நினைவையே மறந்து கத்துகிறாள் கிட்டத்தட்ட மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை போல் நடந்து கொள்கிறாள். அவன் அதைப்பற்றி கண்டு கொள்வதே இல்லை. என்னிடம் வந்து ஏதாவது தீர்வு சொல்லுங்கள் என் பிரச்சினையை தீர்க்க ஒரு வழி சொல்லுங்கள் என்கிறாள். நான் எப்படி அந்த பெண்ணுக்கு தீர்வு சொல்வேன்...? அந்த ஆளை திருமணம் செய்து கொள் என்று சொல்வேனா? அல்லது அந்தாளை பிரிந்து வேறொரு ஆணை திருமணம் செய் என்று சொல்வேனா? மனதையும், உடலையும் இழந்த பெண்ணிடம் நான் எவ்வாறு சொல்ல முடியும்?

             இந்த கட்டுரையை எழுதிக்கொண்டு இருக்கும்போதே கதவை தட்டுகிற சத்தம் கேட்கிறது திறந்து பார்க்கிறேன். அந்தப் பெண் சிரித்தபடி நிற்கிறது. கோவிலுக்கு போயிட்டு இப்பதான் வந்தேன், ரொம்ப நல்லா இருந்தது எல்லாம் வெற்றிகரமாக முடிந்தது குளிச்சுட்டு வந்து பிரசாதம் தர்றேன். என்று சிரித்தபடி சொல்கிறது நானோ சிரிக்க கூட முடியாமல் தலையை மட்டும் அசைக்கிறேன். அவன் தாலிக்கட்ட மாட்டானா என்று கடவுளிடம் வேண்டுதல் வைக்கிறது. கடவுள் என்னைப் போன்றே விழிக்கிறான் போலும்...!

               - குரும்பாடு பட்டியயை தாண்டி....

2 comments: