Monday 3 July 2017

ராமேஸ்வரம் ஒரு யாத்திரை

         


             ராமேஸ்வரம் போக வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை.. போய் வரலாம் என்று முடிவு செய்தோம். அதுவும் அமாவாசைக்கு சென்றால் விசேஷம் என்றார்கள் அதன் படி அமாவாசை அன்று மூட்டை கட்டியாச்சு... பட்டுக்கோட்டையில் இருந்து காலை 8 மணிக்கு பஸ் ஏறினோம்.. அந்த நேரத்தில் நேரடியாக பஸ் இல்லை ஒருத்தர் சொன்னார் ராம்நாடு போய் ராமேஸ்வரம் போங்க சீக்கிரம் போய்விடலாம் என்றார். சரியென்று அரை மனதாக பஸ்ஸில் கிளம்பியாச்சு... அன்று அப்படி ஒன்றும் வெயில் இல்லை இதமாகவே இருந்தது.



                      மல்லிப்பட்டிணம் வழியாக தொண்டி போகையில் பஸ் பஞ்சர் இது என்னடா சோதனை என்று கொஞ்ச நேரம் பஸ்ஸிசில் உட்கார்ந்து இருந்தோம் நான் வாட்ச்சை பார்த்தப்படி உட்கார்ந்து இருக்கிறேன். அந்த நேரத்தில் இரமேஸ்வரம் செல்லும் பஸ் வந்தது, கண்டக்டர் கத்தினார் ராமேஸ்வரம் போறவங்க எல்லாம் அந்த பஸ்ல போங்க இது கொஞ்சம் நேரமாகும் என்றார். ஓடி போய் அந்த பஸ்சில் ஏறினோம் பஸ் போய் கொண்டே இருந்தது வழி நெடுகிலும் உப்பளம் பாத்திக்கட்டி பாத்திக்கட்டி... அழகாக இருந்தது கண்ணுக்கு எட்டியவரை உப்பளம் தான். தஞ்சாவூர் மக்களுக்கு விவசாயம் சோறு பொடுகிறது என்றால் ராம்நாட்டில் உப்பளம்தான் சோறுபோடுகிறது.

                   நான் ஆவலோடு ஜன்னல் ஓரத்தில் வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். ராம்நாடு முழுவதும் வெறும் கருவை காடுதான் அதிகமாக தென்பட்டது ஆனால் ராமேஸ்வரத்தை நெருங்கையில் தென்னந்தோப்புக்கள் கண்ணுக்கு மலர்ச்சியை தந்தது அதனைச்சுற்றி வேலியாக பனை மரங்கள் நட்டு வைத்திருந்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இங்கே நிறைய நொங்கு கிடைக்கும், பனங்கிழங்கு கிடைக்கும்.. என நினைத்துக்கொண்டே சென்றேன். ராம்நாட்டில் எப்போதும் தண்ணீர் பஞ்சம் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அதனால் தான் ராம்நாட்டு மக்கள் பஞ்சம் பிழைக்க எல்லோரும் தஞ்சை வருவார்களாம். செம்மறியாடுகளை ஓட்டிக்கொண்டு வயல்களில் கெடை போடுவது, சோம்பு சீரகம், கருப்பட்டி என்று விற்பனை செய்ய வருபவர்கள் ஏராளம். இவையெல்லாம் என் சிந்தையில் ஓடிக்கொண்டே இருந்தது, அங்காங்கே வழி நெடுகளிலும் கருப்பட்டி விற்பனை செய்து கொண்டு இருந்தார். இவற்றுக்கு நடுவே அந்த ஊர்களை கடக்கையில் இலங்கை வானொலி நண்பர்கள் பெயர் நினைவுக்கு வந்து வந்து போயின.

                   ஒரு வழியாக பஸ் மண்டபத்தை நெருங்கியதும் எனையறியாமல் கண்கள் விரிய வாவ்... என்றேன் நீல நிறக்கடல் அன்னை அழகாக காட்சி தந்தாள். அந்த பரந்து விரிந்த கடலில் சிறு சிறு குடிலா போட்டுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது அதனை வேடிக்கைப்பார்த்தபடி ஒரு சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டேன். சற்று நேரத்தில் இராமேஸ்வரம் என்று இறக்கி விட்டார்கள்.. சிறு பஸ் ஸ்டாண்டுதான் இறங்கியதும் அங்கே நின்ற ஒருவரிடம் கேட்டேன் கோவிலுக்கு எப்படி போவது என்றேன். அவர் ஒரு பஸ்சை கைகாட்டி அதோ நிக்கிது பாருங்க ஒன்னாம் நம்பர் பஸ் அதான் கோவிலுக்கு போகும் ஓடிபோய் ஏறிகோங்க என்றார். நாங்கள் அந்த பஸ்சை பிடித்து ஏறினோம் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தான் கோவில் வந்தது அங்கே இறங்கி ஒரு போலிஸ்காரரிடம் கேட்டேன் "சார் கடற்கரைக்கு எப்படி போகனும் என்றேன் அவர் "இப்படியே போங்க மேடம்.. "  என்றார். அப்புறம் கடற்கரைக்கு சென்று முதலில் தர்பணம் செய்தோம்.

               அங்கே இருந்த ஐயரிடம் " தர்பணம் செய்ய வேண்டுமே" என்றேன். பேஷா செய்திடலாம் முதல்ல கடல்ல நன்னா குளிங்கோ குளிச்சு வாங்கோ சிறப்பா செய்யலாம் என்றார். நான் அவரிடம் எவ்வளவு என்றேன் இரு நூறு என்றார். அம்மா கடலில் இறங்கினார். நான் கரையில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது ஒரு ஐயர்வாள் சிரித்த முகத்துடன் எனது அருகே வந்து நல்லா வரப்போறேள் நேரம் கூடி வந்திடுத்து என்று ஆசிர்வாதம் செய்தார். நான் நினைத்தேன் ஒருவேளை நம்மிடம் எதிர்பார்க்கிறாரோ என்று நான் இன்னொருத்தரிடம் தர்பணம் செய்ய ஒத்துண்டேன் என்றேன். அவர் சிரித்தபடி அதற்கில்லம்மா.. என்று மேற்கொண்டு பேசினார் என்ன வேலை செய்யுறீங்க, என்ன படிக்கிறீங்க என்று கேட்டார் நான் சொன்னதும் கண்கள் விரிய கேட்டுக்கொண்டார் இன்னும் நல்லா வருவேள். என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அந்த ஐயரிடம் இந்த பொண்ணை நல்லா கவனிங்கோ என்று சொல்லவும் செய்தார். பிறகு தர்பணம் முடித்த பிறகு என்னை ஆசிர்வாதம் சிறப்பாக கவனி்த்தார்கள். பிறகு எப்படி வழிபட வேண்டுமென்று வழிமுறைகளை சொன்னார் ரொம்ப பொறுமையாக... எனக்கு ரொம்ப மனநிறைவாக இருந்தது.

                  அதன் பிறகு ஈரத்துணியோடு கோவிலுக்கு வந்தோம்... ஒரு மணிக்கு நடை சாத்தியாச்சு, பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்த போது சரி தீர்த்தத்தில் குளிக்க விவரம் கேட்கலாம் என்று அங்கே நின்ற ஒருவரிடம் கேட்டேன் அவர் சொன்னார் தீர்த்தத்தில் நாங்க கூட்டிட்டு போறோம் ஒரு ஆளுக்கு நூறு ரூபாய் பொதுவழி அங்கே இருக்கு அதுக்கு 75 ரூபாய் தண்ணீ சும்மா தெளிச்சு விடுவாங்க ஊத்த மாட்டாங்க ஆனால் நாங்க நல்லா தலையில் தண்ணீர் ஊத்திவிடுவோம் எப்படி விருப்பமோ அப்படி போங்க என்றார். நாங்கள் சரியென்று அவர் பின்னே சென்றோம் ஒரு இடத்தில் அமர வைத்தார். மணி மூன்று ஆனாது ஒரு பெரிய க்யூ தயாராக நின்றது... அவர் எங்களிடம் பணத்தை வாங்கி கொண்டு அழைத்துச் சென்றார்.. பொதுவழியில் வந்தவர்களும் அந்த வரிசையில் வந்தனர். பிறகு அவர் சொன்னது போலவே இருபத்திரெண்டு தீர்த்தத்திலும் நன்றாக குளித்தோம். பிறகு உடை மாற்றும் அறைக்கு சென்று ஒருவருக்கு பத்து ரூபாய் வாங்கி கொண்டு உள்ளே விட்டார்கள்.. கொண்டு போன துணியை மாற்றிக்கொண்டு  ஈரத்துணியை கடலில் விட்டுவிட்டு நேராக சென்று எம்பெருமான் சிவபெருமானையும்,  அம்பாளையும் தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம். உள்ளே போட்டோ எடுக்க அனுமதியில்லை எனக்கு வாய்ப்பு இருந்தது ஏனோ எனக்கு மனம் இடம் தரவில்லை. இராமேஸ்வரத்தில் அந்த கட்டிட கலையின் அழகே தனிதான் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பு வாய்ந்தது போட்டோ எடுக்கவும் அனுமதி இல்லை என்பதால் நானும் அப்படியே வந்துவிட்டேன்...

இராமேசுவரம் யாத்திரை சிறப்புடன் முடிந்தது. அங்கே சுற்றி பார்க்க வேண்டிய இடம் நிறைய இருந்த போதிலும் நேரமின்மை காரணமாக உடனே புறப்பட்டோம். 

No comments:

Post a Comment