Saturday 23 April 2016

எனது நண்பன் என் வழிகாட்டி

          இன்று புத்தகத் தினம் நான் அடிக்கி வைத்திருந்த புத்தகங்கள் என்னைப் பார்த்து நக்கலாக சிரித்தன, என்னை இப்போதெல்லாம் சீண்டுவது இல்லையே என்னை மறந்து விட்டாயே ஆன்லைனில் எல்லாம் படித்துக் கொள்கிறாய் என்னை மறந்து விட்டாயே எனச் சொல்வது போல் இருந்தது. உடனே அதை சரி செய்து ஒரு போட்டோ எடுத்தேன். உண்மையில் இப்போது வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது.



           ஒரு நேரத்தில் தேடி... தேடி ... கடை கடையாக ஏறி இறங்கி புத்தகம் வாங்கிய காலம் உண்டு. மொத்தமாக வாங்கிய அத்தனை புத்தகத்தையும் ஒரே இரவில் படித்து விட்டு புத்தகம் இல்லாத போது சாலையின் ஓரத்தில் தூசியும், சேரும் படிந்த பேப்பரை தண்ணீர் ஊற்றி கழுவி காயவைத்து படித்த காலம் உண்டு அந்தளவுக்கு புத்தக பைத்தியம்.

           நான் சாப்பிட அமரும் போது புத்தகம் இல்லாமல் சாப்பிட்டது இல்லை இப்போது அந்த இடத்தை தொலைக்காட்சி பிடித்துக்கொண்டது. காலங்கள் மாற நானும் மாறிவிட்டேனா?  ஆனால் புத்தகத்தை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் பத்திரமாக வைத்திருக்கிறேன் சிலது புத்தக பூச்சிக்கு இறையான பிறகும் அதை தூக்கி வீச மனம் இல்லை. ஒரு துண்டு பேப்பர் கீழே விழுந்தாலும் மறுபடியும் அதுக்குள்ளேயே திணித்து வைக்கும் பழக்கம் இப்பவும் உண்டு. "அம்மா சொல்வார்கள் தேவையில்லாத புத்தகத்தை எடைக்குப் போட்டா என்ன ஏன் இடத்தை அடைச்சிட்டு இருக்கு " என்பார்கள். அம்மா புத்தகத்தின் அருகில் சென்றாலோ அல்லது நான் இல்லாத போது அந்த புத்தகம் கலைந்து கிடந்தாலோ கெட்ட கோவம் வந்துவிடும் உடனே சண்டை போட்டுவிடுவேன் ஏன் எனக்கே தெரி்யவில்லை.

           எனக்கு ஆசிரியர்கள் கற்றுத்தராத பாடங்களை நான் வாசித்த புத்தகங்கள் எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கிறது.  நேர்மையை, நியாயத்தை, உண்மையை, யாருக்கும் கெடுதல் நினைக்காத மனதை, உதவும் குணதவதை, எது நல்லது எது கெட்டது என்ற அறிவை எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்களின் மனங்களை படிக்க கற்றுத் தந்து இருக்கிறது. " ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது " என்பார்கள் ஆனால் அத்தனை அனுபவங்களை இந்த புத்தகம் கற்றுத் தந்து இருக்கிறது பெற்றதையும் பெறாததையும் கற்பனையிலும் நிஜத்திலும். இதைவிட ஒரு நல்ல நண்பன் எனக்கு வேண்டுமா என்ன?

           நல்ல புத்தகம் நம்மை நல்வழிப்படுத்தும் கெட்ட புத்தகம் கெட்ட வழியில் அழைத்துச் செல்லும். நல்லதும் கெட்டதும் நாம் தேர்வு செய்வதை பொறுத்து அமைகிறது. புத்தகத்தை தேர்வு செய்த எனக்கு நல்ல மனங்களை சேகரிக்க இயலவில்லை. ஏனெனில் அவர்களின் குணமும் மனமும் நான் படித்த புத்தகங்கள் கிட்ட சேர்க்க மறுக்கிறது. கண்ணாடி மாதிரி பிரதிபலிக்க செய்து விடுகிறது இந்த புத்தகம்.

          நல்ல புத்தகங்களை நீங்களும் வாசித்து பாருங்கள் உங்கள் மனமும் சிறு வயதிலே செம்மையாக்கும் பக்குவப்படச் செய்யும். ஆனால் மற்றவர்களின் பார்வையில் நீங்கள் இளமையில் முதுமையாக தெரிவீர்கள்.  ஏனெனில் உங்கள் பேச்சு அவ்விதம் இருக்கும் உங்களைத் தனித்துக் காட்டும். அதுவே உங்களுக்கு ஒரு பாதுகாப்புதான்.  என்ன நண்பர்களே புத்தகம் வாசிக்கத் தொடங்கிவிட்டீர்களா நீங்கள் வாசித்து சேகரிக்கும் ஒவ்வொரு புத்தகமும் உங்களுக்கு வழிகாட்டி ..


           நகமும் சதையுமாக இருந்து பிறகு தன்பத்தை தரும் நண்பனைவிட ஏடுகளாகவும் வார்த்தைகளாகவும் இருந்து ஆறுதல் தரும் புத்தகம் எவ்வளவோ மேல்.

No comments:

Post a Comment