Tuesday 20 March 2018

பள்ளிப் பருவத்திலே / குறுநாவல்

(வணக்கம் இதனால் வரை தொடராக எழுதி வந்த பள்ளிப் பருவத்திலே சிறுகதையை இணைத்து குறுநாவலாக  மாற்றியிருக்கிறேன் நன்றி)


            சுதா சில வருடங்களுக்கு பிறகு அவளது பள்ளித்தோழியான கலா வீட்டிற்கு இப்போதுதான் முதல் முறையாக செல்கிறாள் . கலா எத்தனையோ முறை அழைத்தும் சுதா போகவில்லை இன்றும் அவள் போயிருக்க மாட்டாள் சென்னையில் ஒரு வேலை விஷயமாக சென்றதால் அப்படியே அவளை பார்க்கலாமே என்று செல்கிறாள். கலாவிடம் ஏற்கனவே தான் வருவதாக சொல்லியிருந்தாள். ஒருவழியாக சென்னை வந்து இறங்கியதும் ஒரு ஆட்டோ பிடித்து அட்ரஸ் சொல்லிவிட்டு இப்போது கலா நம்மை எப்படி ரிசிவ் செய்யும் அதே போன்று இருக்குமா?  இல்லை வேறு விதமாக இருக்குமா என யோசித்தபடி இருந்தாள் சிறிது தூரம் வந்ததும் இந்த ஏரியா தானே என மெல்ல ஆட்டோவுக்கு வெளியே தலையை நீட்டி எட்டிப்பார்த்தாள் கொஞ்ச தூரத்தில் கலா நின்றுக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு ஆட்டோகாரரிடம் அதோ அந்த ஹேட்டுக்கு முன்னாடி நிப்பாட்டுங்க என்றாள். ஆட்டோவும் அங்கே ஓரங்கட்டியது அவர் கேட்ட ஐம்பதை திணித்துவிட்டு ஆட்டோவை விட்டு இறங்கினாள் சுதா.

              கலா வாயெல்லாம் பல்லாக "வா..வா.. இப்பதான் உனக்கு வர்றதுக்கு வழி தெரியுதா ஒரு போன் இல்ல ஒன்னும் இல்ல நானா பேசினாதான் உண்டு எம்புள்ளைங்க ரெண்டும் டெய்லி கேட்கும் என்னம்மா ப்ரண்டு ப்ரண்டுன்னு சொல்வே ஒரு போன் கூட பேசுறாங்க இல்லன்னு நான் அவங்களுக்கு ஏதாவது சொல்லி சமாளிப்பேன் " என்றபடி மூச்சுவாங்க மேலே கூட்டிச்சென்றாள் கலா.. பத்து பதினைஞ்சு குடித்தனம் இருக்கும் அபார்ட்மென்ட் வரிசையாக வீடு அதில் ஒரு வீட்டின் முன் நின்று செப்பலை இங்கேயே கழட்டி போடு வீட்டுல பூஜையறை தனியா இல்ல ஹால்தான் வைச்சுருக்கோம்  அதான் நாங்க உள்ள போடுறதுல்ல என்றபடி உள்ளே சென்றாள் கலா. சுதா அவள் பின்னே ஒன்றும் பேசாமல் சென்று கொண்டு வந்த பேக்கையும், வாங்கிட்டு வந்த பழங்களையும் அங்கே வைத்துவிட்டு நிமிர்ந்தவள் வீட்டை கண்களாலே அளந்தாள் சின்னதா ஒரு ஹால், அதையொட்டி ஒரு பெட்ரூம்,அதையொட்டி ஒரு ரூம் அதன் அருகே பாத்ரூம் அதன் அருகிலே சின்னதாய் ஒரு கிச்சன். இதையெல்லாம் பார்த்தபடி நின்றவளின் கையில் இந்த தண்ணிய குடி என்று சொம்பை திணித்தாள் கலா.



            "இப்ப எனக்கு வேணாம் முதல்ல நான் குளிக்கனும் "

             "சரி.. சரி.. பஸ்ல வந்து களைப்பு இருக்கும் நான் அதை மறந்துட்டேன் நீ போய் குளிச்சிட்டு வா பாத்ரூம்ல தண்ணி இருக்கு புது சோப்பு எடுத்து வைச்சுருக்கேன் அதான் பாத் ரூம் போ.. "என்றபடி கிச்சனுக்குள் புகுந்தாள் கலா.

              சுதா உள்ளே சென்று குளித்துவிட்டு உடைய மாற்றிக்கொண்டு பத்து நிமிஷத்தில் தலைய துவட்டியபடி வெளியே வந்தவள். "கலா அதுல பழம் இருக்கு குழந்தைகளுக்கு கொடு காலையிலே கடை ஒன்னும் திறக்கல இந்த பழம் தான் இருந்துச்சு வேற ஒன்னும் வாங்க முடியல" என்றாள்.

          .   "அடேங்கப்பா ... என்ன இவ்வளவு வாங்கி இருக்கே இங்கே விலை ரொம்ப அதிகமாச்சே ஏன் இவ்வளவு வாங்கினே? என்றவள் உனக்கு காபியா டீ யா ..?"

             "நான் இப்ப எதுவும் சாப்பிடுவதில்லை எல்லாம் நிறுத்தியாச்சு

              "அட பாவத்தை ஏன்? முன்னாடி நல்லா டீ குடிப்பியே... ஏன் நிறுத்திட்டியா என்ன நமக்கு டீ குடிக்கலன்னா தலைவலி வந்திரும் பழக்கமா போச்சு என்ன பண்றது " என்னவோ பெரிய கிழவி மாதிரி பேசியது. சுதா எதுவும் பேசாமல் சிரித்தபடி இருந்தாள் ஏனோ அவளுக்கு ஒன்றும் பேச தோன்றவில்லை பள்ளியில் படிக்கும் போது அதிகம் பேசுவது சுதாதான் கலாவுக்கு பேசவே தெரியாது. வாயில்லா பூச்சி இப்ப எப்படி பேசுது பாரேன் என நினைத்து வியந்து பார்த்தாள். திருமணம் ஆகிவிட்டல் பேசுவதற்கு ஒரு தைரியம் வந்துவிடுமோ முன்பை விட அதிகமா பேசுகிறதே நம்மால் ஒரு வார்த்தை கூட பேசாம முடியாமல் அமைதியாக இருக்கிறோமே ஏன் வருடங்கள் காட்டிய இடைவெளியா? அதான் நம்மால் பேச முடியவில்லையா? என்று மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

             "எப்ப வருவார் உன் ஆத்துக்காரர்.. "ஏதாவது பேச வேண்டுமே என்று ஆரம்பித்தாள் சுதா.

              "அவர் காலையில் மூனு மணிக்கு எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்கு போனார் அவர் பாவம்பா டெய்லி நின்னு நின்னு கால்வலி வந்திருது அவர் இல்லன்னா அங்கே ஒருவேலை நடக்காது இவர்தான் பொறுப்பா பார்த்துக்குவார் என்ன பண்றது ரெண்டு பிள்ளைகளை படிக்க வைக்கனுமே இங்கே சென்னையில படிக்க வைக்கனும்ன்னா கோடி ரூபா வேணும்." ரொம்ப சலிப்போடு சொன்னாள்.

               "அப்போ எப்ப வருவார் "

              "அவர் பன்னிரண்டு மணிக்கு மேலதான் வருவார் உச்சிகாலை பூஜை முடிஞ்சதும் வந்திடுவார். பிள்ளைங்க சாய்ந்திரம் தான் வரும் வந்ததும் ட்யூசனுக்கு வேற போகனும் அதுக்கு வேற பணம் கட்டணும்."

            "ஓ... அவ்வளவு நேரம் ஆகுமா? நான் இப்ப கிளம்பிடுவேன் அப்படியே வேலை முடிச்சுட்டு ஊருக்கு போயிடுவேன் அப்ப நான் அவங்களை பார்க்க முடியாது போல.."
என்ன நீ இப்படி சொல்றே நீ எப்ப வருவே எப்ப வருவேண்ணு புள்ளைங்க ரெண்டும் கேட்டுட்டே இருந்துச்சு அவர் ஏற்கனவே உன் மேல கோவமா இருக்கார் பெஸ்ட் பிரண்டு அடிக்கடி சொல்றே ஒருதடவை கூட நம்மாத்துக்கு வரவே இல்லை ஒரு போன் கூட பேசுறது இல்லன்னு அடிக்கடி சொல்வார் நீ இப்ப போறேன்னு சொன்னா அவர் கோவிச்சுக்குவார்"

              "இல்ல கலா நீ ஏதாவது சொல்லி சமாளிச்சுக்க வேலை முடிஞ்சதும் நான் எங்கே திரும்பி இங்கே வர்றது பஸ்க்கு லேட் ஆகும் இனிமே நான் அடிக்கடி வேலை விஷயமா சென்னை வறதான் போறேன் அப்ப வந்துட்டுப் போறேன் கோச்சுக்காதே"

            "சரி சரி இப்ப சாப்பிடுவியா இல்ல அதுவும் உனக்கு வேணாமா?"

           கலா சமைத்து இதுவரைக்கும் சாப்பிட்டது இல்ல இப்ப சாப்பிடாமல் போனால் கண்டிப்பா கோபம் வரும் எதுக்கும் ஒரு வாய் சாப்பிட்டு போவோம் "சரி சாப்பிட்டேன் போறேன் இப்ப சந்தோஷம் தானே..?

           இரண்டு தட்டு வைத்து அதில் அரிசி உப்புமா எடுத்து வைத்தாள் கலா "ஏய் எனக்கு கொஞ்சமா வை போதும்"

            "என்ன எது கொடுத்தாலும் வேணாம் வேணாம்னு சொல்றே என்னத்தான் உனக்கு பிடிக்குமோ தெரியலை... நீ நல்லா வாய்க்கு ருசியா சமைப்பே எனக்கு சரியா சமைக்க வறாது ஏதோ செஞ்சிருக்கேன் சாப்பிடு பிடிக்கலன்னாலும் நீ சாப்பிட்டுதான் ஆகனும் வேற வழி இல்ல"

             சுதாவுக்கு உப்புமா என்றாலே சுத்தமா பிடிக்காது இதில் அரிசி உப்புமா கடவுளே இதை நான் எப்படி சாப்பிடுவேணோ தெரியலையே என நினைத்தபடி கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு உள்ளே இறக்கினாள்.

            நீ இன்னும் மாறவே இல்ல சுதா அப்படியேதான் இருக்கே உனக்கு அது பிடிக்காது இது பிடிக்காதுன்னு வரிசையாக ஒன்று விடாமல்  சொல்லிக்கொண்டே இருந்தாள் கலா.

            "பரவாயில்லையே எல்லாவற்றையும் ஞாபகம் வைச்சிருக்கியே..."

            "உன்னைப்பத்திதான் நான் எல்லார்கிட்டையும் சொல்லிட்டு இருப்பேன்.. "

            "சரி கலா சாப்பாடு நல்லா இருந்துச்சு எனக்கு லேட் ஆச்சு நான் கிளம்பவா என்றபடி தட்டை எடுத்து போய் சிங்கில் கழுவி விட்டு கை துடைத்தபடி வந்து கடகடவென்று தலைசீவி கிளம்பினாள். பிள்ளைகளைதான் பார்க்காம போறேன் சரி நான் வரட்டா என்றபடி கொண்டு வந்த பேக்கை எடுத்தபடி படியில் இறங்கி நடந்தாள் சுதா. அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து அலுவலகம் சென்று வேலை முடித்து விட்டு இரவு பஸ் பிடித்து பயணிக்கையில் ஜன்னல் காற்று கேசத்தை களைக்க அதை காதோரம் ஒதுக்கியபடி யோசித்தாள் கலாவிடம் எத்தனை மாற்றம் பள்ளியில் படிக்கும் போது வாயே திறக்காது எல்லாவற்றுக்கும் சேர்த்து நான்தானே பேசினேன் அந்த கலாவா இது வாய் மூடாமல் பேசுவது.... ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டாள் இப்படி அடியோடு மாறிட முடியுமா? நான் ஏன் இப்படி வாயடைத்து போனேன் எப்போதும் தொணதொணவென்று பேசிக்கொண்டு இருப்பேனே ஏன் என்னால் பழையபடி பேச முடியவில்லை நிறைய வித்தியசாம் தெரிகிறதே உருவம், நடை உடை பாவனை இருவருக்கும் ஒரே வயதுதான் ஆனால் கலாவிற்கு வயது ஏறிய ஒரு தோற்றம் உடலும் பருத்து ஆளையே மாற்றி இருந்தது. எல்லாம் சரி மாறியது நானா கலாவா? ஆயிரம் கேள்விகள் சுதாவின் மனதை குழப்பினா திருமணம் ஆன பின்னும் எதையும் மறக்காமல் நம்மைப் பற்றி ஒன்றுவிடாமல் சொல்கிறதே எப்படி...  அப்படியே பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள் சுதா.

          ஏப்ரல் மாதம் தேர்வுகள் முடிந்து ஜாலியா வீட்டில் இருக்கலாம் என்று எல்லோரும் கனவோடு இருப்பார்கள் ஆனால் சுதா இந்த கோடை லீவில் டைப் ரைட்டிங் கிளாஸ் போகலாம் என்று முடிவு எடுத்தாள் பக்கத்து வீட்டில் இருக்கும் கலாவையும் அழைத்தாள் "ஏ... கலா லீவுல நான் டைப் ரைட்டிங் கிளாஸ் போகலாம்னு இருக்கேன் நீயும் வர்றீயா..?

            "டைப் ரைட்டிங் கிளாஸா...? அம்மாகிட்ட கேட்கனும் கேட்டுட்டு சொல்றேன்..." என்றவள் வீட்டுக்குள் சென்று அங்கே இருந்த ரேடியோவை எடுத்து அதன் காதை மெல்ல திருகினாள் கலா...

          " இன்னும் டைம் ஆகல இலங்கை ரேடியோ மூனு மணிக்குதானே ஸ்டேசன் திறப்பான்.."

          "மணி மூனு ஆச்சு அதை பார்த்துட்டுதானே நான் உங்க வீட்டுக்கு வந்தேன்... சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இலங்கை வானொலி டட்டடன்..டட்டடன்..டட்டடன்... என்று அதன் பிரத்யேக ஒலியோடு அன்றைய நிகழச்சியை தொடங்கியது... அறிவிப்பாளர் தெள்ளதமிழோடு அறிவிப்பு செய்யத்தொடங்கினார் இலங்கை வானொலி சர்வதேச ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனம் நேரம் மூன்று மணி... நேயர்கள் மூன்று மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்கலாம் நிகழ்ச்சியின் முதல் பாடலாக மனதிற்கு இதமான பழைய பாடல்களை நீங்கள் கேட்கலாம். இப்போது நீங்கள் கேட்கப்போகும் பாடல் இரும்பு திரை படத்தில் இருந்து நெஞ்சில் குடியிருக்கும் என்ற மனது மறக்காத பாடல் என்று கூறிய படி பாடலை ஒலிக்கவிட்டார் திருமதி ராஜேஸ்வரி சண்முகம்..

              ரேடியோவுக்கும் அந்தப்பக்கம் கலா இந்தப் பக்கம் சுதா.. ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்ததும் பேக்கை வைத்து விட்டு ட்ரெஸ் கூட மாற்றமால் முதலில் செய்கின்ற வேலை இலங்கை வானொலி கேட்பதுதான் அதன் பிறகு மற்ற வேலைகள் பாடல் கேட்டப்படி நடக்கும்.   இவர்கள் இருவரும் இணை பிரியாத நல்ல தோழிகள் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வார்கள் அந்தளவிற்கு நெருக்கம் இவர்களிடம். கலாவுக்கு சுதா என்றால் உயிர் அவள் வீட்டில் இருப்பதை விட சுதா வீட்டில்தான் அதிகம் இருப்பாள் கலாவின் அம்மாவோ அடிக்கடி சத்தம் போட்டுக்கொண்டே இருப்பாள் "அங்கேயே ஏன்டி போறே... அவா ஆத்துல எந்நேரமும் இருந்தால் பாக்குறவா என்ன நினைப்பா நம்மாத்துல எவ்வளவு வேலை இருக்கு பாட்டி வேற சத்தம் போட்டுன்டே இருக்கா.. நோக்கு காதுல ஏறுதே இல்லை என்னைய புடிச்சு திட்டின்டு இருக்கா.. நீ பாட்டுக்கு அவா ஆத்துல போய் உக்காந்துகிறே.." இப்படி தினமும் கலா கேட்கின்ற பஜனைதான் இது ஆனால் கலா கேட்கவே மாட்டாள். இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவாள் சுதாவும் பல முறை சொல்லியிருக்கிறாள் "கலா நீ இனிமே எங்க வீட்டுக்கு வராதே அதான் உங்கம்மா திட்டுறாங்க இல்ல உங்க வீட்டுலயே இருக்க வேண்டியதுதானே அப்புறம் ஏன் இங்க வர்றே... இந்த ரேடியோ உங்க வீட்டில் இருக்கட்டும் நீ நிகழ்ச்சி கேட்டுட்டு கொடுத்தா போதும் என்று இவளும் பல முறை சொல்லி பார்த்து விட்டாள் இவள் கேட்பதாகவே இல்லை சுதா சொல்லும் போதும் மட்டும் மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்டு பாவமாக பார்ப்பாள்.. உடனே சுதாவின் அம்மாவிடம் கம்ளைண்ட் செய்வாள் "அக்கா... பார்த்தீங்களா... உங்க சுதா என்னை எப்ப பார்த்தாலும் திட்டிட்டே இருக்கு நான் உங்க வீட்டுக்கு மட்டும்தானே வர்றேன்... உங்க சுதாவுக்கு என்னை பிடிக்கவே இல்லை.. ஸ்கூல்ல எல்லோருக்கும் ரெக்கார்டு நோட்டுல ட்ராயிங் வரைஞ்சு கொடுத்துச்சு ஆனா எனக்கு மட்டும் வரைஞ்சு தரவே இல்ல ரொம்ப கெஞ்சினதுக்கு பிறகுதான் வரைஞ்சு தந்துச்சு... நான் என்னக்கா பாவம் செய்தேன்.. என அழ ஆரம்பித்துவிடும் அந்தளவுக்கு வெகுளியான பெண்.

             சுதாவின் அம்மாவோ "நீ... ஏன் அதை திட்டிகிட்டே இருக்கே எல்லாருக்கும் வரைஞ்சு கொடுத்த நீ இதுக்கும் வரைஞ்சு கொடுத்தா என்னா கொறைஞ்சா போயிடுவே... நல்லா இருக்கும் போதே உனக்கு கிறுக்கு புடிச்சுருமா அது அழுது பாரு நீ அழதடா.. என்று சுதாவை திட்டிவிட்டு கலாவுக்கும் ஆறுதல் சொல்வார்.. சுதாவுக்கு கலா மீது பாசம் உண்டுதான் ஆனால் அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு அதே நேரத்தில் ஸ்கூலில் ஒரு டீச்சர் எப்பவும் கலாவுக்கு அதிகமாகவே மார்க் போடுவார் சுதா என்னதான் விழுந்து விழுந்து எழுதினாலும் கலாவை விட ஒரு ஐந்து மார்க் குறைவாக அந்த டீச்சர் போடுவார் அந்த கடுப்பு சுதாவுக்கு அந்த டீச்சருக்கு தானே ரெக்கார்டு வைக்க வேண்டும் நீ மார்க் எடுக்க நான் வரைந்து கொடுக்கனுமா என்ற கோபம் அதனால் தான் கலாவுக்கு மட்டும் வரைந்து கொடுக்க யோசித்தாள் சுதா.. ஆனால் மனசுக்குள் இரு.. இரு.. பப்ளிக் எக்ஸாம் வரும் இல்ல அதில் உன்னைவிட அதிகம் மார்க் வாங்கி காட்டுறேன் பார் என்று மனதிற்குள் ஒரு கர்வத்தோடு இருந்தாள். தினமும் வீட்டுப்பாடம்  பத்து மணிக்கு மேலத்தான் படிக்கத்தொடங்குவாள் சுதா. அதுவரை வரை புத்தகத்தை எடுக்க மாட்டாள் கலா அவங்க வீட்டுக்கு போன பிறகு இரவு  ஒரு மணி வரை படித்துவிட்டுத்தான் தூங்குவாள் படிக்கும் போது பக்கத்தில் ரேடியோவில் பாட்டு ஓடிக்கொண்டே இருக்கும் அப்படி படித்தால்தான் சுதாவுக்கு படித்தது போல் இருக்கும். ஆனால்,  கலா வீட்டுக்கு போனதும் படுத்து தூங்கிவிட்டு காலையில் மூன்று மணிக்கெல்லாம் படிக்க ஆரம்பித்து விடுவாள் இருவருக்கும் படிப்பில் மறைமுகமாக கடும் போட்டி இருக்கும். ஆனால் மற்ற நேரங்களில் அப்படி என்ன தான் பேசுவார்களோ தெரியாது பேசிக்கொண்டே இருப்பார்கள். கலா கொஞ்சம் அமைதி சுதா தான் எல்லாம் தெரிந்தது போல் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பாள் கலா அவள் பேசுவதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டே இருப்பாள். சில நேரங்களில் சுதாவுக்கு போராடித்து விட்டால் வம்பிழுக்க ஆரம்பித்து விடுவாள்.

              "ஏய்.. என்ன நானே பேசிட்டு இருக்கேன் நீ பேச மாட்டியா..? எனக்கு பேசி.. பேசி வாய் வலிக்குது எங்கே நீ ஏதாவது சொல்லு நான் கேட்கிறேன்.." என்றபடி அமைதியாகிவிடுவாள் சுதா.

               கலாவுக்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் "என்னைய என்ன சொல்ல சொல்றே...?" என்பாள் பாவமாக

              "ஏதாவது பேசு... நான் என்ன எல்லாம் தெரிஞ்சுகிட்டா பேசுறேன் நானும் உன்ன மாதிரிதானே உன் கூடதானே படிக்கிறேன் நீ எப்பவும் என் கூடதான் இருக்கிறே அப்ப ஏதாவது பேசு.." என்றபடி கையில் ஏதாவது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்து விடுவாள். கலா அமைதியாக இவளையே பார்த்துக்கொண்டே இருப்பாள் சுதா பேசுவாள் .. பேசுவாள்னு காத்திருந்துவிட்டு "நீ என் கூட பேசமாட்டியா ன்னு"பாவமாக மூஞ்சை வைத்துக்கொண்டு கேட்பாள் கலா.

                "என்ன பேச சொல்றே.."வெடுக்கென்று கேட்டாள்.

              "ஏதாவது பேசு.."

              "அதையேதான் நானும் சொல்றேன் நீ ஏதாவது பேசு டெய்லி நான்தான் டொட.. டொடன்னு பேசிட்டு இருக்கேன் இன்னைக்கு ஒரு நாள் நீ பேசு நான் கேட்கிறேன். "

               "எனக்கு என்னத் தெரியும் உனக்குத்தானே எல்லாம் தெரியும்.."

              "ஆமா இதையே சொல்லு மக்கு.. மக்கு.. உன்னை எனக்கு பிடிக்கவே இல்ல போ உங்க வீட்டுக்கு நான்தான் எரிஞ்சு விழுறேன்னு எங்கம்மாகிட்ட வத்தி வைக்கிற இல்ல அப்புறம் ஏன் எங்க வீட்டுக்கு வர்றே இனிமே நான் உன்கூட பேசமாட்டேன் என்னைய பேசு.. பேசுன்னு சொன்னே எனக்கு கெட்ட கோபம் வரும் பார்த்துக்கோ... " காரணமே இல்லாம் இப்படிதான் அடிக்கடி சண்டை வரும் அப்புறம் எதுவுமே நடக்காதது போல் பேசி ராசியாகிவிடுகள். கலாவின் வீட்டில் ரேடியோ இல்லை அதையே காரணமா வச்சு சுதாவின் வீட்டிற்கு வந்துவிடுவாள். அதோடு சுதாவின் வேடிக்கையான பேச்சு ரசனையோடு கதை சொல்லும் விதம் கலாவிற்கு ரொம்ப பிடித்து போனது. தினமும் பள்ளியில் நடக்கின்ற விஷயங்களை ஒன்றுவிடாமல் சொல்வாள் சுதா அதை எல்லோருமே ரசித்து கேட்பார்கள் சில நேரங்களில் வயிறு வலிக்க சிரித்து வைப்பார்கள் இதெல்லாம் சுதாவை பிடிப்பற்கு ஒரு காரணமாக இருந்தது. அதே நேரத்தில் கலாவின் குடும்பம் கொஞ்சம் வறுமையில் இருந்தது சாப்பாட்டிற்கே கஷ்டமான சூழ்நிலை ஒரு சின்ன ஹோட்டல் வைத்திருந்தார்கள் அதில் ஒரு கிலோ அரிசில் சாதம் வடிச்சு புளிசாதமும் தயிர் சாதமும் செய்து விற்பார்கள் கலாவின் அப்பா சமையல் வேலைக்கு சென்று வருகின்ற வருமானத்தில் வீட்டு செலவுக்கு வைத்துவிடுவார். அதிலே வாடகை பிள்ளைகள் படிப்ப மற்ற இதர செலவுகள் எல்லாமே அதில் அடங்கி இருக்கு. கலாவின் பாட்டி ஒரு பக்கம் வடகம் வத்தல் போட்டு வியாபாரம் செய்யும் கலாவிற்கு இரண்டு தம்பிகள் உண்டு . ஒரு நாளைக்கு ஆறு பேரு சாப்பிட வேண்டும் ஆனால் அந்தளவிற்கு அவர்கள் ஒரு நாளும் வயிறார சாப்பிட்டது இல்லை. எல்லோரும் சாதம் வடிச்ச கஞ்சிய கழனிபானையில் ஊற்றுவார்கள் ஆனால் சாதம் வடிச்ச கஞ்சியை இவர்கள் கீழே ஊற்றுவதே இல்லை அதை உப்பு போட்டு குடித்து பசியை அடக்குவார்கள். இந்த சூழ்நிலையில் கலா ஒருநாள் சுதா வீட்டிற்கு வர டீயும் பச்சியும் இவளுக்கு கட்டாயப்படுத்தி கொடுக்க அந்த பாசமும் கலாவிற்கு பிடித்து போனது பிறகு சாப்பாடு வரை வந்தது  கலா பிராமின் என்பதால் சூத்ரவா வீட்டில் சாப்பிடக்கூடது என்பது அவர்கள் வழக்கம் ஆனால் பசி அதை அறியுமா நான்வெஜ் சாப்பிடுற அளவுக்கு கூட வந்துவிட்டாள் கலா. இப்படிதான் இவர்கள் நட்பு நாளுக்கு நாள் வளர்ந்தது.

              எப்போதும் காலையில் சுதா எழும்போதும் கலா அங்கே இருப்பாள்.. "நீயா எப்ப வந்தே" என்றபடி எழுந்தாள் "நீ காலையிலையே வந்துட்டியா உங்கம்மா உன்னை திட்டப்போறாங்க வீட்டுல எல்லா வேலையும் பார்த்துட்டியா..? எனக் கேட்டப்படி முகத்தை கழுவ சென்றாள் சுதா.

             "நான் மூனு மணிக்கு எழுந்து படிச்சுட்டு வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டு வந்துட்டேன் அதுனால எங்கம்மா இப்ப கூப்பிடாது" என்றாள் அப்பாவியாக.

           "நான் எத்தனை தடவை உனக்கு சொல்லி இருக்கேன் இங்க வராதேன்னு உங்கம்மா மறுபடியும் திட்டட்டும் அப்ப இருக்கு உனக்கு"

          கலாவுக்கு என் சொல்வதென்றே தெரியவில்லை நைட்டுதான் கோபமா பேசுனிச்சு அதை மறந்து இருக்கும்னு நினைச்சா இப்பவும் அதே மாதிரி பேசுதேன்னு கொஞ்சம் வருத்தம் வந்தது ஆனால் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. கலாவிற்கு திக்கா அவர்கள் வீட்டில் காப்பி குடிச்சாலும் சுதா வீட்டில் வந்து ஒரு டம்ளர் டீ குடிச்சா தான் திருப்தியா இருக்கும்.

             சுதா ப்ரஷ் பண்ணிட்டு வந்து உட்கார்ந்தாள். சுதாவின் அம்மா டீ எடுத்துக்கொண்டு வந்து வைத்தாள் அப்படியே கலாவிற்கும் ஒரு டம்ளர் கொடுத்தாள்.

            கலா டீ யை வாங்கியபடி "நான் வேற டெய்லி நந்தி மாதிரி வந்து உட்கார்ந்துகிறேன் இல்லக்கா"என்றாள் சிரித்தப்படி.

           "என்ன கலா நீ எப்ப பார்த்தாலும் இப்படியே சொல்றே உன்னைய நான் அப்படியா நினைச்சு இருக்கேன் எனக்கு நீ இரண்டாவது பொண்ணுமாதிரி தான் இனிமே அப்படி சொன்னே எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்" என்றார் சுதாவின் அம்மா.

"இல்லக்கா.. நான் வேற டெய்லி வர்றேன் அதான் உங்க பொண்ணுக்கு பிடிக்கல போல என்னை கண்டாலே முகத்தை சுழிக்குது அதான் சொன்னேன்"

              "அதுக்கெடக்குது நீ கண்டுகாத உன் கிட்ட எரிஞ்சு விழும் நீ போனதும் கலா பாவம்னு  சொல்லி சொல்லி என்னை பாடாபடுத்திரும் அதைபத்தி உனக்குத் தெரியாதா?"

            "எனக்குத் தெரியும்க்கா.. அது என்ன சொல்லுதுன்னு பார்க்கதான் அப்படி சொன்னேன்"

            "ஏய்.. சரி சரி நான் இன்னைக்கு டைப் ரைட்டிங் கிளாஸ் போறேன் வர்றியா" கேட்டாள் சுதா.

             "இன்னைக்கா..? அம்மாகிட்ட கேட்டுட்டு வர்றேன் " என்றபடி ஓடினாள் கலா.

              சுதா காப்பியை குடித்துவிட்டு பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வெளியே வந்தாள். அம்மாவோடு கலாம்மா ஏதோ பேசிக்கொண்டு இருப்பது காதில் கேட்டது. "இதோ அதுகிட்டேயே கேளுங்க எனக்கு ஒன்னும் தெரியாது" என்றபடி கிச்சனுக்கு சென்றாள் சுதாவின் அம்மா.

              "என்னடி சுதா நீ ஏதோ டைப் ரைட்டிங் கிளாஸ் போறியாம் இவ வந்து சொல்லிட்டு அழுவுறா நீ போறதுன்னா போ.. அவளையும் சேர்த்து கெடுக்காத அவங்க அப்பாகிட்ட சொன்னா சத்தம் போடுவார். அவளை பன்னிரெண்டாவது வரை படிக்க வைச்சதே பெரும் பாடு உனக்கே தெரியும் நாங்க ரொம்ப கஷ்டத்துல இருக்கிறது நீ போறேன்னு சொல்லிட்டு அவளும் போறேன்னு அடம் பிடிக்கிறா? "

                "இல்ல கலாம்மா உங்களுக்கு இஷ்டம் இருந்தா அனுப்புங்க இல்லன்னா வேண்டாம் இதெல்லாம் கத்துகிட்டா ஏதாவது ஒரு கம்பெனில நல்ல வேலையா பார்க்கலாம் அதுகாகதான் நான் போறேன்." என்றாள் சுதா

              "மாசம் எவ்வளவு பணம் கட்டனும் ரொம்பவா? "

             "ரொம்ப அதிகமில்ல மாசம் ஐம்பது ரூபாதான் அப்புறம் எக்ஸ்சாம் பீஸ் கொஞ்சம் கட்டனும் ஆறுமாசம் கத்துகிட்டா போதும்"

                "சரி நீ போறதுன்னா போ.. அவங்க அப்பாகிட்ட கேட்காம நாம ஒன்னும் செய்ய முடியாது அவர் பாவம் அடுப்புல தினமும் வெந்து சாகுறாரு இவளுக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது நீ அவளுக்கு எடுத்து புரிய வை நமக்கு வீரலுக்கு தகுந்த மாதிரிதான் வீங்க முடியும் என்ன நீ சொன்னா கேட்பா சொல்லு.. நான் உன்கிட்ட பேசினதா காட்டிக்காத " என்றபடி புலம்பி விட்டு சென்றாள் கலாவின் அம்மா.

             சுதா படபடவென்று ரெடியாகி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தாள்.. எதிரே கலா மூஞ்சியை தொங்கப்போட்டுக்கொண்டு எதிரே வந்தாள். "என்ன கலா உம்முனு இருக்கே சரி நான் போயிட்டு வர்றேன் ஈவ்னிங் வந்து பேசுவோம்" என்றபடி நகர்ந்தாள் சுதா. கலாவின் கண்களில் கண்ணீர் நிறைந்து இருந்தது. சுதாவின் மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது இருந்தாலும் நாம என்ன செய்ய முடியும் கலா அம்மாவிடம் பேசுவோம் என நினைத்தபடி வந்தாள். பஸ் நிறுத்தம் வந்து சிறிது நேர காத்திருப்பிற்கு பின் ஒன்பதாம் நம்பர் பஸ் ஏறினாள் நல்ல கூட்டம் இருந்தது கால் வைக்க கூட இடமில்லை அந்த பஸ்க்கு என்ற காந்திருந்து ஏறும் பெண்கள் அதிகம் எல்லா நாளும் அந்த பஸ் கூட்டம் அதிகமாதான் இருக்கும் அந்த பஸ் ஓட்டுகிற டிரைவருக்காகதான் அத்தனை கூட்டம் இளம் பெண்கள் முதல் வயது போன ஆன்டிகள் வரை அடித்து பிடித்து ஏறுவார்கள். பஸ்ல போடுகிற பாட்டும் எல்லா பெண்களையும் கவரும் அந்த டிரைவரும் ஒரே பாட்டை திரும்ப போட்டு விடுவார் அந்த பஸ்சில் வர்ற எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் அது. அந்த டிரைவர் பஸ் கண்ணாடியில் பின்னால் நிற்கிற பெண்களை சைட்டு அடிப்பது வழக்கம் சில பெண்களிடம் வம்பு பேசி பல தடவை இதே ஏரியாவில் நிறைய அடி வாங்கியதும் உண்டு இருந்தாலும் அந்த டிரைவருக்கு இது பழகிப்போன  ஒரு விஷமாகிவிட்டது. சுதா ஒரு வழியாக பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் இறங்கி முருகன் டைப் ரைட்டிங் இன்ஸ்டியூட்டுக்கு வந்து சேர்ந்தாள். அங்கே ஒரு பெண் மிக அழகாக உட்கார்ந்து இருந்தாள் அவர் தான் அந்த இன்ஸ்டிடியூட் ஓனர் சுபலக்ஷ்மி பெயருக்கு ஏற்றார் போல் பார்ப்பதற்கு சினிமா நடிகை சுபலக்ஷ்மி போலவே இருந்தார். சுதாவுக்கு முதல் பார்வையிலையே பிடித்துப்போனது ஒரு வழியாக அட்மிஷசன் போட்டு டைப்ரைட்டிங்க மிஷினில் உட்கார்ந்து டீச்சர் சொல்லிக்கொடுக்க ஒவ்வொரு லெட்டராக தட்டத்தொடங்கினாள். சுதாவுக்கு இது புது அனுபவம் முதல் நாளே நன்றாக அடிப்பாதாக பாராட்டு வாங்கினாள் அதே சந்தோஷத்தில் வீடுவந்து சேர்ந்தாள் சுதா.

               வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக ட்ரெஸ் மாற்றிவிட்டு முகம் கை கால் கழுவிட்டு வந்தாள். அப்போது காலா ரொம்ப சந்தோஷத்தோடு வேகமாக வருவதை ஜன்னல் வழியாக பார்த்தாள் சுதா..

              "என்ன கலா சாப்பிட்டியா.."

              "இன்னும் இல்ல நீ வந்ததும் சாப்பிடலாம்னு இருக்கேன்.."

               "ஏன் என்னை விட்டுட்டு நீ சாப்பிடமாட்டியா சும்மா இந்த சினிமா டயலாக்கெல்லாம் விடாதே.. "

                "சரி.. சரி.. வந்ததும் ஏன் சுள்ளுன்னு பேசுறே கோபப்படாதே நான் என்ன சொன்னாலும் எரிஞ்சு விழுற .. அப்புறம் எங்கப்பாகிட்ட நான் கேட்டுட்டேன் என்னையும் டைப்ரைட்டிங் கிளாஸ்க்கு போகச்சொல்லிட்டார் நாளைக்கு நானும் வருவேன்..." என்றாள் சந்தோஷத்தோடு.

             "உங்கம்மா என்ன சொன்னாங்க..?"

              "அம்மாவும் போகச்சொல்லிட்டு "

               "சரி நான் சாப்பிடப்போறேன் எனக்கு பசிக்குது நீ சாப்பிடுறியா...?

              கலா ம்.. சொல்லவும் இல்ல ம்கூம்.. சொல்லவும் அமைதியா இருந்தாள் ஆனால் சாப்பிடவும் ஆசை.

            "என்ன சாப்பிடுறீயா இல்லையா..?"

             "சரி இங்கே சாப்பிட்டுட்டு அங்க போய் கொஞ்சமா சாப்பிட்டுக்கிறேன்.."

            "அங்கே போய் சாப்பிடு அப்புறம் சாப்பிடலன்னா உங்கம்மா சொல்வாங்க எம்புள்ள சாப்பிடவே மாட்டேங்கிறா.. என்னவோ தெரியல சாப்பிடவே மாட்டேங்குறான்னு வர்றவங்க போறவங்க எல்லார்கிட்டயும் சொல்வாங்க ஆனால் நீ இங்க சாப்பிடுறது அவங்களுக்கு தெரியல" சொல்லிவிட்டு நக்கலாக சிரித்தாள்.

               "நான் சாப்பிடுவேன் கொடு" என்றபடி சாப்பிடத்தொடங்கினாள் கலா. அப்புறம் சொல்லு இன்னைக்கு என்ன சொல்லி தந்தாங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சா..?

                "இல்ல பர்ஸ்ட் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு அப்புறம் கடகடன்னு அடிச்சுட்டேன் அங்கே ரம்யான்னு ஒரு அக்கா இருக்காங்க அவங்க செம அழகு தெரியுமா? நடிகை சுபலக்ஷ்மி மாதிரி இருந்தாங்க எனக்கு அவங்கள ரொம்ப பிடிச்சுருக்கு."

                "ம்...அப்படியா...? நாளைக்கு அவங்கள பார்த்து நீ இப்படி சொன்னேன்னு நான் சொல்றேன்"

               "நீ.. சொல்வியா எங்கே சொல் பார்ப்போம் என்கிட்ட மட்டும்தான் நீ பேசுவே மத்தவங்கிட்ட வாய் திறக்கவே மாட்டே நீ சொல்லப் போறீயாக்கும் ஹையோ.. ஹையோ... "

                ம்.. நான் சொல்வேன் அப்புறம் அதுக்கும் சேர்த்து என்னை திட்டுவே எனக்குத் தேவையா சொல்லு"

              "தெரியுதுல்ல அப்ப வாய மூடிக்கிட்டு சாப்பிடு"

               கலா வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு எங்கம்மா வந்தாலும் வரும் நான் போறேன் என்றபடி தட்டில் கையை கழுவி விட்டு அவசரமாக ஓடினாள். சுதா பொறுமையாக சாப்பிட்டுவிட்டு பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு அங்கிருந்த வானொலி பெட்டியை அருகில் இழுத்தாள் இன்னை என்ன கிழமை வெள்ளிக்கிழமை தானே இன்னை யார் அறிவிப்பாளர் நம்மாளு இன்னைக்கு வருவாங்க இல்ல ஆசையோடு வானொலி பெட்டியை திருகினாள். அவள் நினைத்தது போலவே அவள் மனதிற்கு பிடித்த அறிவிப்பாளர்தான் வானொலிக்கு அருகே உட்கார்ந்து கொண்டாள் திடீரென்று சத்தம் கொரகொரவென்றது ரேடியோ இந்த ரேடியோ எப்போதுமே இப்படிதான் இவங்க வர்றப்ப மட்டும் இப்படிதான் வருது மத்தவங்க வர்றப்ப ரொம்ப தெளிவா இருக்கு.. சொல்லிக்கொண்டே ரேடியோவின் தலையில் அப்படியும் இப்படியும் ரெண்டு தட்டு தட்டினாள் தட்டிய பிறகு கொஞ்சம் சத்தம் குறைந்தது. அப்போது இலங்கை வானொலியில் கேட்கும் போது சுதாவுக்கு தனி ஈர்ப்பு வந்தது. நிகழ்ச்சியை தவறாமல் கேட்டுவந்தாள் காலை எழுந்ததும் ரேடியோதான்.. அதில் வரும் விளம்பரம் தொடங்கி யார் யார் எப்ப வருவார்கள், எத்தனை நேயர்கள் பெயர்களை வாசிக்கிறார்கள் என்று எல்லாம் அத்துப்படி. அதுமட்டுமல்ல சில நேரங்களில் ரேடியோ வைக்கும் போது அறிவிப்பாளர் யார் வந்திருக்கிறார் என்று தெரியாது அப்போது ஒலிக்கும் பாடலை வைத்தே இன்று இந்த அறிவிப்பாளர் வந்திருக்கிறார் என்று சொல்லிவிடுவாள் அந்தளவுக்கு இலங்கை வானொலி மீது அப்படி ஒரு பைத்தியமாக இருந்தாள்  நிகழ்ச்சியை கேட்டு கேட்டு சுதாவுக்கும் எழுத வேண்டும் என்று ஆசை எழுந்தது எப்படி எழுதுவது எப்படி தொடங்குவது என்று ஒன்றும் புரியவில்லை. சில நேரம் எழுதிவிட்டு கிழித்துவிடுவாள் சிலவற்றை டைரியில் கவிதையாக எழுத தொடங்கினாள். அதை படித்து பார்க்கும் போது நன்றாக இருக்கிறது என்ற திருப்தி ஏற்பட்டது. சுதா ஒரு பேப்பர் பேனாவையும் எடுத்துக்கொண்டு என்ன எழுதுறது என்று யோசித்தாள் அந்த அறிவிப்பாளருக்கு ஒரு லெட்டர் எழுதினால் என்ன? ஏதாவது நினைப்பாங்களோ... ச்சீச்சீ.. எப்படி ஆரம்பிப்பது அன்புள்ள... இல்ல வேண்டாம் அன்புள்ள அக்கா... இல்ல வேண்டாம் அவங்க ஏதாவது நினைத்துக்கொண்டால் நம்மை கிண்டால் செய்தால் ஐயோ.... அசிங்கமா போயிடுமே.. என்றபடி ஒன்றும் எழுதாமல் தூக்கி ஓரமாக வைத்தாள்.
அப்போது இலங்கை வானொலியில் இந்த பாடல் ஒலித்தது "எல்லோர்க்கும் சொல்லும் பாட்டு சொன்னேனே உன்னைப் பார்த்து..." என்ன இன்னைக்கு மேடம் ரொம்ப சோகத்துல இருக்காங்க என்ற நினைத்தபடி வீட்டு வேலைகளை பார்க்கத்தொடங்கினாள் சுதா.

                மறுநாள் காலை வழக்கம் போல் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டும் டைப் ரைட்டிங்கிளாஸ்க்கு கிளம்பி கொண்டிருந்தாள் சுதா.. கலா ரெடியாகி வந்து கொண்டிருந்தாள். "ஏய் கலா நீ இந்த ட்ரெஸ் போட்டுட்டு வந்தியா நானும் அதே ட்ரெஸ்தான் நீ வேற போட்டு இருக்கலாம் இல்ல ரெண்டு ஒரே மாதிரி போட்டுட்டு போனா அங்கே யாராவது கேட்பாங்க இல்ல.."

              "கேட்டா சொல்லிட்டு போறோம் நாம ரெண்டு பேரும் ரொ...ம்...ப...... க்ளோஸ் ப்ரண்ஸ் னு" என்றாள் கலா.

            அந்த ட்ரெஸ் எடுத்தது பெரிய கதை கலாவுக்கு எப்பவும் அவங்க வீட்டுல துணி எடுப்பது கிடையாது அவங்க பெரியம்மா பொண்ணு, மாமா பொண்ணுங்க போடுற துணிதான் கலாவுக்கு எப்பவும் புது துணி.. சுதா தீபாவளிக்கு துணி எடுக்கும் போது ரொம்ப கட்டாயத்தின் பேரில் இந்த துணி எடுத்தார்கள் இந்த துணிதான் கலாவுக்கு முதல் முறையா எடுத்தது அதில் கலாவுக்கு ரொம்ப சந்தோஷம். சுதா ரொம்ப பேசி அவங்க அம்மாவை வாங்க வைச்சது. கலாவுக்கு ஸ்கைப்புளூ நிறத்தில் வெள்ளை கட்டம் போட்ட பாவாடை, ப்ளூ கலர் தாவணி சுதாவுக்கு அதே பாவாடை வெள்ளை நிற தாவணி. இப்போது இருவரும் ஒரே ட்ரெஸ் போட்டுக்கொண்டு கிளம்பினார்கள்.

               "கலா சீக்கிரம் வா பஸ் வந்திட போகுது இன்னைக்கு செம்ம கூட்டம் இருக்கும் போல.."

             ஆமா..ஆமா.. என்று சொல்லும் போதே ஒன்பதாம் நம்பர் பஸ் இவர்களை உரசியப்படி க்ரீச்சிட்டு வண்டி நின்றது. கலாவும் சுதாவும் ஓடிவந்து ஏறினார்கள் வழக்கம் போல் அதே கூட்டம் அதே பாட்டு அதே ட்ரைவர் மதியம்தான் வேற ட்ரைவர் வண்டி மாத்துவார். ஒருவழியா கால்மணி நேரத்தில் பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் பஸ் நின்றது. கலாவும் சுதாவும் கூட்டத்தை விளக்கியபடி முண்டியடித்து ஒருவழியாக வெளியே வந்தனர். கொஞ்ச தூரத்தில் முருகன் டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டியூட் போர்டு பளப்பளத்தது.

இருவரும் செருப்பை வெளியே கழட்டிவிட்டு உள்ளே சென்றனர். சுதா சுபலகஷ்மி  அக்காவிடம் கலாவை அறிமுகம் செய்து வைத்தாள் சுதா. சுபா அக்கா கேட்டார் ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸா ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டு இருக்குறீங்க என்று சிரித்தார்.

சுதா ஆமாம் என்று லேசாக வெட்கப்பட்டு சிரித்தாள்.

சரி..சரி.. போய் உட்காருங்க ரெண்டு பேருக்கும் ஒரே டைம் தானே என கேட்க தலையாட்டியபடி போய் உட்கார்ந்தார்கள் இருவரும். சுதா முதல் நாள் கொடுத்ததையே டைப் செய்தாள். கலாவுக்கு அனிதா  டீச்சர் எப்படி பேப்பர் வைக்க வேண்டும் எப்படி அடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். கலா கொஞ்சம் பயந்த சுபாவம் ஆதலால் தட்டு தடுமாறி அடித்துக்கொண்டிருந்தாள். கலாவுக்கு டைப் ரைட்டிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை விட சுதாகூட எப்பவும் இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை... அதனால் தான் சுதாவுடன் டைப் ரைட்டிங் கிளாஸ்க்கு அவள் வந்தாள்  எப்பவும் எங்கேயும் அவளோடு ஒட்டியே இருக்க வேண்டும் இதுதான் அவளின் ஆசை அந்த ஆசை  எத்தனை நாள் நீடிக்கும் அது சில காலம் தான் என்று பாவம் அவளுக்கே தெரியாது.

              நாட்கள் வேவகமாக ஓடியது வார இறுதி நாட்களில் க்ளாஸ் முடிந்தது. பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டை ஒட்டி ஒரு ஸ்வீட் கடையும் அதன் பக்கத்திலே புத்தகக் கடையும் இருக்கும். அந்த ஸ்வீட் கடையில் பீட்ரூட் அல்வா சுட சுட சூப்பரா இருக்கும் காரத்தில் மிக்ஸ்சரும் , காரா சேவும் நல்லா இருக்கும்  வார இறுதியில் லீவு என்பதால் கொஞ்சம் தின்பண்டங்களை வாங்குவது பழக்கமாகிவிட்டது. பஸ்க்கு கொடுக்கும் மிச்ச பணத்தில் கலா அந்த ஸ்வீட் கடையில் ஏதாவது வாங்குவாள். சுதா அருகில் இருக்கும் புத்தகடையில் நின்று அந்த வாரத்தில் வந்த அத்தனை நாவல்களையும் வாங்கிவிடுவாள்.  ராஜேஸ்குமார் நாவல்தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும் அடுத்து வித்யா சுப்பிரமணியம் பெண்களின் தன்னம்பிக்கை எழுத்தாளர். ரமணிச்சந்திரன், அனுதா ரமணன் இவர்கள் எல்லாம் குடும்ப எழுத்தாளர்கள் சுதாவுக்கு அதில் கொஞ்சம் விருப்பமில்லை அவர்களின் நாவல் கொஞ்சம் தான் படிப்பாள். ஆர். சுமதியும், ஆர். மணிமாலாவும் நட்புக்களை மேம்படுத்தி எழுதி படிக்கும் போதே கண்களில் கண்ணீர் வரவழைக்கும் எழுத்தாளர்கள் எத்தனையோ முறை படித்துவிட்டு சுதா அழுதிருக்கிறாள். அந்தளவிற்கு சுதா புக் பைத்தியம் இருவரும் வீட்டிற்கு வந்ததும். முதலில் கைகல் கழுவி விட்டு வந்து அமர்ந்து வீட்டில் இருக்கும் சாப்பாட்டை சாப்பிடுவார்கள் புத்தகம் ஒரு பக்கம் விரித்து இருக்கும் அதை படித்துக்கொண்டே சாப்பிடுவது சுதாவுக்கு பழக்கமாகிவிட்டது.  இடையிடையே படித்துக்கொண்டு சமைத்து சாப்பிடுவாள்  சுதாவுக்கு சின்ன வயதிலே சமைக்கும் பழக்கம் இருந்தது அம்மா வேலைக்கு சென்றுவிட்டால் இவள்தான் வீட்டில் எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும் அது ஒன்றும் பெரிய விஷயமாக இவளுக்கு தெரியவில்லை பத்து வயதில் தோசை சுடவும் தானாக தலைவாரிக்கொள்ளவும் கற்றுக்கொண்டாள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இவள் முதலில் வைத்த குழம்பு கருவாட்டு குழம்புதான் முதன் முதலாக வைத்ததாலே என்னவோ குழம்பு நல்ல ருசியாக இருந்தது. அம்மாவுக்கும் அண்ணனுக்கு ரொம்ப பிடித்து போனது. பிறகென்ன அநேக நேரங்களில் இவளே சமைக்கத் தொடங்கிவிட்டாள். ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பஸ் ஏறி பக்கத்து ஊரான மதுக்கூரில் சென்று மளிகைகடையில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மிளகா மல்லியை மில்லில்  அரைத்து கொண்டு சினிமா தியேட்டரில் அப்படியே படமும் பார்த்துவிட்டு வந்திடுவாள். சிறுவயதில் இருந்தே எல்லாவற்றையும் ஈசியாக கற்றுக்கொள்வாள் ஆனால் இவளை பார்ப்பவர்கள் அப்படி நம்ப மாட்டார்கள் ஏனெனில் உயரம் சிறியது இவளா இந்த வேலை பார்ப்பாள் என்று சட்டென்று யாருக்கும் நம்பிக்கை வராது. அப்பவே அப்படி என்றால் இப்ப சொல்லவா வேண்டும் தனியே சென்று எல்லாம் வாங்கிவிடுவாள் அப்படிதான் இப்பவும் ஆனால் கலாவுக்கு இதெல்லாம் புதுசு இவளை எங்கேயேயும் தனியாக அனுப்பவதில்லை வீட்டிலே இருக்கும் துணையில்லாமல் வெளியே செல்லும் தைரியம் இல்லை அப்படியே வளர்க்கப்பட்டாள். சுதா தைரியமாக வெளியே போய் வருவது சுயமாக முடிவெடுப்பது அவளின் பேச்சுக்கு அவள் அம்மா மதிப்பு கொடுப்பது எல்லாமே கலாவுக்கு பிடித்து போனது அதனால்தான் இவளோடு இருப்பதற்கும் பிடிப்பதற்கும் மற்றுமொரு காரணமாக இருக்குமோ என்னவோ. ஆனால் சுதாவுக்கு அப்படி ஒன்றும் கலா மீது அதிக பாசமென்று சொல்ல முடியாது ஏதோ கூடவே வருகிறாள், தினமும் வீட்டில் வந்து பேசுகிறாள் பேச்சு துணைக்கு எப்போதும் ஒரு ஆள் இருக்கிறது அந்தளவில் மட்டுமே அவளின் எண்ணம் இருந்தது.  ஒருவேளை கூடவே ஒட்டிக்கொண்டு இருப்பதால் அதன் அருமை தெரியாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால் அந்த பிரிவின் அருமை வெகு விரைவில் வரப்போகிறது என்று சுதாவின் மனதிற்கு தெரியவில்லை...


                 நட்பும் காதலும் கிட்டதட்ட ஒன்றுதான் காதலில் எப்படி பிரிவு , பரிவு, துன்பம்,இன்பம், எதிர்பார்ப்பு, ஏக்கம், சண்டை, கொஞ்சல் கெஞ்சல் இருக்கிறதோ அது எல்லாமே நட்பிலும் உண்டு ஆனால் இரண்டிற்கும் ஒரே ஒரு நூழிலை  வித்தியாசம் தான் காதலில் அசைவம் உண்டு நட்பில் அது இல்லை அதனால்தான் அது புனிதமாக சொல்லப்படுகிறது. உறவுகளைவிட உயர்வாக கருதப்படுகிறது கணவன் மனைவிக்குள் உறவு இல்லையெனில் விவாகரத்து வாங்க உரிமை உண்டென்று அரசு சொல்கிறது அதற்கு சட்டத்திலும் இடமுண்டு கண்வன் இடம் இருந்து மனைவிக்கோ மனைவியிடம் கணவனுக்கோ பந்தமாக இணைப்பது உறவு அது இல்லை என்றால் தனித்தனியே பிரிந்து போகிறார்கள் ஏனெனில் அதுதான் வாழ்க்கை என்கிறார்கள் ஆனால் நட்பில் அப்படி பந்தம் இல்லை என்றாலும் எதிர்பார்ப்பு இல்லாமல் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறதே எப்படி அதற்கு பெயர் தான் நட்பு. இவையெல்லாம் உணர்ந்தவர்களால் மட்டுமே நட்பை வளர்க்க முடியும். ஆனால் ஆழமான நட்பில் பொறாமை வந்துவிட்டால் அதை விட கொடுமை எதுவுமே இல்லை. இவர்கள் நட்பிலும் அது வந்தது சுதாவுக்கும் கலாவுக்கு இடையிடையே ஆயிரம் சண்டைகள் வந்தாலும் கொஞ்ச நேரத்தில் சமாதானம் ஆகிவிடும் இவர்கள் இருவருக்கும் நடுவில் யாரும் வரதா வரை. ஆனால் இவர்கள் இடையில் புதிதாக ஒரு பெண் வந்தாள். இவர்கள் வீட்டிற்கு அருகிலே ஒரு ஹாஸ்பிட்டல் அங்கே புதிதாக ஒரு நர்ஸ் வந்தாள். பெயர் வள்ளி ஒல்லியான தேகம், நல்ல கருப்பு ஆனால் கலையான முகம் அதற்கு தகுந்தார் போல் கலகலவென பேச்சு சுதாவுக்கு பார்த்த உடனே அவரை ரொம்ப பிடித்து போனது தன் கூட பேசாத ஒரு ஆளைவிட கலகலவென ஒரு ஆள் பேசுவதை கேட்டதும் பிடித்து போனதோ என்னவோ இது கலாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏனெனில் சுதாவிடம் பேசுவதற்காகதான் கலா அவள் வீட்டிற்கே வருகிறாள் அந்த நேரத்தில் வள்ளியும் வந்து பேசிக்கொண்டு இருப்பது பிடிக்கவில்லை அது உள்ளுக்குள்ளே பொறாமையை வளர்த்தது.

          சுதாவுக்கு வள்ளியை பிடிக்க இன்னொரு காரணம் இருந்தது. இளம் வயதிலே கணவனை பிரிந்து ஒரு ஆண் குழந்தையை பிரிந்து வாழ்கிறாள் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறாள் இப்போது அம்மாவோடுதான் வசிக்கிறாள் இரண்டு அண்ணன்கள் உண்டு ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. இவள் உழைத்து இவள் சாப்பிட வேண்டிய சூழ்நிலை இத்தனை கஷ்டங்களையும் தாண்டி தன்னபிக்கையோடு வாழ்கிறதே என்ற ஒரு இரக்கம் பிறந்தது. அதோடு தன்னைவிட ஏழு வயது சிறியவளிடம்  தன்னைப் பற்றி ஒன்று கொட்டி தீர்த்து ஒரு தோழியாக நினைத்து முதல் சந்திப்பிலே சொன்னது சுதாவுக்கு பிடித்திருக்கலாம். அவளின் கதையை கேட்டு ஒரு இரக்கம் அக்கறை பிறந்தது மெல்ல. வள்ளியின் கலகலப்பான பேச்சு மட்டுமல்ல நிறைய விஷயங்கள் தெரிந்தவளாகவும் புத்திசாலியாகவும் இருந்தாள். இங்கிருந்து புத்தகம் அங்கே போவது அங்கிருந்து புத்தகம் இங்கே வருவது அந்த கதையை பற்றி விவாதிப்பது இதெல்லாம் கலாவிற்கு பிடிக்கவே இல்லை வள்ளியின் மீது மேலும் வெறுப்பை உண்டாக்கியது. கலாவிடம் ஒரு நாவலை கொடுத்து படிக்கச்சொன்னால் ஒரு வாரத்திற்கு மேலாகும் அதனால் கலா நாவல் படிப்பதில்லை சுதாவிடம் கதை கேட்டு தெரிந்து கொள்வாள் இப்போது இடையில் வந்த வள்ளியால் அது குறைந்துவிட்டது என்ற கோபம் மேலும் வளர்ந்து கொண்டே போனது. சுதா கூட படிக்கிற சக பிள்ளைகளிடம் பேசினாலே கலா கடுப்பாகி முறைத்து பார்க்கும் "என்னதான் அப்படி பேசுவீங்களோ' என்று மூஞ்சை தூக்கி வைத்துக்கொள்ளும். கலாவை உசுப்பேற்றவே சில பிள்ளைகள் சுதாவை இழுத்து வைத்து பேசுவார்கள் பள்ளியிலே அப்படி என்றால் இப்போது வீட்டில் சொல்லவா வேண்டும்.

                  நாட்களும் மிக வேகமாக நகர்ந்தது இருவராக இருந்தவர்கள் இப்போது மூவரானார்கள். வழக்கம் போல் டைப் ரைட்டிங் கிளாஸ் முடிந்து வீட்டுக்கு வந்ததும் வாங்கிகொண்டு வந்த ஸ்நாக்சை இரண்டு பங்காக பிரித்துக்கொண்டு இருந்தாள் கலா. வாங்கிவந்த புத்தகங்களில் எதை முதலில் படிக்கலாம் என்று புரட்டி பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது தூரத்திலே வள்ளி வருது தெரிந்தது.

          "கலா... மூனு பங்கா பிரி அவங்களுக்கு கொடு பாவம் .."என்றாள் சுதா.

                 "ம்.. நீ கொடுக்கிறதுன்னா கொடு என்னால கொடுக்க முடியாது கண்டவங்களுக்கெல்லாம் நான் கொடுக்க மாட்டேன். இனிமே நான் எதுக்கு அதான் நந்தி மாதிரி வந்தாச்சே நான் போறேன் எங்க வீட்டுக்கு.." என்றபடி வெடுக்கென்று கிளம்பினாள் கலா.

                 வள்ளிக்கு கலாவின் மனநிலை புரியவில்லை வீட்டுக்குள் நுழையும் போதே ஒரு சத்தத்தோடு வருவார் அதாவது யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பார்களே அந்த மாதிரி கொஞ்சம் சத்தமாக பேசுவது, பார்க்கின்ற பேசுகின்ற அனைவரிடமும் உறவு முறைச்சொல்லி ஈசியாக பேசக்கூடிய ஒரு குணம். தூரத்தில் வரும் போதே கூப்பிட்டுக்கொண்டே வருவார் அப்படிதான் இப்போதும் வந்தார்.

                 "என்னடி பண்றீங்க ரெண்டு பேரும்"

              கலா அதை கவனிக்காதது போல் பதில் ஏதும் சொல்லாமல் வேக சென்றாள்.

                "என்னடி ஆச்சு கலாவுக்கு அவங்க அம்மாவுக்கு அந்தபுள்ளைக்கும் சண்டையா உம் னு போகுது.."

               "இல்ல .. அது சும்மாதான் போகுது காதுல விழல போல " என்று சமாளித்தாள்

               "அதானே இல்லன்னா இப்படி போகாதே காதுலதான் விழல நினைக்கிறேன் சரி என்ன பண்றீங்க.. ரிசல்ட் எப்பவருது?

            "ஜீன் ரெண்டுன்னு சொன்னாங்க தெரியல எனக்கு ரொம்ப பயமா இருக்கு.."

               "பயமா இருக்கா அதெல்லாம் நீ நல்லா எழுதி இருப்பே என்ன படிக்கப் போறே எங்க படிக்கப் போறே..?"

            "மார்க் வரட்டும் அப்பதான் ஒரு முடிவெடுக்க முடியும். தஞ்சாவூர் போய் படிக்கலாம் ஆனால் ஹாஸ்டல்ல தங்குற மாதிரி இருக்கும் அம்மாவை விட்டுட்டு எப்படி போறது அதான் யோசிக்கிறேன் அதிராம்பட்டணத்தில் சேரலாம் ஆனால் அது ரொம்ப மோசம்னு சொல்றாங்க பட்டுக்கோட்டையில் தனியார் காலேஜ்ல சேர வேண்டியதுதான்.."

            "சரி எங்க படிச்சா என்ன நல்லா படிச்சா எங்க வேணாம் படிக்கலாம்."

                "அப்புறம் நீங்க ஏதோ கரஸ்ல படிக்கனும் சொன்னிங்க"

"ஆமா படிக்க ஆசைதான் ஆனால் எங்க அப்ளிக்கேஷன் னு எனக்கு ஒன்னும் தெரியாது. "

              "சரி நான் வாங்கிட்டு வர்றேன் நீங்க படிக்கிறீங்களா?

             "என்ன சொல்றே.. நிஜமாவா எங்க வாங்கிறது எங்கே பணம் கட்டுறது எனக்கும் எதுவும் தெரியாது" சந்தோஷம் கலந்த சிரிப்போடு சொன்னாள்.

             "உங்களுக்கு அதைப்பற்றி என்ன நீங்க கவலைப்பட வேண்டாம் அப்ளிக்கேஷனை மட்டும் பில்அப் பண்ணிக்கொடுங்க மற்றது நான் பார்த்துக்கிறேன்... சரி இந்த மிக்சர் எடுத்துகோங்க உங்களுக்குதான் அது என்று தனக்கு உள்ளதை எடுத்து வைத்தாள்."

              "நீ முடிவு பண்ணிட்டே... அப்புறம் என்ன நீயே பார்த்துக்க சரி என்ன சாப்பாடு இருக்கு"

                  "சாம்பாரும் உருளைக்கிழங்கு வருவலும், சாப்பிடுறீங்களா"

"என்ன சாப்பிடுறிங்களான்னு கேட்கிற தள்ளு நானே போய் போட்டு சாப்பிட்டுக்கிறேன் சாப்பிடுற விஷயத்திலே நமக்கெல்லாம் கூச்சமே இல்ல நீ அதைபத்தி ஒன்னும் வொரி பண்ணிக்காத என்று சிரித்தபடி கடகடவென்று சாப்பிட்டுவிட்டு மணி என்னடி டாக்டர் வர்ற நேரம் நான் அங்கே இருக்கனும் அன்னைக்கே கேட்டார் பக்கத்துவீட்டு பண்ணுங்க கிட்ட அப்படி என்னதான் பேசுறே எப்ப பார்த்தாலும் அங்கேயே போய் நிக்கிற நான் பார்த்துட்டுதான் இருக்கேன்னு சொன்னார் சரி நான் போறேன் என்றபடி ஒடினாள்..."

                அந்த டாக்டர் கொஞ்சம் ஜொள்ளு நாங்கள் பேசுவதை ஜன்னல் வழியாக பார்ப்பார் சில நேரம் வெளியே வந்து காற்று வாங்குவது போல் நோட்டம் விடுவார். நாங்கள் நைசாக நழுவி விடுவோம். வள்ளி கொஞ்ச நாளிலே க்ளோசாக பேசியது மட்டுமில்லாமல் வீட்டுக்கு வந்து  சாப்பிடுறதுக்கு என்ன இருக்குன்னு திறந்து பார்த்து சாப்பிடுற அளவுக்கு வந்து விட்டார். இதுவும் கலாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை நாம் இருந்த இடத்தில் இன்னொரு ஆள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுதாவுக்கு பதில் ஏதும் சொல்லா முடியாமல் சமாளித்தாள். சில நேரங்களில் அடிக்கடி கலா சொல்லும் வார்த்தை.. "இங்க பாரு நீ பாவம்.. பாவம் னு ரொம்ப தான் இரக்கப்படுறே ஒரு நாள் நல்லா உன்னைய ஏமாற்ற போகுது பார்த்துக்க நான் அப்ப இருந்து உனக்கு சொல்லிட்டு இருக்கேன் நீ கேட்கவே மாட்டேங்குற.. உனக்கு அப்பதான் புரியும் நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அவ்வளவுதான் என்று கலா சொல்லும் போது சுதாவுக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது அவர் அப்படி எதும் செய்யமாட்டார்னு எம் மனசு சொல்லுதுன்னு பதிலுக்கு சொல்லி சமாளிப்பால் சுதா.

                என்னவோ தெரியவில்லை வள்ளி மீது ஒது தனி பிரியம் இருக்கத்தான் செய்தது ஏனென்று சுதாவுக்கு சுத்தமாக புரியவில்லை. இரக்கமா பரிவா என்றே தெரியவில்லை சில நாட்கள் வள்ளி வராத போது வெறுமையாக உணர்ந்திருக்கிறாள் வரவில்லை என்றால் வருத்தப்பட்டு இருக்கிறாள் காத்திருந்து ஏமாற்றத்தை உணர்ந்திருக்கிறாள் ஆனால் அதற்கான காரணம் மட்டும் புரியவேயில்லை.

               மறுநாள் டைப்ரைட்டிங் கிளாஸ் முடிந்து வீடு திரும்பு போது கலாவும் சுதாவும் வழக்கம் போல் பேசிக்கொண்டே நடந்து வந்தார்கள். அப்போது சுதா ஆரம்பித்தாள் நூறு ரூபா பணம் இருந்தால் இரண்டு ப்ளவுஸ் பிட்டு எடுக்கலாம் ஆனால் பணம் இல்லையே அம்மாகிட்ட கேட்கலாம்னு நினைச்சேன் மறந்துட்டேன். என்றாள்.

               "நூறு ரூபா தானே நான் வைச்சிருக்கேன் வேணுமா? " கொஞ்சமும் யோசிக்காமல் கேட்டாள் கலா.

               "இல்ல கலா வேணாம் நீயே வைச்சுக்க உங்கம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க..வேண்டாம் நாளைக்கு வாங்கிக்கலாம்"

              "ஏன் நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டியா வா... இந்த கடைக்கு போவோம் என்று சுதாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.

              இருவரும் கடையில் நுழைந்து ஒரு பிங் கலர் ப்ளவுஸ்சும், ப்ளூ கலர் ப்ளவுஸ்சும் வாங்கிகொண்டு இருவரும் பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வந்து வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு வேலைகளை முடித்துவிட்டு உட்காரும் போதும் வீட்டிற்கு பின்னால் வள்ளி கூப்பிடுவது கேட்டது. "சுதா... சுதா... இங்கே வந்துட்டு போயேன் வேலையா இருக்குறீயா..?"

             "இல்ல இதோ வந்துட்டேன்..' என்றபடி வாங்கி வந்த ப்ளவுஸ்சை எடுத்துக்கொண்டு வெளியே வரவும் கலா அங்கே வரவும் சரியாக இருந்தது. கலாவும் சுதாவும் சேர்ந்தே வீட்டிற்கு பின்னே சென்றார்கள்.

              இருவரும் சேர்ந்தே வருவதை பார்த்த வள்ளி "ரெண்டு பேரும் வீட்டுக்குள்ளதான் இருந்தீங்களா அங்கே வருவோம்னு நினைச்சேன் டாக்டர் இன்னைக்கு வீட்டுக்கு போகவே இல்லை அதான் அந்த பக்கம் வரமுடியல சரி பிள்ளைகளை காலையில் இருந்து பார்க்க முடியலையேன்னு கூப்பிட்டு பார்த்தேன்"

              சுதா வாங்கி வந்த ப்ளவுஸ்சை வள்ளியிடம் நீட்டினாள் வள்ளி சிரித்தபடி வாங்கி அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்துவிட்டு ரொம்ப நல்லா இருக்கு யாருக்கு உனக்கா கலாவுக்கா..?

             எங்க ரெண்டு பேருக்கும் இல்ல இது உங்களுக்குதான் உங்க சாரிக்கு மேட்சா வாங்கிட்டு வந்தேன். நீங்க இப்ப போட்டு இருக்கிற ப்ளவுஸ் இன்னும் கொஞ்ச நாள்ல கிழிஞ்சு போயிடும் அதான் வாங்கிட்டு வந்தேன்  என்றபடி கலாவை பார்த்தாள் சுதா கலாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது ஒன்றும் பேசாமல் உம் என்று நின்று கொண்டு இருந்தது.

             வள்ளி அதை கவனிக்காமல் "ஏம்பா எனக்கு வாங்கிட்டு வந்திங்க நானே வாங்களாம்னுதான் நினைச்சேன் இந்த மாசம் சம்பளம் வாங்கியது வாங்க இருந்தேன் நீங்களே வாங்கிட்டிங்களா எவ்வளவு இது நான் பணம் கொடுத்துர்றேன்.... "என்றாள்.

            "அய்யய்யோ... பணமெல்லாம் வேண்டாம் நீங்களே வைச்சுகோங்க நீங்க பணம் கொடுத்தால் உங்க கூட இனிமே பேசவே மாட்டோம்."

            "அட என்னப்பா நீங்க... இதை எங்க அண்ணன் பொண்ணு பார்த்தால் ரொம்ப கிண்டலடிப்பா.. எங்க அத்தைக்கு அவங்க ப்ரண்ஸ் ஏதாவது வாங்கித்தந்திட்டு இருப்பாங்க அவங்களுக்கு என்ன கவலைன்னு கேட்ப்பா எங்கம்மா அவளை திட்டி விடும் சரி சுதா பெசண்ட் வருது நான் அப்புறமா வர்றேன் என்றபடி ஒரே ஒட்டமாக மான் போல் துள்ளி ஓடியது.

                சுதா அங்கிருந்து நகர்ந்தாள் கலா எதுவும் பேசவில்லை இருவரும் வீட்டிற்குள் போனார்கள் கலா அங்கே இருந்த வானொலி பெட்டியை திருக்கினாள். அப்போது வானொலியில் இனிமான பாடல் ஒலித்தது துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்...  என்றும் அன்புடன் படத்திலிருந்து நல்ல அருமையான பாடல் அந்த பாடலை கேட்கும் ஏனோ வள்ளியின் நினைவுகள் வந்து போனது இந்த பாடல் வள்ளிக்கு பொருத்தமான பாடல் இதை வைத்து ஏன் நாம ஒரு நேயர் அரங்கம் எழுதக்கூடாது... .ம்.. நல்ல ஐடியா வள்ளி பெயரிலே எழுதுவோம் வள்ளியின் கதை கொஞ்சம் தெரியும் என்பதால் அதற்கு பொருத்தமான பாடல்களை யோசித்து பேப்பரும் பேனாவுமாக உட்கார்ந்தாள் சுதா. அப்போது சுதாவின் அம்மா உள்ளே நுழைய கலா உம்மென்று முகத்தை வைத்திருப்பதை பார்த்து "என்ன கலா ஒரு மாதிரி இருக்கே... அது உன்னை திட்டுச்சா..."

             "இல்லக்கா... நாம் சும்மாதான் உட்கார்ந்து இருக்கேன் என்னை யாரும் திட்டல"

            "இல்ல கலா உம் மூஞ்சு சரியில்லையே.
' கிட்ட குனிந்து முகத்தை தடவினார் சுதாவின் அம்மா அவருக்கு கலாவின் மீது ஒரு தனி பாசம் எப்பவும் உண்டு.

          "இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமாக்கா... நாங்க இன்னைக்கு கிளாஸ் போகும் போது பணம் இல்லன்னு சொல்லிட்டு இருந்துச்சு சரி இதுக்குதான் கேட்குதுன்னு கொடுத்தேன். ரெண்டு பிளவுஸ் வாங்கி வந்து எனக்கு நேராவே வள்ளிக்கு கொடுக்குதுக்கா.. அப்ப எனக்கு எப்படி இருக்கும் நீங்களே சொல்லுங்க என்று கண்ணை கசக்கியது.

             சுதாவின் அம்மா திரும்பி என்ன உனக்கு ஒன்னும் புரியலையா... புதுசா ப்ரண்ட் பிடிச்சுகிட்டு என்னது இதெல்லாம் அது இப்ப வந்தது அதுக்கு போய் இப்படி பண்ணிட்டு இருக்கே எனக்கு சுத்தமா பிடிக்கல நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிட்டேன் அது அடிக்கடி இங்க வர்றதும் எனக்கு பிடிக்கல பார்த்து இருந்துக்க அப்புறம் என் குணம் உனக்கு தெரியாது சொல்லிட்டேன்.. "

              "நீ நினைக்கிற மாதிரி இல்லம்மா... இது ஏதாவது சொல்லுதுன்னு நீ அதுக்கு சப்போர்ட் பண்ணாதே நான் யார் கூடையும் பேசினாலே இதுக்கு பிடிக்குதுல்ல ஒருத்தர் கூட மட்டும்தான் பேசனுமா... ஏன் நான் அவங்க கூட பேசினால் என்ன பாவம் அவங்க எப்படி கஷ்டப்படுறாங்க தெரியும்மா... இரண்டு சேலைய மாத்தி... மாத்தி.. கட்டிட்டு வர்றாங்க அந்த ஜாக்கெட்டும் கிழிஞ்சிரும் போல பாவம் தானே அதான் வாங்கி கொடுத்தேன் அதுக்கு இப்ப என்ன.. இங்க பாரு கலா நீ ஏதாவது சொல்லி வம்பிழுத்து விடாதே... நான் உன் கூட மட்டும் பேச முடியாது எனக்கு எல்லாரும்தான் வேணும். உனக்கு யாரையும் பிடிக்காது யாருக்கும் எதுவும் கொடுக்கவும் பிடிக்காது உன்னை மாதிரி என்னால இருக்க முடியாது. எனக்கும் எங்கம்மாவுக்கும் சண்டைய மூட்டிவிடுற நீ தந்த நூறு ரூபாயை நான் நாளைக்கே தர்றேன் இனிமே எங்கூட பேசாதே ... கோபமாக சொல்லிவிட்டு அந்த பக்கமாக திரும்பி உட்கார்ந்து கொண்டாள் சுதா.

              "பார்த்திங்களாக்கா உங்க பொண்ணு எப்படி பேசுது இதுக்குதான் நான் வாய் திறக்காம இருந்தேன் நீங்க கேட்டதாலதானே சொன்னேன் சரி நான் எங்க வீட்டுக்கு போறேன். அது எப்ப வந்தததோ அப்ப இருந்தே எங்களுக்குள்ள சண்டை வந்துட்டே இருக்கு "என்று முணுமுணுத்தபடி சென்றது.

             இவர்கள் சண்டை இப்படிதான் ஆனால் மறுநாள் எதுவும் நடக்காதது போல் பேசிக்கொள்வார்கள். சில நேரம் கலாவின் அம்மா வந்து என்னடி உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் சண்டையா என் மேல எரிஞ்சு எரிஞ்சு விழுறா மூஞ்ச தூக்கி வைச்சுகிட்டு உட்கார்ந்து இருக்கா அவ தம்பி என்னமோ கேட்டான் தலையிலே நங்குன்னு ஓங்கி குட்டிட்டா அவன் ஓன்னு அழுறான். என்ற பஞ்சாயத்து சொல்வாள். இந்த சண்டைகள் வம்புகள் எல்லாம் இன்னும் சில காலம் தானே இது புரியாமல் ஒருவருக்கொருவர் மூஞ்சை திருப்பிக்கொண்டு இருக்கிறார்கள் விதியின் விளையாட்டை யார் அறிவார்....?

                                       
                மறுநாள் வழக்கம் போல் கிளாஸ்சுக்கு சுதா கிளம்பிக்கொண்டிருந்தாள். கலா அம்மா  வந்து சொன்னார் "சுதா இன்னைக்கு அவ வரலையாம் நாளைக்கு வர்றேன்னு சொன்னாள் நீ பொயிட்டு வந்திருது அவ என்னமோ எதையோ பறிக்கொடுத்த மாதரி உம்னு அடைச்சு போயி இருக்கா இராத்திரி அவா அப்பா கூட என்னவோ கேட்டுப்பார்த்தார் ம்கூம்.. அவ அசைலையே ... " என்றார்.

               சுதா ம்... போட்டபடி சரி எப்ப வேணா வரட்டும் எனக்கென்ன என்றபடி நகர்ந்து சென்றாள். சுதாவுக்கு இது நல்ல சான்ஸ் ஏன்னா வள்ளிக்கு அப்ளிக்கேஷன் வாங்கிட்டு வந்திரலாம் கலா கூட போக முடியாது எதுக்கு வம்பு இன்னைக்கே வாங்கிற வேண்டியதுதான் என நினைத்தபடி சென்றாள். அது போல் கிளாஸ் முடிந்ததும் தேவையான பணத்தைக் கட்டி அப்ளிக்கேஷன் வாங்கி வந்து விட்டாள் மதியம் வள்ளி வரும் போது சப்ரைஸ்சா கொடுத்திடனும். மதியம் சாப்பிடும் வரை வள்ளி வரவில்லை வெளியே வந்து எட்டி எட்டி பார்த்தாள் வரவே இல்லை ஏமாற்றத்தோடு வந்து சோர்வாக அமர்ந்தாள். சிறிது நேரத்தில் வள்ளி வருவது தெரிந்தது. வள்ளியை கண்டதும் சுதாவின் கண்கள் பிரகாசமானது "வாங்க... வாங்க... உங்களை எதிர்பார்த்துட்டு வந்தேன்.." என்றாள்.

              "என்ன ஏதாவது ஸ்பெஷலா சமையல் பண்ணுனியா"

"இல்ல.. உங்களுக்கு ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன் " என்றபடி ஒரு பேப்பரை நீட்டினாள்...சுதா.

             "வள்ளி வாங்கி அதை பார்த்துவிட்டு சந்தோஷத்தில் குதித்தாள். ரொம்ப தேங்க்ஸ் சுதா.. எங்கண்ணே இதெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க, ஆனால் நீ நான் சொன்னதை மனசுல வைச்சு வாங்கிட்டு வந்திருக்கே. நீ ஏதோ சும்மா சொல்றேன்னு நினைச்சேன் ஆனால் நிஜமாவே வாங்கிட்டு வந்துட்டே.. உண்மையிலே சொந்தகாரங்களை விட மத்தவங்கரான் நமக்கு அதிகமா உதவி செய்யுறாங்க என்று கண் கலங்கியது. சொன்னா யாரும் நம்ம மாட்டாங்க என்னோட கல்யாண செலவை நானேதான் பார்த்துக்கிட்டேன் எங்கண்ணே ரெண்டு பேரும் பேருக்கு சும்மா வந்து நின்னாங்க இப்பவரைக்கும் ஒரு பைசா செலவு செஞ்சது கிடையாது. எங்க வீட்டுக்கு ஏதாவது வேலை செய்தா கூட எங்க அண்ணனுக்கு நான் பணம் கொடுத்திருவேன் நமக்கு யாரும் சும்மா செய்ய வேண்டாம்..." என்று படபடவென்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்தது.

                சுதாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை "சரி சரி விடுங்க எல்லா வீட்டிலையும் இப்படிதான் இருக்கு எங்கண்ணே மட்டும் இப்படி தான்..."

                "நம்மக்கூட இருக்கிறவங்கெல்லாம் இப்படிதான் போல சரி நான் போய் இதை பில்அப் பண்ணி கொண்டு வர்றேன் எங்க கலாவை காணும்"

              "அது அவங்க வீட்டுல ஏதோ வேலையா இருக்கு"

              "சரி நான் போறேன்" என்றபடி வேகமாக ஓடியது.

              சுதா ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து வள்ளியை மனதில் வைத்து சில சினிமா பாடல்களை தேர்வு செய்தாள். அந்த ஒவ்வொரு பாடலுக்கும் வள்ளியின் நினைவுகளை அதில் பொருத்தமாக சேர்த்து ஒரு கதை மாதிரி எழுதினாள். ஒரு முறை அதை வாசித்து பார்த்தாள் படிக்கும் போதே உருக்கமான ஒரு கதையை சொன்னது. கடைசியில் இப்படிக்கு என்ற இடத்தில் வள்ளி என்று எழுதி முடித்தாள். ம்.. நல்லாதான் எழுதி இருக்கோம் ஆனால் நம் பிரதியை சேர்த்துக்கொள்வார்களா எத்தனையோ பிரதி போகுது என நினைத்தவள்  இதை எந்த அறிவிப்பாளருக்கு அனுப்பலாம் என யோசித்தாள். ம்.... முத்தையா ஜெகன் மோகனுக்கு அனுப்பலாம் அவர்தான் நல்லா ஜாலியா கதைப்பார்... ஆனால் நம்மாள் வாசிச்சா ரொம்ப நல்லா இருக்கும் ஆனால் நேயர் அரங்க நிகழ்ச்சிக்கு அவங்க வர்றது இல்லையே அப்பறம் எப்படி சரி இவருக்கே அனுப்புவோ என்று கடகடவென்று கவரில் பெறுநர் முகவரியில் இலங்கை வானொலியின் முகவரியை எழுதிவிட்டு அனுப்புநர் முகவரியில்  வள்ளியின் முகவரியை எழுதி கவருக்குள் போட்டு ஒட்டினாள். இது வள்ளிக்கே தெரியாது ஒரு சப்ரைஸ்சா இருக்கட்டும்  அடுத்து சுதா பெயரிலே அவளுக்கு பிடித்த பாடல்களில் எட்டு பாடல்களை தேர்வு செய்தாள்.. அதில் ஒவ்வொரு பாடலுக்கும் பொருத்தமாக கவிதையை எழுதினாள். படித்துப் பார்த்தாள் நல்லாதான் இருக்கு நாமலா இப்படி எழுதினோம்  பரவாயில்லையே நமக்கும் எழுத வருது. என மனசுக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டாள் இப்பதானே முதன் முதலா எழுதுறோம் தவறுகள் ஏதாவது இருந்தால் திருத்திக்கொள்வோம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாள். நாளை இதை போஸ்ட் செய்து விட வேண்டும் என்று பத்திரமாக நோட்புக்கில் பத்திரப்படுத்தினாள்.

                   பிறகு வெளியே வந்து எங்கே கலாவை இன்னும் காணும் மூச்சுக்கு மூனுதடை வரும் இப்ப இன்னும் வரல ஓ.... மேடத்துக்கு இன்னும் ரோசம் இருக்கு போல கலா வராதது ஒருவகையில் நல்லதுதான் இன்னைக்கு ப்ரியா ரெண்டு வேலை பார்க்க முடிஞ்சுது இல்லன்னா வெட்டியா கதை பேசிட்டுதான் இருப்போம். என நினைத்துக்கொண்டே சமைக்கத் தொடங்கினாள். கலா வந்து அங்கே ஓரமாக உட்கார்ந்தாள் சுதாதான் பேச்சை தொடங்கினாள். என்ன கலா இன்னைக்கு லீவு போட்டுட்டே... அடுத்த மாசம் எக்ஸ்சாம் வருதான் ரம்யா அக்கா எக்ஸ்சாம் பீஸ் நாளைக்கு கொண்டு வர சொன்னாங்க உங்கம்மாகிட்ட சொல்லிரு. இவ்வளவு நேரம் காணும் எங்க போனே..."

                  ம்... இப்பாவது உனக்கு கேட்கனும் தோணுச்சே... நானும் நீ எங்க வீட்டுக்கு வருவே வருவேன்னு பார்த்தேன் நீ எட்டிக்கூட பார்க்கலையே... நான் செத்துப் போனா கூட வரமாட்டே போலிருக்கே... அதான் உனக்கு புதுசா ப்ரண்ட் கிடைச்சாச்சே... எங்களையெல்லாம் ஞாபகம் இருக்குமா என்ன என் மனசுதான் கேட்கவே மாட்டேங்குது இருந்து பார்த்துட்டு ஓடி வந்துட்டேன் எங்கே அது பேச்சுக்குரல் கேட்டுச்சே வந்துச்சா... வராம இருக்காதே. என மனதில் உள்ளதை கொட்டி தீர்த்தாள்.

                   "சரி கலா அதை விடு நமக்கு இன்னும் ஒரு வாரத்தில் ப்ளஸ் டூ ரிசல்ட் வருதாம் ரொம்பவே பயமா இருக்கு நான் மீனாட்சி சந்திரசேகரன் காலேஜ்ல சேரப்போறேன் நீ எங்க படிக்கப் போறே..,"

                  "எங்கம்மாகிட்ட நீ பேசுறீயா என்னை மேல படிக்க வைக்காது போல அதான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு..."

                 "சரி.. ரிசல்ட் வரட்டும் பேசிப் பார்ப்போம் அப்படி படிக்க வைக்கலன்னா கவலைப்படாதே என்ன.. கரஸ்சுல மேல படிக்கலாம் பீஸ் கம்மியாதான் வரும் வீட்டில் இருந்தே படிக்கலாம் நிறைய பேர் அப்படிதான் படிக்கிறாங்க நம்ம டீச்சர் கூட அப்படிதானே படிச்சதா சொன்னாங்க " என்று கலாவை ஆறுதல் படுத்தினாள் சுதா.

                 நாட்கள் வாராமானது எதிர்பார்த்த ரிசல்ட்டும் வந்தது இருவருமே தேர்ச்சி பெற்று இருந்தனர். கலாவைவிட எழுபதைந்து மார்க் அதிகம் பெற்றிருந்தாள் சுதா. அதுக்கே கலாவின் அம்மா கலாவை திட்டி தீர்த்தார். சுதாவிற்கு மனசுக்குள் பெரிய சந்தோஷம் என்னவென்றால் கலாவைவிட எல்லா பாடத்திலும் அதிமாக மார்க் எடுத்ததுதான் அதிலும் ஒரு டீச்சர் எப்பவும் கலாவுக்கு அதிகமாகவே மார்க் போடுவாங்க ஆனால் பப்ளிக் எக்ஸ்சாமில் அந்த டீச்சர் பேப்பர் திருத்தவில்லை அதான் சுதாவுக்கு அதிக மார்க் கிடைத்து இருந்தது. மொத்த மதிப்பெண்கள்  எதிர்பார்த்தது வரவில்லை என்ற வருத்தம் இருந்தது க்ளாசில் மூன்றாவது மாணவியாக ஓரிரு மார்க் வித்தியாசத்தில் வந்ததது மிகவும் வருத்தமாகதான் இருந்தது. அப்புறம் சுதா மேலே படிக்க கல்லூரியில் சேர்ந்தாள் கலா வீட்டில் இருந்தாள் அவங்க அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்கவே இல்லை. தனியார் காலேஜ்ல சேர்க்க அவ்வளவு பணத்திற்கு எங்கே போவதென்று மறுத்துவிட்டார். கூடாவே சுதா அம்மாவிடம் வந்து எதுக்கு உங்க சுதாவை படிக்க வைக்கிறீங்க அந்த பணத்தை சேர்த்து வைச்சா கல்யாணம் பண்ணலாம். உங்கப்பொண்ணு போறான்னு இவளும் படிக்கப் போறேன்னு அழுறா நம்ம தகுதிக்கு முடியுமா? படிச்சு என்ன பண்ண போறா கடைசியில எவன் வீட்டிலையோ பானையும் சட்டியும்தானே கழுவ போறதுன்னு சுதா அம்மாவின் மனசை கலைக்கப் பார்தார். ஆனால் சுதா பிடிவாதமாக மறுத்து நான் படிச்சே தீருவேன்னு ஒத்தகாலில் நின்னு காலேஜ்சில் சேர்ந்துவிட்டாள். கூடவே டைப்ரைட்டிங் கிளாஸ்சுக்கும் போய் தேர்வெழுதி தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றார். கலா இரண்டிலும் தோல்வியுற்றாள் அதன் பிறகு மேற்கொண்டு படிக்க அனுப்பவில்லை. கலா கொஞ்ச நாள் உம்மென்று இருந்தது பிறகு நாட்கள் செல்ல செல்ல  ஒருவழியா சமாதானம் ஆகிவிட்டது. சுதா கல்லூரிக்கு போகும் போது தன்னோட சேமிப்பில் இருந்து தினமும் கலா காசு கொடுத்தனுப்பும் ஏதாவது வாங்கிக்க என்று அதை சுதா என்ன செய்வாள் வள்ளி தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி கலாவுக்கு தெரியாமல் கொடுத்து வந்தாள் சுதா.


                    சுதாவுக்கு மதியம் வரைதான் காலேஜ் இரண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடுவாள். வீட்டுக்கும் போது கலா அங்கே இருப்பாள் சுதாவின் துணிகளை எல்லாம் அழகாக மடித்து வைத்திருப்பாள் சுதாவின் அம்மா இதெல்லாம் ஏன் கலா நீ செய்யுறேன்னு கேட்டால் "சும்மா இருங்கக்கா இதில் என்ன இருக்கு சுதா காலேஜ்க்கு போகுது பாவம்  நான் சும்மா தானே இருக்கேன்னு" சொல்லி எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்வாள் அந்தளவிற்கு கலாவுக்கு அளவில்லாத பாசம். ஒவ்வொரு புதுப்படம் வந்ததும் படம் பார்க்க சென்று விடுவார்கள் அதே போல் கோவில் குளம் எல்லாம் இடங்களுக்கும் இணை பிரியாமல் சென்றார்கள். ஆனால் அவர்கள் நட்பில் இவ்வளவு சீக்கிரம் பிரிவு வருமென்று இருவரும் எதிர்பார்க்கவில்லை.

                  கலா வேகமாக சுதா வீட்டிற்கு வந்தாள் சுதா அப்போதுதான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உட்கார்ந்திருந்தாள். "என்ன கலா இவ்வளவு வேகமா வர்றே..."

              "என்னைய நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்களாம்.."

              "ஏ.. என்ன சொல்றே நிஜமாவா..?"

              "ஆமா.. நாளைக்கு நான் எங்க மாமா வீட்டுக்கு போறேன் அங்க வைச்சு பேசி முடிக்கிறாங்களாம் "கொஞ்சம் வெட்கம் கலந்து சொன்னாள்.

               சுதாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது இத்தனை நாள் கூடவே இருந்த போது தெரியல இப்ப ஏதோ ஒன்றை இழந்த உணர்வு ஏற்பட்டது அதைக் காட்டிக்கொள்ளாமல்.. நீ மாப்பிள்ளைய பார்த்தியா உனக்கு பிடிச்சிருக்கா?

              "மாப்பிள்ளைய நான் பார்க்கல ஆனால் என்னைய அவங்க பார்த்து இருக்காங்களாம். அவர் சென்னையில் இருக்கார் அவரோட மாமாதான் எல்லாம் எடுத்துச்சொல்லி பேசி முடிச்சாறாம்.காலையில் அவர் எங்காத்துக்கு வந்து விவரமா சொன்னார்..."

                "நீ அதுக்கு என்ன சொன்னே.."

                "நான் என்ன சொல்ல முடியும் அவங்க இஷ்டம்னு சொல்லிட்டேன்.."

              "எ...ன்...ன...து ஓகே சொல்லிட்டியா..."

              "ஆமா மேல படிக்கவும் வைக்கல அப்புறம் நாம எதுக்கு வெட்டியா வீட்டுல உட்கார்ந்து இருக்கனும் சொல்லு.."

               சுதா அதிர்ச்சியாக பார்த்தாள் அவளால் நம்ப கூட முடியவில்லை கலாவா இப்படி பேசுதுன்னு.. "கல்யாணத்துக்கு ரொம்ப செலவாகுமே நகையெல்லாம் நிறைய போடனுமே..."

             "அதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களே பார்த்துப்பாங்களாம் ஒரு நகையும் வேண்டாம்மாம் அவங்களே நகை போட்டு கட்டிட்டு போறாங்களாம் கல்யாண செலவு கூட அவங்களே பார்த்துகிறாங்களாம் அதான் நானும் ஓகே சொல்லிட்டேன்.."

             "ஏ... லூசு மாதிரி உளறாதே இந்த காலத்தில் யாராவது எதுவும் வேணான்னு சொல்வாங்களா..? அவங்க சென்னையின்னு வேற சொல்றே உன்னை ஏமாத்திட போறாங்க இல்ல அவருக்கு ஏதாவது பிரச்சினை இருக்கப் போகுது இவ்வளவு தூரத்தில வந்து பார்க்கிறது ரொம்ப கஷ்டம் நல்லா யோசித்து முடிவு பண்ணிக்க சொல்லிட்டேன் உன்னோட நல்லதுக்குதான் சொல்றேன் அப்புறம் உன்னோட இஷ்டம்.."

                   "பார்ப்போம் நாளைக்குத்தான் எல்லாம் தெரியும்.."

மறுநாள் வழக்கம் போல் கிளாஸ்சுக்கு சுதா கிளம்பிக்கொண்டிருந்தாள். கலா அம்மா  வந்து சொன்னார் "சுதா இன்னைக்கு அவ வரலையாம் நாளைக்கு வர்றேன்னு சொன்னாள் நீ பொயிட்டு வந்திருது அவ என்னமோ எதையோ பறிக்கொடுத்த மாதரி உம்னு அடைச்சு போயி இருக்கா இராத்திரி அவா அப்பா கூட என்னவோ கேட்டுப்பார்த்தார் ம்கூம்.. அவ அசைலையே ... " என்றார்.

              சுதா ம்... போட்டபடி சரி எப்ப வேணா வரட்டும் எனக்கென்ன என்றபடி நகர்ந்து சென்றாள். சுதாவுக்கு இது நல்ல சான்ஸ் ஏன்னா வள்ளிக்கு அப்ளிக்கேஷன் வாங்கிட்டு வந்திரலாம் கலா கூட போக முடியாது எதுக்கு வம்பு இன்னைக்கே வாங்கிற வேண்டியதுதான் என நினைத்தபடி சென்றாள். அது போல் கிளாஸ் முடிந்ததும் தேவையான பணத்தைக் கட்டி அப்ளிக்கேஷன் வாங்கி வந்து விட்டாள் மதியம் வள்ளி வரும் போது சப்ரைஸ்சா கொடுத்திடனும். மதியம் சாப்பிடும் வரை வள்ளி வரவில்லை வெளியே வந்து எட்டி எட்டி பார்த்தாள் வரவே இல்லை ஏமாற்றத்தோடு வந்து சோர்வாக அமர்ந்தாள். சிறிது நேரத்தில் வள்ளி வருவது தெரிந்தது. வள்ளியை கண்டதும் சுதாவின் கண்கள் பிரகாசமானது "வாங்க... வாங்க... உங்களை எதிர்பார்த்துட்டு வந்தேன்.." என்றாள்.

              "என்ன ஏதாவது ஸ்பெஷலா சமையல் பண்ணுனியா"

                "இல்ல.. உங்களுக்கு ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன் " என்றபடி ஒரு பேப்பரை நீட்டினாள்...சுதா.

                 "வள்ளி வாங்கி அதை பார்த்துவிட்டு சந்தோஷத்தில் குதித்தாள். ரொம்ப தேங்க்ஸ் சுதா.. எங்கண்ணே இதெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க, ஆனால் நீ நான் சொன்னதை மனசுல வைச்சு வாங்கிட்டு வந்திருக்கே. நீ ஏதோ சும்மா சொல்றேன்னு நினைச்சேன் ஆனால் நிஜமாவே வாங்கிட்டு வந்துட்டே.. உண்மையிலே சொந்தகாரங்களை விட மத்தவங்கதான் நமக்கு அதிகமா உதவி செய்யுறாங்க என்று கண் கலங்கியது. சொன்னா யாரும் நம்ம மாட்டாங்க என்னோட கல்யாண செலவை நானேதான் பார்த்துக்கிட்டேன் எங்கண்ணே ரெண்டு பேரும் பேருக்கு சும்மா வந்து நின்னாங்க இப்பவரைக்கும் ஒரு பைசா செலவு செஞ்சது கிடையாது. எங்க வீட்டுக்கு ஏதாவது வேலை செய்தா கூட எங்க அண்ணனுக்கு நான் பணம் கொடுத்திருவேன் நமக்கு யாரும் சும்மா செய்ய வேண்டாம்...னு நினைப்பேன் எங்கண்ணனும் ஒன்னுமே சொல்லாம வாங்கிக்கும் எங்கண்ணி வாய் பொல்லாதது எங்கண்ணனை பிடிங்கி எடுத்துரும் அதான் நான் பணம் கொடுத்திருவேன் என்று படபடவென்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்தது.

             சுதாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை "சரி சரி விடுங்க எல்லா வீட்டிலையும் இப்படிதான் இருக்கு எங்கண்ணே மட்டும் எப்படி இப்படி தான் வீட்டுக்கு வீடு வாசல்படி என்ன பண்றது நாம பொறந்த நேரம் அப்படி.."

              "நம்மக்கூட இருக்கிறவங்கெல்லாம் இப்படிதான் போல சரி நான் போய் இதை பில்அப் பண்ணி கொண்டு வர்றேன் எங்க கலாவை காணும்"

                 "அது அவங்க வீட்டுல ஏதோ வேலையா இருக்கு"

                  "சரி நான் போறேன்" என்றபடி வேகமாக ஓடியது.

                 சுதா ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து வள்ளியை மனதில் வைத்து சில சினிமா பாடல்களை தேர்வு செய்தாள். அந்த ஒவ்வொரு பாடலுக்கும் வள்ளியின் நினைவுகளை அதில் பொருத்தமாக சேர்த்து ஒரு கதை மாதிரி எழுதினாள். ஒரு முறை அதை வாசித்து பார்த்தாள் படிக்கும் போதே உருக்கமான ஒரு கதையை சொன்னது. கடைசியில் இப்படிக்கு என்ற இடத்தில் வள்ளி என்று எழுதி முடித்தாள். ம்.. நல்லாதான் எழுதி இருக்கோம் ஆனால் நம் பிரதியை சேர்த்துக்கொள்வார்களா எத்தனையோ பிரதி போகுது என நினைத்தவள்  இதை எந்த அறிவிப்பாளருக்கு அனுப்பலாம் என யோசித்தாள். ம்.... முத்தையா ஜெகன் மோகனுக்கு அனுப்பலாம் அவர்தான் நல்லா ஜாலியா கதைப்பார்... ஆனால் நம்மாள் வாசிச்சா ரொம்ப நல்லா இருக்கும் ஆனால் நேயர் அரங்க நிகழ்ச்சிக்கு அவங்க வர்றது இல்லையே அப்பறம் எப்படி சரி இவருக்கே அனுப்புவோ என்று கடகடவென்று கவரில் பெறுநர் முகவரியில் இலங்கை வானொலியின் முகவரியை எழுதிவிட்டு அனுப்புநர் முகவரியில்  வள்ளியின் முகவரியை எழுதி கவருக்குள் போட்டு ஒட்டினாள். இது வள்ளிக்கே தெரியாது ஒரு சப்ரைஸ்சா இருக்கட்டும்  அடுத்து சுதா பெயரிலே அவளுக்கு பிடித்த பாடல்களில் எட்டு பாடல்களை தேர்வு செய்தாள்.. அதில் ஒவ்வொரு பாடலுக்கும் பொருத்தமாக கவிதையை எழுதினாள். படித்துப் பார்த்தாள் நல்லாதான் இருக்கு நாமலா இப்படி எழுதினோம்  பரவாயில்லையே நமக்கும் எழுத வருது. என மனசுக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டாள் இப்பதானே முதன் முதலா எழுதுறோம் தவறுகள் ஏதாவது இருந்தால் இனிமேல் திருத்திக்கொள்வோம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாள். நாளை இதை போஸ்ட் செய்து விட வேண்டும் என்று பத்திரமாக நோட்புக்கில் பத்திரப்படுத்தினாள்.

                பிறகு வெளியே வந்து எங்கே கலாவை இன்னும் காணும் மூச்சுக்கு மூனுதடை வரும் இப்ப இன்னும் வரல ஓ.... மேடத்துக்கு இன்னும் ரோசம் இருக்கு போல கலா வராதது ஒருவகையில் நல்லதுதான் இன்னைக்கு ப்ரியா ரெண்டு வேலை பார்க்க முடிஞ்சுது இல்லன்னா வெட்டியா கதை பேசிட்டுதான் இருப்போம். என நினைத்துக்கொண்டே சமைக்கத் தொடங்கினாள். வெளியே யாரோ வந்திருப்பது போல தோன்ற எட்டிப்பார்த்தாள் கலா வந்து அங்கே ஓரமாக உட்கார்ந்தாள் சுதாதான் பேச்சை தொடங்கினாள். என்ன கலா இன்னைக்கு லீவு போட்டுட்டே... அடுத்த மாசம் எக்ஸ்சாம் வருதான் ரம்யா அக்கா எக்ஸ்சாம் பீஸ் நாளைக்கு கொண்டு வர சொன்னாங்க உங்கம்மாகிட்ட சொல்லிரு. இவ்வளவு நேரம் காணும் எங்க போனே..."

              ம்... இப்பாவது உனக்கு கேட்கனும் தோணுச்சே... நானும் நீ எங்க வீட்டுக்கு  வருவே வருவேன்னு பார்த்தேன் நீ எட்டிக்கூட பார்க்கலையே... நான் செத்துப் போனா கூட வரமாட்டே போலிருக்கே... அதான் உனக்கு புதுசா ப்ரண்ட் கிடைச்சாச்சே... எங்களையெல்லாம் ஞாபகம் இருக்குமா என்ன என் மனசுதான் கேட்கவே மாட்டேங்குது இருந்திருந்து பார்த்துட்டு ஓடி வந்துட்டேன் எங்கே அது பேச்சுக்குரல் கேட்டுச்சே வந்துச்சா... ம்.. வராம இருக்காதே என படபடவென பொரிந்து தள்ளினாள்.

              "சரி கலா அதை விடு நமக்கு இன்னும் ஒரு வாரத்தில் ப்ளஸ் டூ ரிசல்ட் வருதாம் ரொம்பவே பயமா இருக்கு நான் மீனாட்சி சந்திரசேகரன் காலேஜ்ல சேரப்போறேன் நீ எங்க படிக்கப் போறே..,"

             "எங்கம்மாகிட்ட நீ பேசுறீயா என்னை மேல படிக்க வைக்காது போல அதான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு..."

                 "சரி.. ரிசல்ட் வரட்டும் பேசிப் பார்ப்போம் அப்படி படிக்க வைக்கலன்னா கவலைப்படாதே என்ன.. கரஸ்சுல மேல படிக்கலாம் பீஸ் கம்மியாதான் வரும் வீட்டில் இருந்தே படிக்கலாம் நிறைய பேர் அப்படிதான் படிக்கிறாங்க நம்ம டீச்சர் கூட அப்படிதானே படிச்சதா சொன்னாங்க " என்று கலாவை ஆறுதல் படுத்தினாள் சுதா.

               நாட்கள் வாராமானது எதிர்பார்த்த ரிசல்ட்டும் வந்தது இருவருமே தேர்ச்சி பெற்று இருந்தனர். கலாவைவிட எழுபதைந்து மார்க் அதிகம் பெற்றிருந்தாள் சுதா. அதுக்கே கலாவின் அம்மா கலாவை திட்டி தீர்த்தார். சுதாவிற்கு மனசுக்குள் பெரிய சந்தோஷம் என்னவென்றால் கலாவைவிட எல்லா பாடத்திலும் அதிமாக மார்க் எடுத்ததுதான் அதிலும் ஒரு டீச்சர் எப்பவும் கலாவுக்கு அதிகமாகவே மார்க் போடுவாங்க ஆனால் பப்ளிக் எக்ஸ்சாமில் அந்த டீச்சர் பேப்பர் திருத்தவில்லை அதான் சுதாவுக்கு அதிக மார்க் கிடைத்து இருந்தது. மொத்த மதிப்பெண்கள்  எதிர்பார்த்தது வரவில்லை என்ற வருத்தம் இருந்தது க்ளாசில் மூன்றாவது மாணவியாக ஓரிரு மார்க் வித்தியாசத்தில் வந்ததது மிகவும் வருத்தமாகதான் இருந்தது. அப்புறம் சுதா மேலே படிக்க கல்லூரியில் சேர்ந்தாள் கலா வீட்டில் இருந்தாள் அவங்க அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்கவே இல்லை. தனியார் காலேஜ்ல சேர்க்க அவ்வளவு பணத்திற்கு எங்கே போவதென்று மறுத்துவிட்டார். கூடாவே சுதா அம்மாவிடம் வந்து எதுக்கு உங்க சுதாவை படிக்க வைக்கிறீங்க அந்த பணத்தை சேர்த்து வைச்சா கல்யாணம் பண்ணலாம். உங்கப்பொண்ணு போறான்னு இவளும் படிக்கப் போறேன்னு அழுறா நம்ம தகுதிக்கு முடியுமா? படிச்சு என்ன பண்ண போறா கடைசியில எவன் வீட்டிலையோ பானையும் சட்டியும்தானே கழுவ போறதுன்னு சுதா அம்மாவின் மனசை கலைக்கப் பார்தார். ஆனால் சுதா பிடிவாதமாக மறுத்து நான் படிச்சே தீருவேன்னு ஒத்தகாலில் நின்னு காலேஜ்சில் சேர்ந்துவிட்டாள். கூடவே டைப்ரைட்டிங் கிளாஸ்சுக்கும் போய் தேர்வெழுதி தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றார். கலா இரண்டிலும் தோல்வியுற்றாள் அதன் பிறகு மேற்கொண்டு படிக்க அனுப்பவில்லை. கலா கொஞ்ச நாள் உம்மென்று இருந்தது பிறகு நாட்கள் செல்ல செல்ல  ஒருவழியா சமாதானம் ஆகிவிட்டது. சுதா கல்லூரிக்கு போகும் போது தன்னோட சேமிப்பில் இருந்து தினமும் கலா காசு கொடுத்தனுப்பும் ஏதாவது வாங்கிக்க என்று அதை சுதா என்ன செய்வாள் வள்ளி தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி கலாவுக்கு தெரியாமல் கொடுத்து வந்தாள் சுதா.


                சுதாவுக்கு மதியம் வரைதான் காலேஜ் இரண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடுவாள். வீட்டுக்கும் போது கலா அங்கே இருப்பாள் சுதாவின் துணிகளை எல்லாம் அழகாக மடித்து வைத்திருப்பாள் சுதாவின் அம்மா இதெல்லாம் ஏன் கலா நீ செய்யுறேன்னு கேட்டால் "சும்மா இருங்கக்கா இதில் என்ன இருக்கு சுதா காலேஜ்க்கு போகுது பாவம்  நான் சும்மா தானே இருக்கேன்னு" சொல்லி எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்வாள் அந்தளவிற்கு கலாவுக்கு அளவில்லாத பாசம். ஒவ்வொரு புதுப்படம் வந்ததும் படம் பார்க்க சென்று விடுவார்கள் அதே போல் கோவில் குளம் எல்லாம் இடங்களுக்கும் இணை பிரியாமல் சென்றார்கள். ஆனால் அவர்கள் நட்பில் இவ்வளவு சீக்கிரம் பிரிவு வருமென்று இருவரும் எதிர்பார்க்கவில்லை.

                 கலா வேகமாக சுதா வீட்டிற்கு வந்தாள் சுதா அப்போதுதான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உட்கார்ந்திருந்தாள். "என்ன கலா இவ்வளவு வேகமா வர்றே..."

               "என்னைய நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்களாம்.." தரையை பார்த்து குனிந்தபடி சொன்னாள்.

                "ஏ.. என்ன சொல்றே நிஜமாவா..?"

                "ஆமா.. நாளைக்கு நான் எங்க மாமா வீட்டுக்கு போறேன் அங்க வைச்சு பேசி முடிக்கிறாங்களாம் "கொஞ்சம் வெட்கம் கலந்து சொன்னாள்.

                 சுதாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது இத்தனை நாள் கூடவே இருந்த போது தெரியல இப்ப ஏதோ ஒன்றை இழந்த உணர்வு ஏற்பட்டது அதைக் காட்டிக்கொள்ளாமல்.. நீ மாப்பிள்ளைய பார்த்தியா உனக்கு பிடிச்சிருக்கா?

              "மாப்பிள்ளைய நான் பார்க்கல ஆனால் என்னைய அவங்க பார்த்து இருக்காங்களாம். அவர் சென்னையில் இருக்கார் அவரோட மாமாதான் எல்லாம் எடுத்துச்சொல்லி பேசி முடிச்சாறாம்.காலையில் அவர் எங்காத்துக்கு வந்து விவரமா சொன்னார்..."

                "நீ அதுக்கு என்ன சொன்னே.."

               "நான் என்ன சொல்ல முடியும் அவங்க இஷ்டம்னு சொல்லிட்டேன்.."

               "எ...ன்...ன...து ஓகே சொல்லிட்டியா..."

              "ஆமா மேல படிக்கவும் வைக்கல அப்புறம் நாம எதுக்கு வெட்டியா வீட்டுல உட்கார்ந்து தெண்டமா.. இருக்கனும் சொல்லு.."

               சுதா அதிர்ச்சியாக பார்த்தாள் அவளால் நம்ப கூட முடியவில்லை கலாவா இப்படி பேசுதுன்னு.. "கல்யாணத்துக்கு ரொம்ப செலவாகுமே நகையெல்லாம் நிறைய போடனுமே..."

             "அதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களே பார்த்துப்பாங்களாம் ஒரு நகையும் வேண்டாம்மாம் அவங்களே நகை போட்டு கட்டிட்டு போறாங்களாம் கல்யாண செலவு கூட அவங்களே பார்த்துகிறாங்களாம் அதான் நானும் ஓகே சொல்லிட்டேன்.."

                "ஏ... லூசு மாதிரி உளறாதே இந்த காலத்தில் யாராவது எதுவும் வேணான்னு சொல்வாங்களா..? அவங்க சென்னையின்னு வேற சொல்றே உன்னை ஏமாத்திட போறாங்க இல்ல அவருக்கு ஏதாவது பிரச்சினை இருக்கப் போகுது இவ்வளவு தூரத்தில வந்து பார்க்கிறது ரொம்ப கஷ்டம் நல்லா யோசித்து முடிவு பண்ணிக்க சொல்லிட்டேன் உன்னோட நல்லதுக்குதான் சொல்றேன் அப்புறம் உன்னோட இஷ்டம்.."

            "பார்ப்போம் நாளைக்குத்தான் எல்லாம் தெரியும்.."

            "உன்னை பயமுறுத்த நான் இதை சொல்லல ஏன்னா பத்திரிக்கை நியூஸ்ல எல்லாம் இப்ப இப்படிதான் ஏமாற்றி கல்யாணம் பண்றதா சொல்றாங்க அதுக்குதான் பயமா இருக்கு உங்கம்மா சொல்றாங்கன்னு நீ யோசிக்காம முடிவு எடுக்காதே.."

                இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே வள்ளி வந்தாள். "என்ன ரெண்டு பேரும் தீவிராம எதையோ பேசிட்டு இருக்கிறீங்க.."

              "கலாவுக்கு கல்யாணமாம் நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்களாம் அதான் பேசிட்டு இருக்கோம்.." சுதா சொன்னாள்.

            "அடடடே.... நல்ல விஷயம்தான் என்ன கலா உனக்கு மாப்பிள்ளை பிடிச்சுருக்கா.. மாப்பிள்ளை என்ன செய்யுறார்.." அடுக்கடுக்காய் கேள்வி கேட்டாள்.

             "கலாவிற்கு வெட்கம் தாங்கவில்லை சிரித்தபடியே சொன்னாள் சொந்த ஊர் திரு்ச்சியாம் ரொம்ப வருஷத்திற்கு முன்னாடியே சென்னைக்கு போய்ட்டாங்களாம். மாப்பிள்ளைக்கு ஒரு தங்கச்சியும் அண்ணனுமாம் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணியாச்சு நல்ல வசதியாம் நல்ல குடும்பமாம் ஒரு பிரச்சினையும் வராதுன்னு அவங்க மாமா வந்து சொல்லிட்டு போனார். நானும் சம்மதம் சொல்லிட்டேன்.."

             "சரி..சரி.. நல்ல முடிவுதான் எடுத்திருக்கே வீட்டில் இருந்து என்ன செய்யப்போறே... அவங்களும் வரதட்சணை எதுவும் வேண்டாம்னு வேற சொல்றாங்க அப்புறம் இதைவிட வேற நல்ல சம்மந்தம் கிடைக்காது அதோட முதல் வரன் வேண்டாம்னு மறுத்தா அப்புறம் தள்ளிட்டே போகும்.. இப்ப கல்யாண கலை வந்திருச்சே... "என்று சொல்லி சிரித்தாள் வள்ளி.

                  ஆனால் சுதாவுக்கோ பெரிய கவலை ஏற்பட்டது கல்யாணம் ஆகிவிட்டால் கலா தூரமா போயிடும் இல்ல அடிக்கடி என்னையே சுத்திட்டு இருக்கும் இப்ப அங்கே போயிட்டால் நாம பார்க்க முடியாது பேச முடியாதே சென்னைக்கு போறதுக்கு ஒரு நாள் ஆகும். அப்படி இப்படி என்று மனசுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடியது..

               சுதாவின் சிந்தனையை கலைத்தது வள்ளியின் குரல்.. "என்ன சுதா இப்பவே உனக்கு கவலை வந்திருச்சு போல என்ன பண்றது பொண்ணுன்னா ரொம்ப நாளைக்கு ஒரே இடத்தில இருக்க முடியாது நாளை உனக்கும் இதே நிலைதான் இதான் வாழ்க்கை.." என்றாள் வள்ளி.

             "அட நீங்க வேற நான் கல்யாணமெல்லாம் பண்ணிக்க மாட்டேன்.. எங்கம்மாவை விட்டு நான் போகமாட்டேன்.."

              "சும்மா.. உளறாதே.. அப்படியெல்லாம் பெண்கள் இருக்க முடியாது நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க அதோட அம்மா எத்தனை காலத்துக்கு உன் கூட இருக்க முடியும் உனக்குன்னு ஒரு துணை வேண்டாம்மா.. இப்ப இப்படி சொல்ற நாளைக்கு பாரு இடுப்புல ஒன்னு கையில ஒன்னு இருக்கும்.. என்ன கலா நான் சொல்றது சரிதானே.. "

                 இல்லக்கா சுதா ஸ்கூல்ல படிக்கும் போதும் அப்படிதான் சொல்லிட்டு இருக்கும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் ஆசிரமம் வைக்கப்போறேன்னு சொல்லும்.. சத்தியம் கூட பண்ணிருக்கு.."

             "ஏய்.. கலா சொல்றது எல்லாம் உண்மையா நீ ஏதோ விளையாட்டுத்தனமா சொல்றேன்னு நினைச்சேன் சீரியஸ்சாவே முடிவே பண்ணிட்டியா..." நம்ப முடியாம கேட்டாள் வள்ளி.

                "ஆமா.. கலா சொல்றது உண்மைதான் எனக்கு கல்யாணம் பண்றதுல்ல விருப்பம் இல்ல ஏனோ பிடிக்கல ஒரு ஆசிரமம் வைக்கனும்னு எனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கு கல்யாணம் பண்ணி சராசரி பொண்ணா வாழ எனக்கு விருப்பம் இல்ல ஏதாவது வித்தியாசமா செய்யனும். மத்தங்க செய்யுற ஒன்னு நாம செய்யக்கூடாது. பேப்பர்ல நிறைய கட்டிங்ஸ் வைச்சிருக்கேன் பாருங்க ஆசிரமங்கள் பத்தின டீட்டல்ஸ்தான் அங்கே போய் சேர எனக்கு ஆசை  ஆனால் கொஞ்சம் பயமா இருக்கு அதெல்லாம் நம்பிக்கையா இருக்குமான்னு தெரியல... நேத்துக்கூட ஒரு ஆசிரமத்தில் சாமியார் ஏதோ தப்பா நடந்துகிட்டாருன்னு போலிஸ் கைது பண்ணியிருக்காமே அதை நினைச்சா பக்னு இருக்கு " ஏதெதோ சொல்லிக்கொண்டே போனாள் சுதா.

              வள்ளிக்கு நம்பவே முடியவில்லை சுதாவின் மனசுக்குள் இப்படி ஒரு எண்ணம் இருக்குமென்று. ஏனெனில் அதே மனநிலையில்தான் கிட்டதட்ட வள்ளியும் இருக்கிறாள். "சுதா அப்ப நானும் உன் கூட வர்றேன் ரெண்டு பேரும் சேர்ந்தே போவோம் சாரதா சக்தி பீடத்தில் ஏற்கனவே நான் ரெண்டு அப்ளிக்கேஷன் வாங்கி வைச்சிருக்கேன். நீ எப்ப போறியோ அப்ப என்னையும் கூப்பிடு என்னடி சிரிக்கிற நிஜமாதான் சொல்றேன் பொய்யில்லை அந்த அப்ளிக்கேஷன் வீட்டுல இருக்கு நாளைக்கு எடுத்துட்டு வர்றேன்.. என்றாள்

               " நீங்க ஏன் வர்றீங்க நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிகோங்க அம்மாகிட்ட சொல்லி மாப்பிள்ளை பார்க்க சொல்லியிருக்கேன்.."

                 "இனிமே அதைபத்தி பேசாதே இனிமே எனக்கு அது வேண்டாம் நான் இப்பதான் நிம்மதியா இருக்கேன்... அது போதும் எனக்கு ஆளைவிடு.. பண்ண வேண்டிய நீயே வேண்டாம்னு சொல்றே இதில் நான் வேற பண்ணிக்கனும்மா அடி வாங்கப் போறே பாரு... நீ அம்மாவை மிரட்டிட்டு உன் இஷ்டத்துக்கு முடிவெடுக்கிற நீ சரிபட்டு வரமாட்டே.. இப்ப எனக்கு நேரம் இல்ல இரு.. இரு நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன்" என்றபடி ஹாஸ்பிட்டலுக்கு ஓடினாள் வள்ளி. கலாவும் நானும் போறேன் என்றபடி சென்றாள்.

               வள்ளியின் சின்ன மிரட்டல் செல்ல கோபம் சுதாவுக்கு கொஞ்சம் பிடித்து போனது எப்போதும் நமக்கு பிடித்தவர்கள் செல்லமாக திட்டுவதோ அடிப்பதோ பிடிக்கும் உள்ளுக்குள் ரசிப்போம் அதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. அப்படிதான் சுதாவுக்கும் இருந்தது.  வள்ளிக்கு எந்தளவிற்கு சுதா மீது பாசம் என்று கணிக்க முடியவில்லை ஏனெனில் வள்ளி ஒரு புரியாத புதிராக இருந்தாள் கலகலவென்று பேசுவாள், மனதில் உள்ள கஷ்டங்களை பகிர்ந்துகொள்வாள், எந்த கூச்சமும் இன்றி வீட்டில் ஒருவர் வந்து சாப்பிடுவாள் ஒரு நாள் கூட பேசாமல் இருக்க மாட்டாள் இதெல்லாம் வைத்து பாசமென்றோ அன்பென்றோ நினைக்க முடியவில்லை சுதாவுக்கு சிலரை ஈசியாக புரிந்துகொள்ள முடியும் கலாவை இவளால் புரிந்து கொள்ள முடிந்தது ஆனால் வள்ளியை அந்தளவுக்கு புரிந்துகொள்ள சுதாவுக்கு கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது. இருந்த போதிலும் வள்ளியின் மீது ஏதோ ஈர்ப்பு இருந்தது. எதுவும் நம் கூட இருந்தால் நாம் அதை கண்டுகொள்ளமாட்டோம் கொஞ்சம் தூரத்தில் இருந்தால் அது நமக்கு ஒரு ஆவலை ஏற்படுத்தும் அந்த ஒரு விடையம் தான் இவர்கள் மூவரிடம் இருந்தது.

                 மறுநாள் மாலை கலா ரொம்ப சந்தோஷமாக வந்தாள்.. "என்ன கலா ரொம்ப ஹேப்பியா இருக்கே.. என்ன செட் ஆகிருச்சா மாப்பிள்ளை போட்டோ பார்த்தியா..? எப்படி இருக்கார் போட்டோ இருக்கா எங்கே காட்டு என்று ஆவலாக கேட்டாள்" வராத சந்தோஷத்தை வரவழைத்துக்கொண்டு.

              "ம்.. பார்த்தேன்... வீட்டில் எல்லோருக்கும் பிடிச்சிருக்கும் நானும் ஓகே சொல்லிட்டேன்.. இந்தா போட்டோ பாரு"

                 "சுதா அவளிடம் இருந்த போட்டோவை பக்கென்ற மனதோடு வாங்கி மெல்ல திருப்பி பார்த்தாள்.. அப்படியே ஷாக் ஆகிப்போனாள்.. போட்டோவில் மாப்பிள்ளை நீளமான முடியோடு பெரிய கொண்டை போட்டு இருந்தார் முகத்தில் அடர்ந்தாடி நிறமும் கருப்பு.. கலாவைவிட வயது அதிகம் பதினைந்து இருபது வயது அதிகம் போல் இருந்தது.. சுதாவுக்கு பார்த்த உடனே பிடிக்கவில்லை அதே முகச்சுழிப்போடு "என்ன கலா போட்டோவை பார்த்தும்மா நீ ஓகே சொன்னே.. "

              "ஆமா.. எதுவுமே வேணான்னு சொல்றாங்க எங்கூட போன்ல பேசினார் நல்லாதான் பேசுறார்"

                 "அவருக்கு ரொம்ப வயசு கூடின மாதிரி இருக்கு இநஹத போட்டோ கூட இப்ப எடுத்தது கிடையாது பழைய போட்டோ மாதிரி இருக்கு உனக்கு இப்ப பதினெட்டு வயசுதான் ஆகுது நீ அவர் பக்கத்துல கொசு மாதிரி நிற்பே.. அதோட அவர் கருப்பு வேற டோட்டலா அவரு பாக்கிஸ்தான் தீவிரவாதி மாதிரியே இருக்கார்... உனக்கு நிஜமாவே பிடிச்சு இருக்கா"

                 " ம்.. பிடிச்சுருக்கு உருவம் கருப்பா இருந்தா என்ன உள்ளம்தான் கருப்பா இருக்க கூடாது.."

                  "ஏய்... கலா நீயா இப்படி பேசுறே ரொம்ப தெளிவா பேசுறே... முன்னாடி நான் வெள்ளைக் காக்கா மல்லாக்க பறக்குதுன்னு சொன்னா நம்பி வானத்தை பார்ப்பை இப்ப ம்.. ரொம்ப மாறிட்டே கலா.. உங்கம்மா உன்னை பேசி.. பேசி மாற்றி இருக்காங்க சரி அது உன் விருப்பம்.. "என்றாள் மனம் சோர்ந்து.

               "ஏன் உனக்கு பிடிக்கலையா... "

                " எனக்கு பிடிச்சா என்ன பிடிக்கலன்னா என்ன உனக்கு பிடிச்சிருக்கில்ல.."

                   " அவருக்கு நம்மளபத்தி நிறைய தெரிஞ்சு இருக்கு நம்ம ரெண்டு பேரும் திக் ப்ரண்ஸ்னும் நான் எப்போதும் உங்க வீட்டுலதான் இருப்பேன்னும் அவருக்கு தெரியுமாம் ஒரு நாள் நம்ம ரெண்டு பேரையும் பார்த்து இருக்கார்.. இன்னும் நிறைய விஷயம் சொல்றார் .. நான் அப்படியே அதிர்ச்சியாயிட்டேன் அவர் சொல்ல.. சொல்ல.. "

                " நம்பள பத்தி அவருக்கு எப்படி தெரியும்' வியப்பா கேட்டாள் சுதா.

                 " அவரோட மாமாதான் எல்லாவற்றையும் சொல்லி இருக்கார் அதிலே அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சாம் அப்புறம் உன் பேரைக்கூட அவர் கரெக்டா சொல்றார் தெரியுமா? "

                      " சரி கலா உனக்கு பிடிச்சிருக்கில்ல அது போதும் பரவாயில்லையே ரொம்ப நேரம் பேசி இருக்குறீங்க போல.."

         "ஆமா ரொம்ப நேரம் பேசினார் அவருக்கு வர ரொம்ப ஆசையாம் ஆனால் லீவு கிடைக்கலையாம் அதான் வரமுடியலை உன்னை பார்க்க முடியலையேன்னு ரொம்ப வருத்தப்பட்டார்.." என்றாள் சிரித்தபடி

            " ஓ.... அந்தளவுக்கு வந்தாச்சா... சரி எப்ப கல்யாணம்... இப்பவே கனவு காண ஆரம்பிச்சிட்டே போலிருக்கே.." என்று கிண்டலடித்தாள்.

              "அடுத்த மாசம் தை கடைசில கல்யாணம் வைச்சு இருக்காங்க நீ கண்டிப்பா வரணும்.."

                 "ம்.... அப்ப பார்ப்போம்.. " என்றாள் சலிப்போடு.

                 சுதாவுக்கு இப்போது ரொம்ப மனசுக்குள் வருத்தம் ஏனெனில் கலாவிடம் அவள் அன்பை காட்டியது இல்லை எங்கே போனாலும் சேர்ந்தே போவது வருவது இணைபிரியாத வண்டி மாடு மாதிரி திரிந்தவர்கள் நிறைய பேர் கேட்டு இருக்கிறார்கள் ஒரே மாதிரி ட்ரெஸ் எங்கே போனாலும் ஒன்னாவே அப்படியே ஒரே ஆளை கல்யாணம் பண்ணிக்கோங்க என்று கிண்டலடித்தும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் சுதாவுக்கு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை சும்மா சிரித்துவிட்டு வந்திருக்கிறாள். இப்போது ஏனோ சுதாவுக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது அதை வெளியே காட்டிக்கொள்ளவும் முடியவில்லை. இது கலா மீதுள்ள அன்பா இல்லை இனிமே அது இங்கே இருக்காது அது கூட சண்டை போட முடியாது,  கதை பேச முடியாது என்ற கவலையா தெரியவில்லை ஆனால் சொல்ல முடியாத வருத்தம் சுதைவை வாட்டியது என்னவோ உண்மை. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தாள் சுதா எப்போதும் எதையும் காட்டிக்கொண்டது இல்லை எல்லாவற்றையும் மனதில் போட்டு பூட்டி வைக்கும் ரகம் இவள் கூட இருப்பவர்கள் கூட இவள் மனதில் என்ன உள்ளது என்பது அறிவது கஷ்டம். அந்தளவிற்கு ஊமைக்கொட்டான் வெளியே சிரித்து பேசுவாள் தான் இருக்கும் இடத்தில் எல்லோரையும் சிரிக்க வைப்பாள் ஆனால் அவளின் கஷ்டத்தை யாரிடமும் காட்டிக்கொள்ள மாட்டாள் முதலில் எந்த விஷயத்தையும் எத்தனை நெருக்கமாக பழகினாலும் பகிர்ந்துகொள்ள மாட்டாள். இவள் ஒரு தனி ரகம் ஆனால் இவளிடம் யார் ஒரு நொடி பேசினாலும் முதல் சந்திப்பிலே ஒன்றுவிடாமல் சொல்லிவிடுவார்கள். ஆனால் இவள் மனதில் என்ன ஆசை இருக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு யாருக்கும் தெரியாது இவளும் சொல்ல மாட்டாள் யாரும் இவளிடம் கேட்டதும் இல்லை.

                கலா கல்யாண கனவுகளில் மூழ்கத்தொடங்கினால் சுதாவோ கவலையில் மூழ்கத்தொடங்கினாள். கல்யாண வேலைகளில் கலா அங்குமிங்கும் போக வேண்டிய சூழ்நிலை சொந்தகாரங்க வீட்டுக்கு விருந்துக்கு போவது அப்படி இப்படி என்று கலாவின் வருகை குறைந்து போனது சுதாவுக்கு ஒரு பெரிய இழப்பாக இருந்தது கூடவே இருந்துவரை எதுவும் தெரியவில்லை இப்போது இவளுக்கு மனசு வலிக்கிறது. என்ன செய்வது எல்லாமே சில காலம் தான் எதுவும் நிரந்தரமில்லை என்று அவள் உணர்ந்திருந்த போதும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

               சுதாவின் அம்மா கலாவிடம் சொன்னாள்.. "கலா உனக்கு கல்யாணம்னு சொன்னவுடனே இதுக்கு ரொம்ப கவலை நீ போன பிறகு இதுக்குதான் கஷ்டமா இருக்கப் போகுது நீ அங்கே போனதும் எங்களை மறந்திறாதே.." என்றார்.

                "அட போங்கக்கா... நீங்க வேணா நான் இல்லன்னு கவலைப்படுவீங்க ஆனால் உங்க பொண்ணு என்னை நினைச்சுக்கூட பார்க்காது ரொம்ப சந்தோஷமா இருக்கும்.. நான் இல்லன்னா என்ன அதுக்குத்தான் புது ப்ரண்ட் கிடைச்சாச்சே... அப்புறம் என்ன என்றாள் நக்கலாக சுதாவின் மனதை புரிந்துகொள்ளாமலே. நாட்கள் நெருங்கியது கல்யாண நாளும் வந்தது சுதாவால் திருமணத்திற்கு போக முடியவில்லை கலாவின் திருமணத்தின் அன்று சுதாவுக்கு யுனிவர்சிட்டி எக்ஸ்சாம் அவளால் போக முடியவில்லை. அது கலாவுக்கு பெரிய வருத்தமாக இருந்தது இரவுதான் கலாவை பார்த்தாள் ஏனோ கலாவை கண்டதும் மனதில் உள்ளவை கண்ணீரா பெருக்கெடுத்தது. கலாவின் மாமியார் வந்தது கலாவோட ப்ரண்ட் எங்கே அவா வந்திருக்கிறதா சொன்னாங்களே என்று தேடிக்கொண்டு வந்தார். நீ தான் அவளோட ப்ரண்டா கல்யாணத்துக்கூட வரமுடியாத ப்ரண்ட் என்ன ப்ரண்ட் என்றார். அவரின் மாமியார் அவரை போல் இல்ல நல்ல நிறமா நல்ல அழகோடு இருந்தார். சுதாவுக்கு அவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை அப்போது கலாவின் அம்மாதான் வந்து சமாளித்தார். அவளுக்கு இன்னைக்கு ரொம்ப முக்கியமான பரிட்சையாம் லீவு போட முடியாதாம் அதான் அவ வரல என்று சமாளித்தார். சிறிது நேரம் கலாவோடு பேசிட்டு இருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் சுதா.

                 கலாவை அதன் பிறகு சுதா பார்க்கவே இல்லை கடிதங்கள் மட்டும் அவ்வப்போது வரும். அதில் அவளின் கணவர் பற்றி நல்லவிதமாக விவரமாக எழுந்தியிருந்தாள். சுதாவுக்கும் அப்போதுதான் நிம்மதியானது அவர் ரொம்ப நல்லவர் என்பதை அவளின் கடிதம்  உணர்த்தியது ஆளைப் பார்த்து தவறாக எடைப்போட்டு விட்டோம் என்று மனதிற்குள் வருந்தினாள் சுதா. அதன் பிறகு கலாவை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போனாள் ஆனால் கலா மறக்கவில்லை. கலாவின் பிரிவை வள்ளி ஈடு செய்தாள் சுதாவுக்கு வள்ளியின் மீது அதிகம் பிரியம் ஏற்பட்டது சில நாட்கள் வள்ளி சுதாவின் வீட்டிலே தங்கினாள். வள்ளிக்கு கொஞ்சம் பாசம் இருந்தது ஆனால் அதை அவ்வளவாக காட்டிக்கொள்ள மாட்டாள். கலா போன பிறகு விடுமுறை நாட்களில் வள்ளியும் சுதாவும் கோவிலுக்கு போவதற்கும் சினிமாவுக்கு கிளிம்பிடுவார்கள் . இப்படியே இவர்களின் நட்பு சந்தோஷமாக சென்றது ஒரு நாள் பேசிக்கொண்டு இருக்கும் போது வள்ளி சொன்ன வார்த்தை சுதாவின் மனதை என்னவோ செய்தது.. கார்த்திகை மாதம் நல்ல மழை பெய்தது புயலும் வீச போவதாக சொன்னார்கள். அப்போ வள்ளி சொன்னாள் " சுதா நீ வா நம்ம வீட்டுக்கு போவோம் இல்லன்னா நான் அம்மாவை இங்க கூட்டிட்டு வந்துர்றேன் புயலும் வெள்ளமும் வரப் போறாத சொல்றாங்க நாம எல்லோரும் ஒரே இடத்தில் இருந்து செத்துவோம் என்றாள். அந்த வார்த்தையை சுதா சற்றும் எதிர்பார்க்கவில்லை வள்ளியா இப்படி சொல்வது என ஆச்சரியப்பட்டு போனாள். ஏனெனில் வள்ளியின் பேச்சில் அன்போ பாசமோ தெரியாது. இப்போது வள்ளி அப்படி சொன்னதும். சுதாவுக்கு உள்ளுக்குள் பயங்கர சந்தோஷம் கூடவே இன்னும் அதீத அன்பு கூடியது நாட்களும் இனிமையாக சென்றது.

              சுதா காலேஜ் விட்டு வந்ததும் சாப்பிட்டுவிட்டு ரேடியோவை எடுத்து வைத்தாள் இன்று என்ன கிழமை வெள்ளி ஓ... இன்று முத்தையா ஜெகன் மோகன் வருவாரே என நினைத்தப்படி ரேடியோவை ஆன் செய்தாள். அவளுக்கு பிடித்த அறிவிப்பாளர் அன்று கடமையில் அவளால் நம்ம முடியவில்லை சந்தோஷம் தாங்க முடியவில்லை ஏனெனில் இந்த நிகழ்ச்சி அவர் வருவதில்லை. ஆனால் முதல் முறையாக வருகிறார்.. கூடவே ஒரு அறிவிப்பும் செய்தார் அதைக்கேட்டு இன்னும் சந்தோஷத்தில் குதித்தாள். காரணம் மூன்று மாதங்களுக்கு பிறகு அவள் எழுதி அனுப்பிய பிரதி அவருக்கு அறிவிப்பாளரின் கையில் சந்தோஷத்திற்கு சொல்லவா வேண்டும். உடனே கேசட்டை தேடி எடுத்தாள் ரெக்கார்டு பட்டனை அழுத்திவிட்டு காதை இரண்டையும் இரு கைகளால் பொத்திக்கொண்டாள் 3.30 க்கு நேயர் அரங்கம் அதன் பிரத்தியேக ஓசையோடும் தொடங்கியது. சுதாவின் மனசு படபடவென்று அடித்தது சிறு நடுக்கம் வேறு வந்து கொண்டே இருந்தது. இடையிடையே கைகளை லேசாக எடுத்து.. எடுத்து.. காதை மூடிக்கொண்டாள்.. அவளுக்கே ஏனோ வெட்கமும் கூச்சமும் வந்தது. தான் எழுதியதை தானே எப்படி கேட்பது என்ற ஒரு கூச்சம்.. நேயர் அரங்கத்தை அந்த அறிவிப்பாளர் மிக அழகாக வாசித்தார் அந்த பிரதிக்கு அவரின் குரல் உயிர் கொடுத்தது.. இடையிடையே அவர் பாராட்டவும் செய்தார் சுதா அப்படியே மெய் மறந்து போனாள். நாம் உண்மையிலே நன்றாக எழுதியிருக்கிறோமா.. அவளாலே நம்ம முடியவில்லை.. நேயர் அரங்கம் சிறப்பாக முடிந்தது. அதையே நினைத்து சந்தோஷப்பட்டாள் உடனே பேப்பர் பேனாவை எடுத்து அந்த அறிவிப்பாளருக்கு நன்றி சொல்லி கடிதம் எழுதினாள். இதுநாள் வரை எப்படி எழுதுவது எதை வைத்து அவருக்கு கடிதம் எழுதுவது என்ற ஒரு தயக்கம் இருந்தது ஆனால் இப்போது இந்த நேயர் அரங்கத்தை சாக்காக வைத்து எழுதலாமே என்று துணிந்து எழுதினாள். அப்போது சுதாவுக்கு தெரியாது அது தொடர்கதையாக தொடரப்போகுதென்று....

                                   
நட்பென்று வந்து விட்டால் என்ன வேண்டுமென்றாலும் செய்ய தூண்டு் இல்லையா என்னதான் நம் உறவுகள் இருந்தாலும் நண்பர்கள் கூட பேசுவது, அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுப்பது, அவர்களுக்காக காத்திருப்பது வரவில்லை என்றால் கோபப்படுவது, சண்டை போடுவது, கொஞ்ச நேரம் பேசாமல் இருப்பது பிறகு எதுவுமே நடக்காதது போல் பேசுவது இது எல்லாமே நட்பில் மட்டும்தான் முடியும். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை எல்லா உறவுமே நட்பில் மொத்தமாக ஒருவரிடம் அடங்கிவிடுகிறது அதனால்தான் ஒவ்வொருக்கும் நட்பென்றால் ஒரு தனி பிரியம் ஏற்படுகிறதோ என்னவோ. கலா சுதாவை விட்டு பிரிந்த பிறகு வள்ளி மட்டுமே சுதாவின் இதயத்தில் முழுமையாக இடம் பிடித்திருந்தாள். வள்ளிக்கா என்ன வேண்டுமென்றாலும் செய்ய காத்திருந்தாள். சமையலில் தொடங்கி டிரெஸ் வரை அவளுக்காக பார்த்து பார்த்து செய்து அழகு பார்த்தாள் சுதா.

             இவையெல்லாம் வள்ளி எப்படி உணர்வாளோ தெரியாது ஆனால் சாதரணமாகவே இருப்பாள். ஆனால் சுதாவோ வள்ளி  எப்போ வீட்டுக்கு வருவாள் என எதிர்பார்க்கும் அளவிற்கு வந்துவிட்டாள். கல்லூரி விடுமுறை நாட்கள் சுதாவுக்கு செம்ம போரிங்கா இருக்கும் இன்றும் கல்லூரி விடுமுறை நாட்கள்தான் வள்ளி வருமா.. வருமா என்று வாசலையே எட்டி.. எட்டி பார்த்துக்கொண்டு இருந்தாள் சுதா.. வள்ளி வருவது போல் தெரியவில்லை சரி கொஞ்ச நேரம் தூங்கலாம் என நினைத்தப்படி போய் படுத்தாள்.. சிறிது நேரத்திலே சுதாவின் மனதின் எதிர்பார்ப்போ என்னவோ இவள் நினைத்தபடியே வள்ளி வந்தாள் தூரத்தில் வரும் போதே அவளின் குரல் கேட்டது. சுதா தூங்குவது போல் கண்ணை மூடிக்கொண்டு படித்திருந்தாள். வள்ளி வீட்டுக்குள் வந்ததும் "என்னடி தூக்கமா.. எப்பா பார்த்தாலும் தூங்கிட்டே இரு வர வர நீ ரொம்ப மோசமாயிட்டே அம்மா...எங்க காணும் அவங்கிட்ட சொல்லி உன்னைய நல்லா மிதிக்க சொல்லனும் அப்பதான் நீ சரிப்பட்டு வருவே... "என்றபடி தான் கொண்டு வந்த ஒரு பேக்கை டக்கென்று தரையில் போட்டாள்..

             சுதா இப்பதான் கண்விழித்தது போல் சீன் போட்டபடி எழுந்தாள்.. "இப்ப என்னாச்சு.. நான் இப்பதான் படுத்தேன் அது பொறுக்காதே உங்களுக்கு நீங்க மட்டும் என்ன ஹாஸ்பிட்டலில் ஒரு வேலை கூட வர்றதே இரண்டு மூனு பேருதான் தான் அதுக்கு ஒரு டாக்டர் ஒரு நர்ஸ் நீங்கள் என்னவோ எனக்கு நர்ஸ் மாதிரி தெரியலை ரெகுலர் பேஷண்ட் மாதிரிதான் தெரியுது..." என்று சிரித்தாள்.

             "நீ... இப்படி சொல்லிட்டு இரு..உனக்கு வாய் மட்டும் இல்லன்னா உன்னால பொழைக்க முடியாது. இந்த வாய வைச்சுகிட்டுதானே எல்லாரையும் மிரட்டிக்கிட்டு இருக்கே உனக்கு இருக்கு வா.. " என்று சிரித்தபடியே அங்கே சமைத்து வைத்ததை எல்லாம் திறந்து பார்த்து ஆராய்ந்து விட்டாள் வள்ளி.

               "சரி..சரி.. நீங்க சாப்பிடுங்க நீங்க வருவிங்கன்னுதான் மீன் குழம்பு வைச்சேன். அதிலே வறுத்த மீனும் முட்டையும் இருக்கு பாருங்க.."

              "பார்த்தேன்.. பார்த்தேன்... நீ ஒன்னும் கவலைப்படாதே நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன்.. என்றபடி தட்டை எடுத்து எல்லாவற்றையும் எடுத்து வைத்து சாப்பிடத் தொடங்கினாள். ஆயி மொட்டை அம்மா இதெல்லாம் காலையிலையே வாங்கி கொடுத்திருச்சா... என்றாள்.

           "ஆமா.. "

             "சரி அந்த பேக்கை எடுத்துப் பாரு.."

           "என்ன இருக்கு... என்றபடி எடுத்தாள்  உள்ளே வெறும் போஸ்ட் கார்டு சுதாவுக்கு கண்கள் ஆச்சரியத்தில்  விரிந்தது. அந்த கூடையை அப்படியே கொட்டினாள் ஐம்பதுக்கு மேற்பட்ட கடிதங்கள் சிதறி விழுந்தன. அதை அவள் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தாள் தனக்கு தானே சிரித்துக்கொண்டாள்.. சில கடிதங்கள் பாராட்டி எழுதப்பட்டு இருந்தது சிலது தங்கை, மகள், ப்ரண்டு என்று உறவுகள் முறைகளில் சில கடிதங்கள் ஒரு இரண்டு கடிதம் மட்டும் லவ் லெட்டர் போல இருந்தது. கவிதை வடிவில் ஒருவன் தன் காதலை சொல்லியிருந்தான் சுதா படித்துவிட்டு ஹா..ஹா.. என்று விழுந்து விழுந்து சிரித்தாள்.

             "என்னடி சிரிக்கிறே... அதுல ஒருத்தன் பாரு என்ன எழுதியிருக்கான்னு என்னனவோ எழுதியிருக்காண்டி.. அதில் வேதாரண்யத்தில் இருந்து ஒருத்தர் எழுதியிருக்கிறார் பார் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஊருக்குள்ள நமக்கு பெரிய பேரா போச்சு.. போஸ்ட் மேன் டெய்லி கட்டு கட்டா லெட்டர் கொண்டு வர்றார். அவர் வேற கிண்டல் பண்றார் வள்ளி எழுத்தாளராயிட்டு ரேடியோவில் அது எழுதுதுன்னு ஒரே பாராட்டு மழை தான். நீ இதை எப்ப எழுதினேன் என் கிட்ட சொல்லி ஒரு வார்த்தை இருக்கலாம் இல்ல எல்லாரும் என்கிட்ட கேட்டாங்க எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, ஒருவழியா பேசி சமாளிச்சேன். இங்க பாரு இதுக்கெல்லாம் நீயே பதில் கடிதம் எழுதிப்போட்டுரு அதிலே போஸ்ட் கார்டு வாங்கிட்டு வந்திருக்கேன் எனக்கு ஒன்னும் தெரியாது சொல்லிட்டேன். ஏய்.. நீ எழுதன வைச்சு நான் யாரையோ காதலிக்கிறேன்னு நினைக்கப்போறாங்க. என்றாள் சிரித்தபடி.

           " உங்களுக்கு சப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன் அதான் சொல்லல. நான் எழுதினேன்னு சொல்லாதீங்க நீங்க எழுதியதாவே இருக்கட்டும். சரி.. சரி.. அதையும் நாங்களே எழுதி பதில் கடிதமும் நாங்களே எழுதனுமா இது ரொம்ப நல்லா இருக்கே .. என்றாள் சுதா.

           " நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் எழுதினேன்னு தான் சொல்லியிருக்கேன் எனக்கு மட்டும்தானே தெரியும் நீ எழுதினதுன்னு அம்மா நினைச்சிட்டு இருக்கு நான் தான் எழுதினேன்னு ஹா..ஹா. என்று சிரித்தவள் அப்புறம் நல்லா சூப்பரா உனக்கு என்ன தோணுதோ எழுதிப்போட்டுரு. நீதானே அதை எழுதினே அப்ப உனக்குதானே அதுக்கு சரியா பதில் எழுத முடியும். நான் ஸ்கூல்ல படிக்கும் போது கவிதை எழுத சொன்னாங்க நான் என்ன எழுதினேன் தெரியுமா? "தென்னம் ஓலையை போல் நீண்டு இருக்கிறது அவளின் கூந்தல் " என்று எழுதினேன் எல்லோரும் விழுந்து.. விழுந்து சிரிஞ்சாங்க நீயும்...சிரிக்காத மொட்டை என்று தலையை கோணி வெட்கப்பட்டு  சிரித்தாள் வள்ளி.

             "சுதாவோ... கெக்கேபிக்கே... என்று நிறுத்தாமல் சிரித்துக்கொண்டு இருந்தாள். என்னது தென்னம் ஓலையை போல் நீண்டு இருக்கா கூந்தல் எப்படி பச்சை கலரா மாறினுச்சு... நல்ல வேளை நீங்க வேற எதையும் ஒப்புமை படுத்தி எழுதல என்று மீண்டும் சிரித்தாள்.

             "போ... மொட்டை நீ ரொம்ப கிண்டல் பண்ணாதே..உனக்கு தான் எழுத வருதுன்னு என்றாள் தலை சாய்த்து.

            "சரி நான் கிண்டல் பண்ணல நீங்க சாப்பிடுங்க உங்களோடது அனுப்பும் போது என்னோடதும் அனுப்பி வைச்சேன் ஆனால் உங்கள் பெயரில் உள்ளதுதான் முதலில் வந்திருக்கு என்னோடது எப்போ வருமோ தெரியல இந்த வாரம் வருமென்று நினைக்கிறேன். எனக்கு பிடிச்ச அறிவிப்பாளர் கையில் கிடைக்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கல தெரியுமா? நான் நினைச்சமாதிரியே அவங்க வாசித்தது எனக்கு அவ்வளவு சந்தோஷம் நான் எழுதியதைவிட அவங்க அந்த பிரதிக்கு உயிர் கொடுத்ததுதான் சிறப்பு.. என்றாள் பெருமையாக.

          "என்னடி நீ என்னனவோ சொல்றே எனக்கு ஒன்னுமே புரியல நாம எங்க ரேடியோ கேட்கிறோம் அன்னைக்கு நான் வீட்டில் இருந்ததால கேட்டேன். அதுவும் என் அண்ணன் பொண்ணு ஓடிவந்து அத்தை நீ ரேடியோவுக்கு ஏதாவது எழுதினியா உன்னோடது ரேடியோவில் வருது வையின்னு சொன்னா அதன் பிறகுதான் வைச்சேன் நீ சொல்ற மாதிரி எனக்கு ஒன்னும் தெரியல யார் அந்த அறிவிப்பாளர் குரல் நல்லாதான் இருந்துச்சு ஆனால் உன்னை மாதிரி எனக்கு ரசிக்க தெரியல, அப்ப அவங்களுக்கு நன்றி சொல்லி ஒரு லெட்டர் போடு.."

         "அதெல்லாம் எப்பவோ போட்டாச்சு.. அவங்களுக்கு கிடைச்சுதா,  கிடைக்கலையா, பதில் வருமா வராதான்னு ஒன்னும் தெரியல, நம்மள மாதிரி அவங்களுக்கு எத்தனை பேரோ .. ம்.. சரி அப்புறம்.." என்றாள் பெரும்மூச்சு விட்டபடி.

          "அப்புறம் என்ன எல்லாத்தையும் எழுதி போட்டுறு அப்படியே அக்கா பேரூல இன்னொரு ஸ்கிரிப் ரெடி பண்ணிரு ஊருக்குள்ள இப்பவே கேட்க ஆரம்பிச்சுட்டாங்க"

          "அட நீங்க வேற அதெல்லாம் டக்குனு எழுத முடியாது மூடு வரணும்"

          "சரி.. சரி.. யோசிச்சு பொறுமையா எழுது ஒன்னும் அவசரம் இல்ல, சரி நான் போறேன் கலா ஏவாது லெட்டர் போட்டுச்சா?"

           "ம்.. லெட்டர் வந்துச்சு... வளைகாப்பு செய்ய போறாங்களாம் சொன்னுச்சு உங்களையும் கேட்டு எழுதியிருக்கு"

          "சரி நான் போறேன்  பீரோவை திற இந்த ஜாக்கெட்டுக்கு மேட்சா ஒரு புடவை எடு என்றாள். வள்ளி எப்ப வீட்டுக்கு வந்தாலும் இவளிடம் இருந்து ஏதாவது ஒரு புடவை வாங்கி செல்வாள். சுதாவும் கேட்டவுடனே எடுத்து கொடுத்துவிடுவாள். இவள் அவ்வளவாக புடவை கட்டுவது கிடையாது கட்டத்தெரியாது என்பதால் வள்ளியே எல்லா புடவையையும் கட்டி கட்டி வைப்பாள். இப்போதும் அப்படிதான் புடவை கட்டிக்கொண்டு பத்திரமா இரு என்றபடி சென்றாள் வள்ளி.
அதன் பிறகு சுதாவின் நேயர் அரங்கமும் ஒலிபரப்பானது அதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வானொலியில் சுதாவின் நேயர் அரங்கம், கவிதை, சிறுகதை, இலக்கியக்கட்டுரைகள் என வரிசைதாக வந்து கொண்டே இருந்தது. அதே நேரத்தில் வள்ளியும் தன் பெயரிலும் எழுதி தான்னு சொல்லி கேட்கவும் தொடங்கியிருந்தாள். நேயர்களின் பாராட்டு கடிதம் ஒரு போதையை உண்டு பண்ணியிருந்தது வள்ளிக்கு. இப்படி ஒவ்வொரு நாளும் நாட்களை சந்தோஷமகா கழித்தார்கள். அப்படி இப்படி என்று பத்து வருடங்களை கடந்து விட்டது. ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக தூங்கி ஒன்றாக சுற்றி உன் பணம் என் பணம் என்று பிரி்த்து பார்க்காமல் செலவு செய்து, ஒன்றாக சாகவும் முடிவெடுத்தவர்கள். இன்று எங்கோ தூரத்தில் தனித் தனியாக இருக்கிறார்கள்.  வள்ளி வேலையின் காரணமாக வெளிநாடு சென்றாள். சில வருடம் அங்கிருந்துவிட்டு வேலை கஷ்டமென்று மீண்டும் இந்தியாவிற்கு வந்த வள்ளி அவள் வீட்டுக்கூட போகாமல் சுதாவின் வீட்டிற்குதான் வந்தாள். அதன் பிறகு இப்போது வேற ஊரில்  ஹாஸ்பிட்டலில் வேலைக்கு சேர்ந்துவிட்டாள் வள்ளி. இப்போது அவ்வளவாக சுதா வீட்டுக்கு வருவதில்லை நட்புதான் பெரிதென்று நினைத்தாள் சுதா சில நேரம் அம்மா, உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் திருமணம் செய்ய வர்புறுத்தும் போது.. சுதாவுக்கு எப்போதும் வள்ளியின் நினைவே வந்தது. தான் போய் விட்டால் வள்ளியின் நிலை என்னாகும் என நினைத்து அடிக்கடி கவலைப்பட்டாள். சுதாவுக்கு ஏற்கனவே திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்றாலும் இப்போது புதிதாக ஒரு காரணம் கிடைத்தது வள்ளியை நாம் தான் பார்க்க வேண்டும் என்ற பொறுப்பு தனக்கு இருக்கு என்று நினைத்தாள் நம்பினாள். இப்போது சுதா திருமணம் வேண்டாம் என்று மறுப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது. சுதாவுக்கு எப்போதும் தன்னிடம் யாரும் நெருக்கமாக பழகிவிட்டால், அவர்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வாள் எந்த தியாகத்தையும் செய்வாள் சிறுவயதில் இருந்தே நட்புக்கு முக்கியத்துவும் கொடுப்பாள் உறவுகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

           நட்பு நட்பு என்று உயிரா இருந்தவர்கள் இன்று இருவரும் எங்கோ ஒரு மூலையில் பேசிக்கொள்வது கூட கிடையாது. நாட்கள் செல்ல.. செல்ல மனமும் இடைவெளி விட்டே கடந்து வந்துவிட்டது போலும்.  ஆரம்பத்தில் சுதாவுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது மனிதர்கள் எப்படி வேண்டுமென்றாலும் நிறம் மாறலாம் நாம் தான் கவனமாக இருக்க வேண்டுமென்று புரிந்து கொண்டாள். இப்போது கலா அடிக்கடி சொன்ன வாசகம் நினைவு வந்தது 'நீ ரொம்ப நம்பிக்கை வைக்கிற ஒரு நாள் நீ மனம் நொந்து அழுவ அப்ப நான் சொன்னதை நினைச்சு பார்ப்பேன்னு' சொன்ன அந்த வார்த்தை எத்தனை நிஜம் அதுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு நினைச்சோம் ஆனால் நம்மை விட கலா புத்திசாலி நமக்கு தெரியாதது அதுக்கு தெரிஞ்சு இருக்கே என நினைத்து மனசுக்குள் பாராட்டவும் செய்தாள். சுதா பள்ளியில் படிக்கும் போதே ஹாஸ்டலில் தங்கியதால் சுதாவுக்கு நட்பு மட்டுமே முக்கியமாக பட்டது உறவினர்களை விட தன்னிடம் பழகுபவர்களையே உயிராக நினைத்தாள் இது சுதாவின் சுபாவம் இரக்க குணம் அப்படி நினைக்க வைத்தது. ஆனால் கலா போல் ஒரு  உண்மையான தோழி சுதாவுக்கு இனிமே கிடைப்பது கஷ்டம் அதை தான் எப்பவும் மறக்க கூடாது என மனதிற்கு நினைத்துக்கொண்டாள் . கலா சுதா மீது பாசமாகதான் இருந்தாள் சுதாதான் கொஞ்சம் கொஞ்சமாக அவளிடமிருந்து விலகி வந்தாள். கலாவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் சுதாவால் பழையபடி அவளிடம் பேச முடியவில்லை ஏதோ ஒரு திரை விழுந்தது. இரண்டு தோழிகளுக்குள் எப்போதும் திருமணம் ஒரு பிரிவை ஏற்படுத்திவிடுகிறது என்பது உண்மை. சுதாவுக்கு அப்படிதான் ஒரு இடைவெளியை உண்டு பண்ணியது அது ஒரு குடும்பம் ஆகிவிட்டது இனிமே நாம் விலகி இருக்க வேண்டியதுதான் என்று இவளாகவே ஒரு முடிவு எடுத்துக்கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை குறைத்துக்கொண்டால். ஆனால் வள்ளியிடம் இவளாகதானே நட்பு கொண்டாள் கலாவின் சாபமோ இது இத்தனை வருட நினைவுகளை அசை போட்டபடி கண்களில் வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல்  துடைத்தாள் இதழின் ஓரம் ஒரு சிறு புன்னகை அரும்பியது நாம அப்படி இருப்போம் இப்படி இருப்போம், நான் அந்த வேலை செய்வேன் நீ இந்த வேலை செய்யனும் யாரும் நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு நாம வாழ்ந்து காட்டணும் என்று சிநேகிதி படத்தில் வர்ற ஜோதிகா மாதிரி  அன்று பேசிய வார்த்தைகள் காற்றை கிழித்து காதுக்குள் வந்து கிசுகிசுத்தது. அதுதான் அவளின் இந்த குறுநகைக்கு காரணம் எத்தனை கற்பனை உலகத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன்  வெறும் வார்த்தைகள் எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வருமா?  என்னை போன்று ஒரு முட்டாள் இந்த உலகத்தில் இனி யாரும் பிறக்க முடியுமா? எல்லாம் தெரிந்தது போல் பேசி என்ன பயன் துணிச்சலாக முடிவெடுக்க தெரிந்தவளுக்கு சரியான வழியை கண்டு பிடிக்க முடியவில்லையே என மனம் நொந்தபடி  பயணித்தாள் சுதா.

               சென்னையில் இருந்து புறப்பட்ட பேருந்து மன்னார்குடியை தாண்டி  பட்டுக்கோட்டையை நோக்கி விரைந்தது. சுதா பின்னால் திரும்பி பார்த்தாள் பஸ்சில் ஆங்காங்கே சில இடம் காலியாக இருந்தது, தன் அருகே அமா்ந்து பயணித்தவரின் இடமும் காலியாக இருந்தது. தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவரவர் இறங்கி சென்று விட்டார்கள். இவளின் வாழ்க்கையில் வந்த நண்பிகள் போல ஆனால் இவள் மட்டும் இன்னும் பயணித்துக் கொண்டே இருக்கிறாள் தனியாக. இந்த நெடுந்தூர பயணத்தில் அடுத்து இவளோடு யார் பயணிப்பார்களோ....???

                                                                  * முற்றும் *

































No comments:

Post a Comment