Friday 9 May 2014

கனவு மெய்பட வேண்டும்


                     சுந்தரம்பிள்ளை அந்த காலைவேளையில் வேர்க்க விறுவிறுக்க பார்வையை தூரத்தில் போட்டப்படி வாசலுக்கும் வீட்டுக்குமாக நடந்துகொண்டிருந்தார்.

                    அவருக்கு வயது அறுபது இருக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் தான் உயிரோடுஇருக்கும்போதே தன் ஒரே மகளுக்கு திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்று மாப்பிள்ளை தேடிக்கொண்டிருக்கிறார். ஆனால் தகுந்த மணமகன் இதுவரை அமையவில்லை. இப்ப கூட மாப்பிள்ளை வீட்டுக்காரர்களின் வருகைக்காக காத்துகொண்டிருக்கிறார். " பத்துமணிக்கெல்லாம் வறேன்னு சொன்னாங்க இன்னும்வரலேயேன்னு" நினைக்கும்போதே வாசலில் கார் வந்து நின்றது அதிலிருந்து பத்து பேர் வந்து இறங்கினார்கள்.

                  சுந்தரம்பிள்ளை வாய் நிறைய பல்லாக "வாங்க வாங்க எல்லாரும் வாங்க " என சிரித்தப்படியே வரவேற்றார். வந்தவர்களை வீட்டுக்குள் அழைத்து அங்கிருந்த ஷோபாவில் அமர வைத்தார். நேரம் கரைந்து கொண்டிருந்தது அப்ப ஒருத்தர் பொண்ண வரச்சொல்லுங்க என்றார்.


                அப்போது அழகு சிலைப்போல் பாரதி வந்து நின்றாள். மாப்பிள்ளையின் அம்மா தன் மகனிடம் பொண்ண நல்ல பார்த்துக்கடா அப்புறம் நான் சரியா பார்க்கலன்னு சொல்லகூடாது என சொல்லிவிட்டு பெண்ணை ஏற இறங்க பார்த்தவள் "என்னம்மா படிச்சுருக்க, எங்க வேலை பார்க்கிற நல்ல சமைக்கத் தெரியுமா? வேற என்னெல்லாம் தெரியும் ஏன் கேக்குறேன்னா நாலும் தெரிஞ்ச மருமகள் தான் எம்புள்ளைக்கு வேணும்"

                  பாரதி மெல்ல சொன்னாள் "எம்.பில்., முடிச்சுருக்கேன் தனியார் கல்லூரியில்விரிவுரையாளரா இருக்கேன் நல்லா சமைப்பேன் அதை தவிர கவிதை, கட்டுரை எழுதுவேன்"

                 பாரதியின் அப்பா குறுகிட்டு "பாரதி நல்லா பாடவும் செய்வா" இப்ப பாடசொல்லட்டுமா என்றார் பெருமிதத்துடன்.

                "இருக்கட்டும் இருக்கட்டும் அத அப்புறமா கேட்டுக்கலாம் இப்ப மத்த
விஷயமெல்லாம் பேச வேண்டிருக்கே என்றவள் பொண்ண எங்களுக்கு புடிச்சுபோச்சுஎங்களுக்கு இருக்கிறது ஒரே பையன் மாசம் இருபதாயிரம் சம்பாதிக்கிறான் நீங்கஒரு வண்டி வாங்கி கொடுத்திட்டா அவனுக்கு வசதியா இருக்கும். அப்றம்மாப்பிள்ளைக்கு பத்து பவுண் பொண்ணுக்கு முப்பது பவுண் போட்டுறுங்கஐம்பதாயிரம் பணம் கொடுத்திருங்க இது அத்தனைக்கும் ஒத்துகிட்டா கல்யாணம்முடிஞ்ச மாதிரிதான்" என்றாள் தன் கரகரப்பான குரலில்.

                 இவை அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த பாரதிக்கு கோபம் தலைக்கேறியது "அப்பா நான் கொஞ்சம் பேசலாமா..?"

                 சுந்தரம்பிள்ளை "பாரதி எதுவா இருந்தாலும் அப்றமா பேசலாம் இப்ப எதுவும் பேசவேண்டாம்" 

                அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் "பொண்ணு என்ன வருது சொல்லட்டுமே"

                 பாரதி சுற்றி இருந்தவர்களை ஒருமுறை பார்த்துவிட்டு கேட்டாள். "எனக்குஎன்னென்ன தகுதி இருக்குன்னு கேட்டிங்க அதே மாதிரி உங்க பையனுக்கும்என்னென்ன தகுதி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமான்னு" கேட்டாள்.

                  அப்பா இடையில் குறுகிட்டு "பாரதி இப்ப பேசமா இருக்கமாட்டே" என்றார்கடுமையான குரலில்.

                  "இருங்கப்பா... இப்ப நான் பேசலன்னா இனிமே நான் எப்பவும் பேசமுடியாமபோயிரும்"

                   மாப்பிள்ளையின் அம்மா இவள் ஏதோ தகாத வார்த்தையை சொல்லிவிட்டதுபோல் அவளை ஒரு புழுவை பார்ப்பதுபோல் பார்த்தாள்.

                  பாரதி அதை பொருட்படுத்தாமல் மேலும் பேச தொடங்கினாள் "உங்க வீட்டுக்கு மருமகளா வருவதற்கு என்ன தகுதி எதிர்பார்க்கிறிங்களோ அதேபோல நானும் எதிர்பார்க்கிறதுல்ல தவறு இல்லையின்னு நினைக்கிறேன் அதோடு என்னோட கன்டிஷன் ஒன்னு இருக்கு அது என்னன்னா என்னைவிட்டா எங்கப்பாவுக்கு யாருமில்ல
கல்யாணத்துக்கு பிறகு அவர் எங்கூடதான் இருப்பார் இது உங்களுக்கு விருப்பமா இருந்தால் நீங்க கேக்குற வரதட்சனையை நாங்க தர்றோம்." 

                  மாப்பிள்ளையின் அம்மா அங்கே ஓரமா நின்று கொண்டிருந்த தரகரிடம் "என்ன தரகரே பொண்ணு அப்டி இருப்பா இப்டி இருப்பான்னு சொன்னிங்க ஆனா இப்டி துடுக்கா பேசுவான்னு ஒரு வார்த்தை சொல்லலையே..." என்றாள் கோபமாக.

                 சுந்தரம்பிள்ளை "அம்மா அவ சின்ன பொண்ணு இதெல்லாம் பெருசா எடுத்துகாதீங்க" என்றார் பௌவியத்துடன்.

             "இத பாருங்க அடக்கம் ஒடுக்கமான பொண்ணுதான் எங்களுக்கு வேணும் இப்படி எடுத்தெறிஞ்சு பேசுற இந்த பொண்ணு எங்களுக்கு வேண்டாம் நாங்க வர்றோம்" என்றவாறு தன் குண்டான உடம்பை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு நடந்து சென்றாள் மாப்பிள்ளையின் அம்மா.

              அதே சமயத்தில் பாரதி தன்னறைக்கு போக எத்தனித்தவளை அப்பாவின் குரல் தடுத்து நிறுத்தியது. "இதப்பாரு பாரதி உம்மனசுல என்ன நெனச்சுகிட்டு இருக்க இதே மாதிரி நீ பேசினா இந்த ஜென்மத்துல உனக்கு கல்யாணம் நடக்காது. உனக்கு எந்தநேரத்துல பாரதின்னு பேரு வச்சேனோ தெரியல" அப்பாவின் கோபம் வார்த்தையால்வெளிப்பட்டது.

                "அப்பா நீங்க சொன்ன மாதிரி இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்கலன்னாலும்பரவாயில்லை ஆனா வரதட்சனை வாங்குற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்என்றவள் மேலும் தொடர்ந்தாள் எனக்கென்னப்பா குறை நான் நல்லாதானே இருக்கேன்அதோடு கை நிறைய சம்பாதிக்கிறேன் ஏம்பா என்னை விலைபேசி விக்கிறீங்க?"

               "மாட்டை விக்கிறவன் கூட பணத்தை வாங்கிட்டுதான் மாட்டை கொடுக்கிறான் ஆனா நீங்க பொண்ணையும் கொடுத்து சீதனமா பணத்தையும் கொடுக்குறீங்களேப்பா... இதுஎந்த விதத்துல நியாயம். வந்தவங்க என்னோட குணத்தை பார்க்கலப்பா பணத்தைதான் பார்க்குறாங்க அந்த வீட்டுல எப்டிப்பா நான் நிம்மதியா வாழ முடியும்? தயவு செய்து இந்த விஷயத்தில் என்னை கட்டாயப்படுத்தாதிங்கப்பா ப்ளீஸ்..." 

              சுந்தரம்பிள்ளைக்கு தன் மகளை நினைத்து பெருமையாக இருந்தது. அதே நேரத்தில் வேதனையாகவும் இருந்தது அதே வேதனையோடு பேசினார். "என்னவோம்மா உம்மனசுக்கு ஏற்றபடி கணவன் அமைஞ்சா சந்தோஷம்தான்" என்றார் பெருமூச்சு விட்டப்படி.

              "கண்டிப்பா அமையும்பா நான் எப்படி வரதட்சணை கொடுக்கமாட்டேன்னு சொல்றேனோ அதோபோல வாங்கமாட்டேன்னு சொல்றவர் எங்காவது இருப்பார் அப்படி கிடைக்கலன்னா நான் உங்க கூடவே இருந்திடுறேன்பா.." என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள் பாரதி.

               இந்த பாரதியின் கனவு மெய்படவேண்டும்
 
                                                       **முற்றும்**

1 comment: